Thursday, August 31, 2023

தாதிகளின் கைகள்

மருத்துவமனையில் கிடக்கிற  

என் தோழியை நினைத்துக் கொண்டிருந்தேன்

முன்போர்நாள் நள்ளிரவில்

அங்குதான் நானும் கிடந்தேன்


முகம் மறைத்த தாதி ஒருத்தி 

பெயர் நினைவிலில்லை

கேட்டது எதுவும் தங்கவில்லை

தொட்ட இடத்தில் ரேகைகள் ஒட்டியிருக்கிறது 

பட்டாம்பூச்சியின் சிறகை 

நரம்பில் ஏற்றியதும்

வலிக்கிறதா எனக் கேட்டதும் 

கூடவே தங்கிவிட்டது 


பின்போர்நாள் பல் மருத்துவமனையில்... 

அது வேறொரு உலகம் 

அங்கு எதுவும் கேட்பதில்லை 

இருவர் மூச்சுவிடும் சப்தத்தைத் தவிர 

அங்கு எதுவுமே நடப்பதில்லை 

ஒருவர் இன்னொருவரின் கைக்குள் தன்னை 

முழுமையாக ஒப்படைப்பதைத் தவிர 

அங்கொருத்தி என் முகத்தைப் 

பாந்தமாகக் கைகளில் ஏந்தினாள் 

என் கறைகளைப் புனித நீரால் கழுவினாள் 


நோய்மையின் மீட்சி 

மருந்துகளில் அல்ல 

தாதிகளின் கரங்களில்  

இனி 

உடல் என்னைக் கைவிடுகையில் 

மருத்துவமனைக் கட்டிலில் கிடப்பேன்

காதலிகள் என்னைக் கைவிடுகையில் 

பல் மருத்துவமனைக் கட்டிலில் கிடப்பேன்

தாதிகளின் கைகளுள் கட்டுண்டு கிடப்பேன்.


Tuesday, August 29, 2023

இது முதன்முறை அல்ல

கொஞ்சம் யோசித்துப் பார் விஜயகுமார்

இப்போது நீ எப்படிக் கிடக்கிறாயோ அப்படியே

எத்தனை பேரை நினைத்து உறங்காமல் கிடந்திருக்கிறாய்?!

இடத்தையும் வயதையும் ஆளையும் தவிர எதுதான் மாறியிருக்கிறது?!

இந்த உலகத்தில் நேசிக்க எதுவுமே இல்லாதது போல்

திரும்பத் திரும்ப காதலில் விழுகிறாய்

நீ தவறவிட்ட காதல்கள் எத்தனை

உன்னைத் தவற விட்ட காதல்கள் எத்தனை

நீ பின்தொடர்ந்த எல்லாப் பெண்களும் வேறொருவரோடு போயிருக்கிறார்கள்

உன்னைப் பின்தொடர்ந்த பெண்களைக் காயப்படுத்தியிருக்கிறாய் 

நீ எப்போதுமே முட்டாளாகத்தான் இருந்திருக்கிறாய்

கண்கள் திறக்காத பூனை குட்டிக்கு 

எலும்புத் துண்டுகளை எடுத்துப் போவாய்

நேற்றுப் பார்த்த பெண்ணுக்கு மஞ்சள் கயிறை

போதும் போதும் 

போட்ட விதைகள்  மறுநாள் மலர்ந்தால் 

யார்தான் பயப்படமாட்டார்கள்?