Wednesday, February 16, 2022

விவாத களம் - எதிர்வினை

13-02-2022 ஆம் தேதி இந்து தமிழ் திசை நாளிதழில் வெளிவந்த குறிப்பு : விவாத களம்: நீட் சமூகநீதிக்கு ஆதரவானது! - நாராயணன் திருப்பதி 

குறிப்பை நான் அடுத்த தினம் வாசித்தேன், அதற்கான எதிர்வினையை அன்றிரவே அனுப்பி வைத்தேன். அது கீழே.

"நீட் சமூகநீதிக்கு ஆதரவானது" என்கிற தலைப்பில் பாஜக செய்தித் தொடர்பாளர் திரு. நாராயணன் திருப்பதியின் கருத்துக்களைப் படித்தேன். அது தொடர்பாக சிலவற்றைத் தெளிவுபடுத்தலாமென நினைக்கிறேன்.  

 ‘நீட் கட்டாயம் தேவை' என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது உண்மை. அதே நேரத்தில், "ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டுவந்த மருத்துவக் கல்லூரி தகுதித் தேர்வான நீட் தேர்வை ஏன் திரும்பப் பெறக்கூடாது?" என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. நீட் பயிற்சி மையங்களில், பெரும் தொகை வசூலிக்கப்படுவதால் ஏழை மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டுவந்த பல திட்டங்களை தற்போதைய அரசு திரும்பப் பெற்ற நிலையில், ஏன் நீட் தேர்வை மட்டும் திரும்பப் பெறக்கூடாது எனவும் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.[1] 

நீட் வருகைக்கு முன்பு மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் கோழிப்பண்ணைப் பள்ளிகள் ஆதிக்கம் செலுத்தியது எவ்வளவு உண்மையோ, நீட் வருகைக்குப் பின்பு முன்பைவிட அதிக அளவில் அத்தகைய தனியார் பள்ளிகளுடன் நீட் தனிப்பயிற்சி மையங்களும் இணைந்து மருத்துவ மாணவர் சேர்க்கையில் பெரும் சமூக அநீதியை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன என்பதும் உண்மை. எப்படியென்றால் தனியார் பள்ளிகள் நீட் பயிற்சி மையங்களுடன் இணைத்து ஒப்பந்தம் செய்து கொள்வதால் பள்ளி வேலை நாட்களிலும் மாணவர்கள் முழு நேரமும் நீட் பயிற்சி எடுத்துக்கொள்கின்றனர். இத்தகைய மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எழுதத் தேவையான வருகைப்பதிவைப் பள்ளிகள் வழங்குகின்றன. மாணவர்கள் பயிற்சி நேரம், கட்டணத்தைப் பொறுத்து அவர்களை சில்வர், கோல்டு, எமரால்ட், ரூபி எனப் பிரித்துள்ளனர். இது திருவனந்தபுரத்தில் நீட் பயிற்சி மையத்தில் பணியாற்றும் என் நண்பர் கொடுத்த தகவல். 

மேலும் "2021-ல் தமிழகத்தில் அரசு ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த மாணவர்கள் 25,593 பேரில், 10,511(40%) பேர் மட்டுமே பயிற்சி எடுத்ததாகக் குறிப்பிட்டவர்கள், 15,082 மாணவர்கள் பயிற்சி எடுத்ததாகக் குறிப்பிடவில்லை." என்கிற செய்தியை அண்மையில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையும் ட்வீட்டரில் குறிப்பிட்டிருந்தார்.[2] மேற்கோள் காட்டப்படுவது தி இந்து ஆங்கிலப்பதிப்பின் செய்தி. அந்த ஆய்வு தரும் மேலும் சில சதவிகிதக் கணக்குகளைப் பார்க்கலாம். [3] [4]




1. 59% பெயர் எந்தவித தனிப் பயிற்சிக்கும் செல்லவில்லை. அவர்கள் அரசு இட ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பித்த தனியார் பள்ளி மாணவர்கள் எனத் தெரிகிறது. அதே தேர்வுக்கு 7.5% இட ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்த அரசுப் பள்ளி மாணவர்கள் 1806 பேர். 

2. தனிப்பயிற்சி எடுத்தவர்களில் தேர்வானவர்கள் - 98.28% (10331/10511) பேர். தனிப்பயிற்சி எடுக்காமல் தேர்வானவர்கள் - 96.92% (14618/15082) பேர். தனிப்பயிற்சி எடுத்தவர்களுக்குத்தான் தேர்வு சாதகமாக இருக்கிறது. ஆனால் இதிலும் தனிப்பயிற்சி எடுக்காதவர்கள் தனியார் பள்ளிகளில் பயிற்சி எடுக்கவில்லையா என்கிற  கேள்விக்கு விடை தெரியவில்லை.

3. ரிப்பீட்டர்களின் - ஒருமுறைக்கும்மேல் தேர்வு எழுதுபவர்கள் - தரவுக்கு வருவோம். முதலில் இந்த ரிப்பீட்டர்கள் வீட்டிலிருந்து படிப்பவர்களா அல்லது தனிப்பயிற்சி எடுப்பவர்களா என்பது குறித்த தகவல்கள் இல்லை. என்றாலும், ஒரு வருடம் நீட் தேர்விற்காகச் செலவிடும் பொருளாதார வலிமை உள்ளவர்கள் என்பது தெளிவு. தேர்வில் வென்ற 2021 ஆம் கல்வியாண்டு மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் - 96.68% (9976/10318). தேர்வில் வென்ற ரிப்பீட்டர்களின் தேர்ச்சி சதவீதம் - 98.02% (14973/15275). தேர்வு பொருளாதாரத்தில் வலுவுள்ள ரிப்பீட்டர்களுக்கு சாதகமாக இருக்கிறது.

4. அது மட்டுமில்லது 2021 ஆம் கல்வியாண்டு மாணவர்களுடன் (10318) தேர்வு எழுதிய ரிப்பீட்டர்கள் அவர்களைக் காட்டிலும் 1.4 (15275) மடங்கு அதிகம். அவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் 2021 ஆம் கல்வியாண்டு (9976) மாணவர்களைக் காட்டிலும் 1.5 மடங்கு (14973) அதிகம்.

5. தேர்வு எழுதுகிறவர்களில் தமிழ் வழியில் படித்தவர்களைக் காட்டிலும் (2147) ஆங்கில வழியில் படித்தவர்கள் 10.9 (23411) மடங்கு அதிகம். தேர்ச்சி பெறுபவர்களிலும் அதே சதவீதம் (2094/22853) தொடர்கிறது. எனவே நீட் ரிப்பீட்டர்களுக்கும் ஆங்கில வழியில் பயில்பவர்களுக்கும் சாதகமாக இருக்கிறது.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு இன்றைய பாஜக தலைவரும், அன்றைய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டாவின் ஆலோசனைப்படி வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அதே சமயத்தில், அது குடியரசுத்தலைவர் ஒப்புப் பெற தமிழக சட்டமன்றமும் கட்சிகளும் எடுத்த முயற்சிகளையும்  பிற மாநிலங்களில் அத்தகைய சட்ட வழிகள் எதுவும் இல்லை என்பதையும் நினைவுகூர வேண்டும். நீட்டுக்குப் பிறகுதான் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. எனவே நீட்டுக்கு முன்பான அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை, நீட்டிற்குப் பிறகான அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு நீட்டால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அதிகளவில் இடம் கிடைக்கிறது என வாதிடுவது சரியல்ல. [5]

மேலும் முதுகலை மருத்துவப்படிப்பிற்கான ஓபிசி, பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கான இடஒதுக்கீடு பல வருடங்களாக மறுக்கப்பட்டதையும், நடப்பாண்டில் அதை பெற நிகழ்ந்த சட்டப் போராட்டங்களையும் நாம் நினைவுகூரவேண்டும். நீட்டால் 2017-2020 காலகட்டத்தில் இடம் மறுக்கப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மட்டும் 11027 பேர் என்கிறார் அனைத்திந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கூட்டமைப்பின் தலைவர் திரு. கருணாநிதி. இந்த விஷயத்தில் சமூகநீதி  மறுக்கப்பட்டது மறுக்கப்பட்டதுதான், கடந்தகாலத் தவறுக்கான தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை. [6] 

நீட் லஞ்சம், ஊழல் உள்ளிட்ட முறைகேடுகளை ஒழிக்கவில்லை. தேர்வர்களால் மட்டுமல்லாது தேர்வாளர்களாலும் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பான பல வழக்குகள் நீதிமன்றத்திலும், பலர் சிறையிலும் இருப்பதையும் அண்மையில் முதல்வர் தன் சட்டமன்றப் பேச்சில் குறிப்பிட்டுள்ளார். எனவே நீட் களங்கமற்ற தேர்வுமுறையும் அல்ல.

மேலும் நீட் தரம் வாய்ந்த மருத்துவர்களை உருவாக்குகிறது என்கிற கருத்தை நான் மறுக்கிறேன். பனிரெண்டாம் வகுப்புத் தேர்வினடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்தபோது இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்றவர்களே உள்நுழைந்தனர். ஆனால், 2017ஆம் ஆண்டு டைம்ஸ் ஆப் இந்தியா நடத்திய ஆய்வில் நீட் தேர்வில் 720க்கு 150க்கும் கீழான மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்கள் 1990 பேர். அவர்களில் 530 பேர் ஒற்றை இலக்க/பூஜ்ஜிய/புஜ்ஜியத்திற்கும் குறைவான எதிர்க்குறி மதிப்பெண்களை இயற்பியல்/வேதியியல் அல்லது இரு பாடங்களிலும் பெற்றிருந்தனர். [7] 

நீட் சமூகநீதிக்கு ஆதரவானது எனச் செல்லும்முன் அரசுப்பள்ளி-தனியார்பள்ளி, தமிழ்வழி-ஆங்கிலவழி, ஒருமுறை எழுதுபவர்கள்-பலமுறை எழுதுபவர்கள், ஏழைகள்-பணம்படைத்தோர், தனிப்பயிற்சி பெற்றோர்-தனிப்பயிற்சி பெறாதோர் என்ற இருமைகளுக்கிடையில் ஏற்றத்தாழ்வைக் கூட்டுவதையும், மதிப்பெண் வழங்கும் முறையையும், கடந்தகால முறைகேடுகள் தொடர்பான விடையற்ற கேள்விகளையும், சமூகநீதிக்கு எதிராக இருந்ததையும் இருப்பதையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.

சான்றுகள்:




4. இதுபற்றி ட்வீட்டரில் முன்பே எழுதியிருக்கிறேன். https://twitter.com/vjsays_/status/1490735151038406656