Monday, June 24, 2019

தேசிய கல்விக் கொள்கை 2019 : சில குறிப்புகள்



முழு வரைவையும் படிக்க : https://bookday.co.in/wp-content/uploads/2019/06/NEP-2019-TAMIL-V01.pdf


(தேசிய கல்விக்கொள்கை வரைவு 2019, பக்கம் 33 மற்றும் 55)

"1 முதல் 5 ஆம் வகுப்புவரையுள்ள குழந்தைகளுக்கு பாடநூலுடன் மொழி மற்றும் கணிதப் பயிற்சி நூல்கள் வழங்கப்பட வேண்டும். குழந்தைகள் தன் சொந்த வேகத்தில் பயிலும் வகையில், வயதிற்கும் வகுப்பிற்கு ஏற்ற படைப்பூக்கம் மிக்க, ஈடுபடுத்தும் திறன்கள் மிக்க ஆக்கப்பூர்வமான வாய்ப்புகள் பயிற்சிப்புத்தகத்தில் உறுதி செய்யப்படல் வேண்டும்.

குழந்தைகளின் மொழிகற்கும் திறமையை உயர்த்த, மழலையர் வகுப்பு அல்லது ஒன்றாம் வகுப்பு முதல் மூன்று அல்லது அதற்கு அதிகமான மொழிகளை அறிமுகப்படுத்த வேண்டும்."

மழலையர் வகுப்பிலிருந்தே மூன்று மொழிகள் என்னும் கொள்கை குழந்தைகளுக்கு கற்றலின் மீது வெறுப்பையே உண்டாக்கிவிடும் ஆபத்து மிக்கவை. ஆரம்பக் கல்வியில் இத்தனை மொழிகள் கற்பிக்கப்படுவது குறித்த முன்னுதாரணங்கள் உலகில் இல்லை. எனவே, இவை குழந்தைகளின் மன வளர்ச்சிக்கும் கற்றலுக்கு எவ்வகையில் துணைபுரியும் என்பதற்கான நடைமுறை முன்னுதாரணங்களும் இல்லை. இத்தனை மொழிகளைக் கற்றபின், அதன் நடைமுறைப் பயன் என்ன என்பது குறித்த கேள்வியும் எழாமல் இல்லை.

பணி நிமித்தம் இடம்பெயர்வுகள் தவிர்க்கப்பட இயலாத காலத்தில் இவை அவசியம் என்று கருதப்படலாம். ஆனால், பணி நிமித்தம் இடம்பெயரும் குழந்தைகள் தாய் மொழியில் கற்பதற்கான வழிவகைகள் இல்லாத சூழலில், இக்கொள்கை அக்குழந்தைகளுக்கே ஆபத்தாக அமையும். இக்கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால், புலம்பெயர்ந்த குழந்தைகளுக்கும், மொழிச்சிறுபான்மையினருக்கும் வீட்டில் பேசும் மொழி ஒன்றாகவும் பயிற்றுமொழி ஒன்றாகவும் அதனுடன் கூடுதல் இரு மொழிகள் என மொத்தம் நன்கு மொழிகள் என அவர்கள் அல்லற்பட வேண்டியிருக்கும்.

மூன்று மொழிகளுக்கான பயிற்சிப்புத்தங்கள் குழந்தைகளின் பணிச்சுமையை மட்டுமல்லாது முதுகுச்சுமையையும் அதிகரிக்கும். பெரும்பான்மை வீட்டுப்பாடங்கள் என்பதால், தாய்மொழி தவிர்த்து வேறுமொழி அறியாத பெற்றோர்கள், பணிக்குச் செல்வோர் போன்றோரின் குழந்தைகளுக்கு இது கூடுதல் சுமை. பெற்றோர்கள் இவற்றின்பொருட்டு தனிப்பயிற்சி நிலையங்களைத் தஞ்சமடைய நேரிடும், இது பெற்றோரின் நிதிச்சுமையையும் அதிகரிக்கும்.

பேச்சிலிருந்து எழுத்திற்கும் மாறும் ஆரம்பக் கல்விக் காலத்தில், அழகிய கையெழுத்து, வீட்டுப்பாடங்கள் அவைகளுக்கான விதவிதமான தண்டனைகள் என ஏற்கனவே நம் பிள்ளைகளின் கண்ணீர்த்துளிகள் நோட்டுப்புத்தகங்களை நனைக்கையில் இக்கொள்கைகள் தேவையா, அதற்கான பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் நம்மிடம் உள்ளனரா என்பது குறித்த ஆய்வுகள் அவசியம்.

இப்போதைய பெற்றோரின் ஆர்வம் பள்ளிகளோ மொழிப்பயிற்சியோ அல்ல, லட்சங்களைக் குடிக்கும் நீட் பயிற்சி மையங்களே என்பது எவ்வளவு கேவலமான நிலை என்பதை வரைவுக்குழு உணரட்டும். குழந்தைகள் முதலில் தன் தாய்மொழியைத் திறம்படக் கற்கட்டும், எழுத்து வடிவம் இல்லாத மொழிச்சிறுபான்மையினர் கற்றல் மொழிக்கு மாறக் கொஞ்சம் காலம் எடுத்துக் கொள்ளட்டும், குறைந்தபட்சம் பத்தாம் வகுப்புவரையாவது தாய்மொழியில் கற்பிக்கும் சுழலும் தாய்மொழிப்பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கட்டும், அவற்றில் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்களுக்கு நம்பிக்கை வளரட்டும், இந்திய ஒன்றியத்தில் ஒருவர் தாய்மொழியைக்கொண்டே எல்லா வசதிகளும் பெரும் வாய்ப்புகள் உருவாக்கப்படட்டும் அதன்பின் நாம் மூன்றாம் நான்காம் மொழிகளைப்பற்றிச் சிந்திக்கலாம்.

============================================================

(தேசிய கல்விக்கொள்கை வரைவு 2019, பக்கம் 56)

"தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் பிற வளர்ந்த நாடுகள் கற்றல் மொழியாக அந்தந்த நட்டு மொழியையே பயன்படுத்தும்போது இந்தியாவில் மட்டும் பெரும்பான்மையோனோர் கற்றல் மொழியாக ஆங்கிலத்தை தேர்வு செய்வது ஏன்? காரணம் வேறொன்றுமல்ல, செல்வச்செழிப்புள்ள இந்தியர்கள் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டதுதான். 15 விழுக்காடு இந்தியர்கள் மட்டுமே ஆங்கிலம் பேசுகிறார்கள், ஆனால் 54 விழுக்காடு இந்தி பேசும் மக்களோடு ஒப்பிடும்போது அவர்கள் சந்தர்ப்பவசமாக பொருளாதாரத்தில் முன்னாளில் இருக்கிறார்கள்."

இந்திய மொழிகளைக் கற்பிக்க வேண்டுமெனத் துவங்கி, பிறகு அங்கிருந்து மும்மொழிக்கொள்கைக்குத் தாவி பிறகு மெதுவாக இந்திக்கான சொருகல் வேலைகளை ஆரம்பிக்கிறார்கள். இந்தியைத் தூக்கிப்பிடிக்க நிபுணர் குழு உருட்டும் புதிய உருட்டு இதுதான். இந்த விகிதாச்சாரக் கணக்குகள், அவர்களின் பொருளாதார நிலைகள் எங்கிருந்து பெறப்பட்டன என்பது தெரியவில்லை. ஒரு வாதத்திற்காவது 85 விழுக்காடு ஆங்கிலம் பேசாத மக்கள் என்று ஒப்பிடப்படாதது ஒன்று போதாதா அவர்களின் குறுகிய, பெரும்பான்மைவாதப் பார்வையை நிரூபிக்க?!
ஆனால், இதன்பொருட்டு நாம் கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்விகள் நிறைய இருக்கின்றன.

1. புதிய கல்விக்கொள்கை வரைவு ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. அதன் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்புகள் பிராந்திய மொழிகளில் இல்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் (இந்திய அளவில் மொழிச்சமவுரிமைக்கான பரப்பியக்கம், தமிழக அளவில் தன்னாட்சித்தமிழகம், பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட கல்வியாளர்கள் கலந்துகொண்ட ஆய்வுக்கூட்டம் ) "பிராந்தியமொழிகளில் வெளியிடப்பட வேண்டும்" என்று எழுந்த கோரிக்கைகளுக்கும் எந்தப்பதிலும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆய்வுக்குழு அதற்கான நடவடிக்கைகளில் இறங்காதது ஏன்?

2. வரைவு பிராந்திய மொழிகளில் / எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளில் இல்லை என்றாலும், அதற்கான மக்களின் கருத்துக்கள் இந்திய மொழிகளில் தெரிவிக்கப்பட்டால் அவை எங்கனம் பரிசீலிக்கப்படும் என்பது குறித்த வழிகாட்டுதல்கள் எங்கேனும் குறிப்பிடப்பட்டுள்ளனவா?

3.வரைவிற்கான பதில்களை ஆங்கிலத்தில் / இந்தியில் மட்டுமே அனுப்ப இயலும் என்பதாகக் கொண்டால் அது அறிக்கை கூறுகிற 15 விழுக்காடு இந்தியர்களுக்கு மட்டுமான அறிக்கையா அல்லது இந்தியுடன் சேர்த்து 69 விழுக்காடு இந்தியர்களுக்கு மட்டுமான அறிக்கையா?

4. "தொழில் கிடைக்க, அதுவும் அத்தொழில்களுக்கும் ஆங்கிலப் புலமைக்கும் தொடர்பில்லாமல் இருந்தாலும் ஆங்கில அறிவைத்தேர்வுக்கான அடிப்படைக் காரணியாகக் கருதுகின்றனர், இதனால் சமூகத்தின் பெரும்பகுதியினர் விளிம்புநிலைக்குத் தள்ளப்படுகின்றனர்" என்றெல்லாம் கூறும் வரைவு, அதே நேரத்தில் ஒன்றிய அரசுப்பணிகளில் இந்தி அறியாததால் பணி வாய்ப்பு மறுக்கப்படுவதை ஏன் பேச மறுக்கிறது?

5.கொள்கை, மொழிச்சமவுரிமையைப் பிரதானமாகக் கொள்கிறது எனக் கொண்டால், ஒன்றிய அரசால் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படுகிற பல்வேறு நுழைவுத்தேர்வுகள் இனிப் பட்டியல் மொழிகளிலும் நடத்தப்படுமா? அவை குறித்த வழிகாட்டுதல்கள் வரைவில் உள்ளனவா?

கல்விக்கொள்கை வரைவை முன்னிறுத்தி, கல்வி, வேலைவாய்ப்பு, அரசமைப்பு என்று எல்லைகளை நீட்டித்து மொழிச்சமவுரிமையையும் பேசவேண்டிய நேரமிது.


1 comment:

  1. Good criticism.I invite for constructive debate for changing the current Macaulay system of education.

    ReplyDelete