Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Sunday, April 7, 2024

எதிர்வினை - பணமில்லாமல் பணியில்லை

காலச்சுவடு மார்ச் 2024 இதழ் தலையங்கத்திற்கு எழுதிய எதிர்வினை 


காலச்சுவடு மார்ச் இதழின் தலையங்கம் 'பணமில்லாமல் பணியில்லை' வாசித்தேன். சமகால உயர்கல்வித்துறையின் அவல நிலையை மிகச்சிறப்பாகத் தீட்டியிருக்கிறார் ஆசிரியர். அவற்றைக் குற்றம் சுமத்துவதாக அல்லாமல், பயனாளர்களாகிய மாணவர்களின் இடத்திலிருந்து நோக்கி, இச்சீரழிவு தொடர்ந்தால் அது சமூக நீதிக்கும், எதிர்காலத் தலைமுறையினருக்கும் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மிகக்கூரிய சொற்களால் சுட்டிக்காட்டியிருக்கிறார். “குறுக்கு வழியில் பணிக்குவரும் ஒருவர், அறம் சார்ந்த வழிகளை மாணவர்களுக்குப் பரிந்துரைக்க இயலாது. எல்லாம் பணம் தான் என்று சொல்லி கல்வியைத் துச்சமாக நினைக்கும் எண்ணத்தை விதைப்பவர்களாக இருக்கிறார்கள்” என்கிறது தலையங்கம். இது மிகச்சரியான அவதானிப்பு. இந்திய அரசின்கீழ் வரும் அரசுப்பணிகள், கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கைத் தேர்வுகளில் தமிழர்களின் பங்கேற்பு குறைவாக இருப்பதே இதற்குச் சான்று. 

குறுக்கு வழியில் பணிக்கு வரும் இத்தகைய ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்காலத்திற்கே ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள்; திறமையின்மையினால் மட்டுமல்ல, மோசமான குணநலங்களாலும். சாதியால், மதத்தால், தன் அதிகாரத்திற்கு அடிபணியவில்லை என்பதால், கேள்வி கேட்பதால் அத்தகு மாணவர்களின் கல்வியைப் பாழ் செய்வதற்கான அனைத்து உளவியல் வன்முறை நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது, சமவாய்ப்புக் கொடுக்க மறுப்பது, மதிப்பெண்களைக் குறைப்பது, ஆய்வுப் பணிகளுக்கு இடையூறு செய்வது, எதிர்காலத்தில் உனக்குப் பரிந்துரைக் கடிதம் தரமாட்டேன் என்று ஆய்வு மாணவர்களை அடிமை போல் நடத்துவது, எங்கெல்லாம் தன் அதிகாரத்தை பயன்படுத்தி மாணவரை மனம் நோகச் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்வது, இவற்றிற்கும் மேலாக தற்கொலைக்குத் தூண்டுவது. இவற்றுக்கெல்லாம் புற ரீதியான சான்றுகள் கொடுக்க இயலாது என்பதால் குற்றச்சாட்டு எழும்பட்சத்தில் இத்தகு ஆசிரியர்களே சந்தேகத்தின் பலனை அனுபவிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். கொஞ்சம் எண்ணிப்பாருங்கள், உயர்கல்வி நிறுவனத் தற்கொலைகள், பாலியல் அத்துமீறல்களுக்கு இங்கு தண்டனை பெற்றவர் எவர்? எனவே, ஆசிரியர் தேர்வில் ஊழல் என்பது மனிதவளத்திற்கே ஆபத்தான போக்காகும், இக்கயமைத்தனம் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். 

"கடந்த இருபது வருடங்களில் கிட்டத்தட்ட ஒரு பணியிடம்கூடப் பணமில்லாமல் நிரப்பப்படவில்லை என்பதே நிதர்சனம்” என்னும் வரிகள் வெறும் அவதூறு அல்ல. இருபது வருடங்களுக்கு முன் துவங்கிய இந்தச் சீரழிவு இன்னும் நாற்பது வருடங்களுக்கு நம் கல்விச்சூழலை அழிக்கும்; அதிலிருந்து மீள இன்னும் இருபது வருடங்கள் எடுக்கும். தவறுகள் களையப்படவேண்டுமென்றால் அவற்றை ஏற்பதிலிருந்து துவங்க வேண்டும். அந்த வகையில், சமகால உயர்கல்வித்துறை குறித்த, அக்கறை மிகுந்த, மிகத் தைரியமான விமர்சன எழுத்து இந்த இரண்டு பக்கத் தலையங்கம். காலச்சுவடு ஆசிரியர் குழுவுக்கு நன்றி.

கூடவே, நேர்மையாளர் குழு அமைத்து இந்நிலை மாற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறது தலையங்கம். இது குறித்து எனக்குத் தெரிந்த சில பரிந்துரைகளை முன்வைக்கலாம் என நினைக்கிறேன். 


1. கல்வித்துறை குறித்த விமர்சனங்கள் முதலில் உள்ளிருந்து எழ வேண்டும்

சமகாலத்தில் இதைத் தொடர்ந்து செய்பவர் எழுத்தாளர் பெருமாள் முருகன். அதுவும் பணி ஓய்விற்குப் பிறகு கொஞ்சம் சுதந்திரமாகச் செய்ய இயன்றிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால், பணிக்காலத்தில் அவருடைய அதிகாரத்திற்குட்பட்டு சிலர் ஒத்துழைப்புடன் நிறைய மாற்றங்களைச் செய்திருக்கிறார். அருஞ்சொல் இணைய இதழில் தன் அனுபவங்களை எழுதிவரும் அவரின் சமீபத்திய கட்டுரை “ஆசிரியர்களும் கையூட்டும்.” அரசுக்கல்லூரி ஆசிரியர்களின் கள்ளத்தனங்களில் சிலவற்றை அவர் விரிவாகவே பேசி இருக்கிறார்.

கடந்த இருபது வருடங்களாக, எதற்கும் லஞ்சம் ஊழல் என்றிருக்கும் கல்வித்துறை குறித்து உள்ளிருந்து அதிகம் விமர்சனங்கள் எழுந்ததில்லை. பணம் வாங்குவதாகக் குற்றம் சாட்டப்பட்டதாகவோ, பணம் வாங்குகையில் கையும் களவுமாகப் பிடிபட்டுத் தண்டனை பெற்றதாகவோ, ஒருவரும் இல்லாமல் இருப்பதே இத்துறையில் விசிலூதிகள் இல்லை என்பதை அப்பட்டமாகக் காட்டுகிறது. சூழலின் நிலை குறித்த அனாமதேயக் கட்டுரை எழுதக்கூட இங்கு ஆட்கள் இல்லையா அல்லது அவற்றை பதிப்பிக்க, வெளிக்கொணர ஊடகங்கள் இல்லையா எனத் தெரியவில்லை. எல்லோர் கையிலும் ஒளிப்பதிவுக்கருவி, இன்னபிற ஒற்றுக்கருவிகள் எளிதில் கிடைக்கும் காலத்திலும் இதைக் குறித்துக் கட்டுரை எழுதிக்கொண்டிருப்பதும் சூழலின் நிலைக்குச் சான்று.

எனவே, மாணவர்கள், பணி நாடுவோர், கௌரவ விரிவுரையாளர்கள், தனியார் கல்லூரியில் சுரண்டப்படும் ஆசிரியர்கள் அனாமதேயமாகவேனும் தங்கள் அனுபவங்களைப் பொதுவெளியில் வைக்க வேண்டும். தனிநபர் ஊடகமாகும் காலத்தில் இது கடினமும் அல்ல. இவற்றால் பலனடையப் போவது கையூட்டுக் கொடுப்பவர்கள் வாங்குபவர்கள், அல்லாதவர்கள் உள்ளிட்ட எல்லோரின் குழந்தைகளும்தான்.


2. கௌரவ விரிவுரையாளர்களுக்குப் பணி நிரந்தரம் (அ) தனிச் சலுகை சரியல்ல.

உயர்கல்வித்துறையில் நுழைய ஒரு வழிதான் இருக்க வேண்டும். தமிழகத்திலும் கர்நாடகத்திலும் கௌரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடுவதை அடிக்கடி பார்க்கிறேன். கௌரவ விரிவுரையாளர்கள் என்போர் ஒரு குறிப்பிட்ட கல்லூரியிலோ/பல்கலைக்கழகத்திலோ ஆய்வு செய்து அதே இடத்திலேயோ / பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளிலோ பணிக்குச் சேர்ந்திருப்பவர்கள் எனலாம். கௌரவ விரிவுரையாளர்களாவதற்கும் துறையில் உள்ள ஆசிரியர்களுடன் முன்பரிச்சயம், பரிந்துரைகள் போன்ற தகுதிகள் தேவை. ஒரு ஒரே கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் இப்படி அமைப்பிற்குள் பல்கிப் பெருகுவதை ‘கல்வித்துறை உட்பெருக்கம்’ (academic inbreeding) என்கிறோம், இது கல்வித் துறையின் தரத்தைக் குறைக்கும்.  சென்ற வருடம் கௌரவ விரிவுரையாளர்களுக்கு எழுத்துத் தேர்வும் நேர்காணலும் இருந்ததாக அறிகிறேன், அது நல்ல துவக்கமும்கூட. இப்படி உயர்கல்வித் துறையில் நுழையும் ஒருவர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாமல் பணி நிரந்தரம் கோருவது ஏற்புடையது அல்ல. வேலையின்மை, பணி/ஊதியப்பாதுகாப்பு இல்லாத சூழலில், கௌரவ விரிவுரையாளர்கள் இத்தகைய கோரிக்கைகளை அமைப்பாகவோ, அரசியலர் வழியாகவோ எழுப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். 

தற்போது வெளியாகியிருக்கும் அரசுக்கல்லூரி ஆசிரியர்களுக்கான தேர்வுமுறையின் திட்ட வரைவு, மாணவர்களை ஆய்விற்குத் திருப்பும் திறனுடையோரைக் கண்டறியும் நோக்கில்தான் தேர்வுமுறையே நடைமுறைக்கு வருகிறது என்று சொல்கிறது. தேர்வு மதிப்பெண் தவிர்த்து கௌரவ விரிவுரையாளர்களின் அனுபவத்தைப் பொறுத்து சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்கிறது. என்றால், முனைவர் பட்டம் பெற்றவருக்கோ, முனைவர் பட்டத்திற்குப்பின் ஆராய்ச்சித் துறையில் இருக்கும் ஒருவரின் ஆய்வு அனுபவத்திற்கு இத்தேர்வுமுறை வழங்கப்போகும் மதிப்பெண்கள் என்ன? கௌரவ விரிவுரையாளர்களுக்கு மட்டும் எதற்கு சிறப்பு மதிப்பெண்கள்? இதர தனியார்/அரசு உதவி பெரும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் அனுபவம் இவர்களைக் காட்டிலும் எந்த வகையிலும் குறைந்தது அல்ல எனும்போது, கௌரவ விரிவுரையாளர்களுக்கு மட்டும் ஏன் தனிச் சலுகை? கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு இதுபோன்ற  சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதில்லை எனும்போது தமிழ்நாட்டில் மட்டும் எதற்கு வழங்கப்பட வேண்டும்? இத்தகைய சிறப்புச் சலுகைகள் பிற தேர்வர்களுக்குச் செய்யும் அநீதி. 


3. ஆசிரியர் தேர்வு முறை

தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய அளவிலேயே அரசுப் பணிக்கு நேர்முகத் தேர்வு என்ற செய்தி வந்தால் எழும் முதல் கேள்வி: எவர் தேர்வு செய்யப்படுவார் என்பது தீர்மானிக்கப்பட்டு விட்டதா? இரண்டாம் கேள்வி: எவ்வளவு கேட்கிறார்கள்? இத்தகைய பொதுத் தன்மையே இம்முறை சமகால நடைமுறையாக மாறிவிட்டதற்குச் சான்று.

தமிழ்நாடு அரசு நேர்முகத் தேர்வில் இருந்து போட்டித் தேர்விற்கு வந்திருப்பது பாராட்டத்தக்க செய்தி. கொள்குறி வினாக்களுடன் விரிவான பதில் எழுதுதலும் போட்டித் தேர்வில் இருக்கும் என்கிறது அறிவிக்கை. கூடவே, நேர்காணலுக்கு முப்பது மதிப்பெண்கள் என்கிறது. 

நேர்காணலில் முதல் கேள்வி “எவ்வளவு கொடுப்ப?” என்கிற நகைச்சுவை ஆசிரியர் தேர்வுக்கு தயாராபவர்கள் மத்தியில் பிரபலம். ஓரிரு மதிப்பெண்கள் வித்தியாசமே பணி கிடைக்கும் வாய்ப்பைப் பறிக்கும் எனும்போது நேர்காணலுக்கு முப்பது மதிப்பெண்கள் என்பது பெரும் பின்னடைவு. கூடவே, கடந்த இருபது வருடங்களாகப் பணம் கொடுத்துப் பணியில் இருப்பவர்கள் அதிகாரத்தில் இருப்பது நாமறிந்த செய்தி. இவர்கள் அந்த நேர்காணல் மேடையில் இருந்தால் என்னாகும் என்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது.  

அப்படி என்றால் ஒரு கல்லூரி ஆசிரியரை எப்படித் தேர்வு செய்வது?

நமக்கு பதில் சொல்கிறது தேசிய, பிற மாநில தகுதித் தேர்வுகள். தேர்வுகள் கணிப்பொறி முறையில் அல்லது கார்பன் நகல் இணைக்கப்பட்ட ஓஎம்ஆர் முறையில் நடத்தப்பட வேண்டும். தற்போது கணிப்பொறி வழியே நடக்கும் தேசிய தகுதித் தேர்விற்குப் (NET) பின் விடைத்தாளைத் தரவிறக்கிக் கொள்ளும் வசதி உண்டு. ஓஎம்ஆர் (OMR) விடைத்தாள் என்றால் அதன் நகல் கிடைக்கும். இதன் மூலம் தேர்வின் வெளிப்படைத்தன்மையும் அதன்மீதான நம்பிக்கையும் அதிகரிக்கும். சில வருடங்களுக்கு முன்பு ஆசிரியர் தேர்வு வாரியம் பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான தேர்வை நடத்தி, ஓஎம்ஆர் நகல்களை வழங்கியதால்தான் அத்தேர்வில் நடந்த முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, மறுதேர்வு நடந்தது. இந்த நிலையில் கொள்குறி வினாக்களும், விடைத்தாள் நகலுமே தேர்வரைக் காக்கும். உடன், தவறான பதில்களுக்கு எதிர்க்குறி மதிப்பெண்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்.

நேர்காணல் என்ற ஒன்று அவசியம்தானா? 

தேர்வரை மதிப்பிட அவரது கல்வித் தகுதியே போதும்; வேறொருவர் மதிப்பெண் வழங்கத் தேவையில்லை என்கிறது கேரள நடைமுறை. அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு கீழ்க்காணும் பிரிவுகளில் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

i. இளநிலை, முதுநிலைப் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள், முனைவர் பட்டப்படிப்பின் ஆய்வினடிப்படையில் பதிப்பித்த சர்வதேச ஆய்விதழ்கள் மற்றும் புத்தகங்கள், கற்பித்தல் அனுபவம்

ii. எம்ஃபில் பட்டம் மட்டுமெனில் இரண்டு, முனைவர் பட்டம் மட்டுமெனில் நான்கு, இரண்டுமெனில் ஐந்து.

இவற்றுடன் தேர்வு மதிப்பெண்ணையும் சேர்த்து, தர வரிசை தயாரித்து பணியமர்த்துகிறார்கள். 

ஒருவரின் ஆய்வு அனுபவத்தையும் கற்பித்தல் அனுபவத்திற்கு இணையாகக் கருத வேண்டும் என்கிறது பல்கலைக்கழக மானிய குழு. ஆசிரியர் தேர்வு வாரியம் இவற்றைக் குறித்தும் சிந்திக்க வேண்டும்.


4. அரசு உதவி பெறும் கல்லூரிகள் 

இந்திய ஒன்றியம் எங்கும் உயர் கல்வித்துறையின் சீரழிவைத் துவங்கி வைத்தது இவர்களே. அரசால் ஒதுக்கப்பட்ட பணியிடங்களுக்கு நேர்காணல்கள் நடத்துகிறேன் என்கிற பெயரில் பணவேட்டை நடத்துவது, தகுதியற்ற உறவினர்களை, வாரிசுகளைப் பணியில் அமர்த்துவது, நேர்காணலுக்கு வந்திருப்பவர்களை நிராகரிப்பதற்கான காரணம் இதுவென்று புதுப்புது வழிகளில் அவமானப்படுத்துவது, என சிலவற்றை சொல்லலாம். தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் பணியின் சந்தை மதிப்பு அறுபது லட்சங்களுக்கும் மேல். சொந்த மதம்/சாதி/உறவினர் எனில் தள்ளுபடி உண்டு. ரொக்கமாகக் கொடுக்க இயலாதவர்களுக்கு வாங்கிக் கடன் ஏற்பாடு செய்யப்படுகிறது, அல்லது சம்பளத்தேதியில் நேரடியாகப் பிடித்தம் செய்துகொள்ளப்படுவதும் உண்டு. 

அரசால் நிதி வழங்கப்பட்டு அரசால் ஊதியம் வழங்கப்படும் ஆசிரியர்களை அரசே பணியமர்த்துவதுதானே நியாயம். இந்த எளிய உண்மையை ஏற்றுக் கொள்வதில் யாருக்கும் வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. அப்படி இருக்கையில் தலையங்கம் சொல்வதைப் போல அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் பணி நியமனங்கள் போட்டித் தேர்வுகளால் மட்டுமே நிரப்பப்பட வேண்டும்; எதிர்வரும் தேர்வு முதலே இம்முறை நடைமுறைக்கு வர வேண்டும். 

இப்போதும் அரசு உதவி பெரும் கல்வி நிறுவன ஆசிரியர்கள் பதவி உயர்வு, பிற பணப்பலன்கள் கிடைக்கத் தாமதமாவதாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இம்முறை நடைமுறைக்கு வந்தால், அரசு உதவி பெரும் கல்வி நிறுவன ஆசிரியர்கள் என்னும் வகைமையே இல்லாமல் போவதால் அனைத்து ஆசிரியர்களும் சமமாக நடத்தப்படும் வாய்ப்பே அதிகம். 


5. தனியார் கல்வி நிலையங்கள் சட்டத்தால் முறைப்படுத்தப்பட வேண்டும்.

அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்களில் வேலைக்கு சேரும் ஆசிரியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு என்பதோ, கௌரவமான ஊதியம் என்பதோ இல்லை. இதனால் ஆசிரியர் பயிற்சி / முனைவர் பட்டத்தை விரும்பிப் பெற்றவர்கள் குடும்பச்சூழலால் ஆசிரியர் பணியைக் கைவிடுகிறார்கள். இதன் உப விழைவு தகுதியற்றோர் அவ்விடங்களை நிறைக்கிறார்கள். மாதம் பதினைந்தாயிரம் கேட்கும் ஒருவரைவிட, பத்தாயிரத்திற்கு பணி செய்ய தயாரென இருக்கும் ஒருவரே பெரும்பாலான தனியார் கல்வி நிறுவங்களின் தேர்வு. ஆனால் கடுமையாகச் சுரண்டப்படுபவர்களும் அவர்களே. தனியார் கல்வி நிறுவனங்கள் பெருகும் சூழலில் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்காதவரை திறனுள்ள ஆசிரியர்களின் வரத்து நிகழப்போவதில்லை. 

கோவிட் காலத்தில் ஊதியமும் குறைக்கப்பட்டு, கணினி-இணைய-மின்சாரச் செலவுகளைத் தாங்களே ஏற்று வகுப்பும் எடுத்துக் கொடுத்த ஆசிரியர்களுக்கு கடனே மிஞ்சியது. கோவிட் காலத்தில் ஊதியம் இன்றி பனைமரம் ஏறி உயிரிழந்த ஆசிரியரையும் நாம் கண்டோம். இது மட்டுமில்லாமல் விடுப்பு, வேலையில் இருந்து விடுப்பு என்கிற அடிப்படை தொழிலாளர் உரிமைகூடப் பெரும்பாலான தனியார் கல்வி ஆசிரியர்களுக்கு இல்லை. தன் உரிமைக்கே போராடும் நிலையிலிருப்பவர்கள் அல்லது அடிமையாய் இருப்பவர்களால் சுதந்திர சிந்தனையுள்ள கல்விச்சூழலை உருவாக்க இயலாது.

இந்நிலை களைய தனியார் கல்வி நிறுவனங்களை முறைப்படுத்தும் சட்டம் இயற்றப்பட வேண்டும். இந்திய ஒன்றியத்தில் இது புதிதும் அல்ல அண்டை மாநிலமான கேரளம் 2021 ஆம் ஆண்டு அத்தகைய ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது. Kerala Self Financing College Teaching and Non-teaching Employees (Appointment and Conditions of Service Ordinance, 2021 (38 of 2021). அதன் வழிகாட்டல்கள் பின்வருமாறு: 

i.      காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு நேர்காணலுக்குப் பின் தரவரிசை வெளியிடப்பட வேண்டும். தெரிவு செய்தவர்களைப் பற்றிய தகவல்களை பல்கலைக்கழகத்தால் நிர்ணயிக்கப்பட்ட அலுவலருக்கு எழுத்து மூலம் தெரிவித்த பின் பணியமர்த்தப்படல் வேண்டும். 

ii.      பணியமர்த்தல் மற்றும் பணி ஓய்விற்கான வயது வரம்பினை அந்தந்தக் கல்வி நிறுவனங்களே நிர்ணயிக்கலாம். 

iii.      பணியாளர்கள் சேர்ப்பு, வருகைப்பதிவு, அவர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கான பதிவேடுகள் வைக்கப்படவேண்டும். அவை குறித்த தகவல்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். 

iv.      பணி, பணி மூப்பு, பணி உயர்வு, பணிக் காலம், ஊதியம், ஊதிய உயர்வு, கூடுதல் பணி நேரத்திற்கான ஊதியம் குறித்த தகவல்களைக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு தரப்பிலும் கையெழுத்திடப்பட வேண்டும். இதனுடன் தொழிலாளர் நலுனுக்கென வேறேதும் அம்சங்கள் இருந்தாலும் சேர்த்துக்கொள்ளலாம்.  

v.      வேலை நேரம் மற்றும் நாட்கள், சம்பளத்துடன்கூடிய விடுப்பு, பேறுகால விடுப்பு போன்றவை அரசுக் கல்லூரி ஊழியர்களுக்கு உள்ளதைப் போலவே தொடரவேண்டும். 

vi.      ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தில் பயனாளராகச் சேர்க்கப்படல் வேண்டும். தொழிலாளர் வைப்பு நிதிக் கணக்கு துவங்கப்பட வேண்டும். 

vii.      பணியாளர்கள் மீதான ஒழுங்கு மீறல் நடவடிக்கைகளை அந்தந்த கல்வி நிறுவனங்களே எடுக்கலாம். பணியாளர் தனக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாய் உணர்ந்தால் பல்கலைக்கழகத்தில் மேல்முறையீடு செய்யலாம். 

viii.      பணியாளர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் பல்கலைக்கழக நிர்வாகத்தால் வரையறுக்கப்பட வேண்டும். நல்நோக்கத்துடன் வரையறுக்கப்படும் இவ்விதிகளுக்கு எதிராக பல்கலைக்கழகத் துணைவேந்தர்மீதோ, அலுவலர்கள்மீதோ எவ்விதச் சட்ட முன்னகர்வும் ஊக்குவிக்கப்படக் கூடாது. 

ix.      கல்வி நிறுவனங்கள் கீழ்க்கண்ட அமைப்புகளை நிறுவ வேண்டும். 

·        கல்லூரி நிலைக்குழு

·        அக தர நிர்ணயக் குழு

·        பெற்றோர் ஆசிரியர் கழகம்

·        மாணவர் குறைதீர்ப்பு மையம்

·        பாலியல் தொல்லைத் தடுப்பு மற்றும் விசாரணை  மையம் 

இவற்றுடன் வேறு சிலவற்றைச் சேர்ப்பதைக் குறித்தும் சிந்திக்கலாம்: பணிச்சேர்க்கையின்போது ஒப்படைக்கப்படவேண்டிய ஆவணங்கள், வேற்றிட நேர்முகத்தேர்வுகளுக்குச் செல்லும்போது தடையில்லாச் சான்று தேவையாயிருப்பின் அதைப்பெறுவதற்கான வழிமுறைகள், இடைக்காலத்தில் பணி விடுவிப்பு வேண்டுமென்றால் அதற்கான வழிமுறைகள் என. இவற்றை மாதிரியாகக்கொண்டு தமிழ்நாடு அரசு கல்வியாளர்கள், தனியார் கல்வி நிர்வாகத்தினர், ஆசிரியர் அமைப்புகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

-------------------------------------

(காலச்சுவடு ஏப்ரல் 2024 இதழில் வெளியானது உள்ளிருந்து எழும் குரல்


Monday, February 12, 2024

எதிர்வினை - ஆசிரியர்களும் கையூட்டும்

அருஞ்சொல் இதழில் எழுத்தாளர் பெருமாள் முருகனின் ஆசிரியர்களும் கையூட்டும் என்கிற கட்டுரை வாசித்தேன். பேராசிரியர் பெருமாள் முருகன் துரோகி அல்ல, பேராசிரியர் என்னும் பதவிக்கு மிகச்சரியான நியாயம் செய்கிறார். இதைச்சொல்ல நிகழ்காலத்தில் மட்டுமல்ல, எக்காலத்திலும் அறம் வழுவாத வாழ்வை வாழ்ந்திருக்கிறேன் என்கிற நிமிர்வும், நெஞ்சுரமும் வேண்டும்; மிகத் தைரியமான பணி. வெளியிடும் அருஞ்சொல்லும் பாராட்டுக்குரியது.

கல்வித்துறையில் நிகழும் இத்தகைய ஒழுங்கீன நடவடிக்கைளை வெளியில் இருக்கும் வேலை தேடுவோர் அல்லது பாதிக்கப்பட்டோர் பேசுவதற்கும் ஒரு கல்லூரிப் பேராசிரியர்/முதல்வர் பேசுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. பின்னவர் தகுதி பற்றிக் கேள்விகள் எழாது. ஆனால், அதைச் சொல்வதற்கான தகுதி சிலருக்கே உண்டு. இல்லையென்றால் இத்தகு விஷயத்தை சூழலுக்கு உள்ளிருந்து நாம் பொதுவெளியில் இறுதியாகக் கண்டது எப்போது? பேராசிரியரைத் துரோகி என்றழைப்பதற்குக் காரணம் என்ன? ஆசிரியர்கள் என்னும் பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார் என்பதாலா? இது உள்ளிருந்து எழும் உண்மை என்பதாலா? அரசதிகாரமும் கல்வித்துறையும் இணையும் புள்ளியில் இதற்கு மேலும் கையூட்டுகள் புழக்கத்தில் உண்டு என்பதாலா?

கொஞ்சம் விரிவாகவே பேசுவோம், இது இந்திய மாநிலம் எதற்கும் பொருந்தக் கூடியது. 

1. உதவிப் பேராசிரியர் பணி நியமனம் 

கல்லூரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பத் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று சென்ற வருடம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது; அதற்கு முன் நேர்முகத்தேர்வுதான்‌. நேர்முகத்தேர்வுகள் எப்படியெல்லாம் நடக்கும் என்பது அங்கு சென்று வந்தவர்களைக் கேட்டால் உதவிப்பேராசிரியர் பணியின் சந்தை மதிப்புத் தெரியும்.

கேரளத்தில் அரசு உதவி பெரும் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான சந்தை மதிப்பு நாற்பது இலட்சங்கள்; அரசு உதவி பெரும் கல்லூரிகளில் அறுபது இலட்சத்திற்கும் மேல். மதம்/சாதியைப் பொறுத்து தள்ளுபடியும் உண்டு. சமூக மதிப்பு, பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட மதிப்புறு பலன்களால், வங்கியில் நிரந்தர வைப்புத்தொகையாய் வைப்பதைக்காட்டிலும், தொழில் தொடங்குவதைக்காட்டிலும் சிறந்த திட்டமாய் இது கருதப்படுகிறது. ஆசிரியர் பணியிலிருப்பவருக்குத் திருமணச் சந்தையில் நல்ல விலை உண்டு, போட்டதில் பாதியை வரணிடம் வசூலிக்கலாம் என்கிற எதிர்கால நலத்திட்டங்களையும் உள்ளடக்கியதே ஆசிரியர் பணியின் சந்தை விலை.

இதை விமர்சித்து 2022-இல் கேரள முன்னாள் சட்ட அமைச்சர் ஏ கே பாலன் அரசு உதவிபெறும் பள்ளி/கல்லூரிகளின் ஆசிரியர் பணியிடங்களையும் அரசு நுழைவுத்தேர்வைக் கொண்டே நிரப்பவேண்டும் என்றார். [1] அதற்கு அந்நிறுவங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதே ஒழிய, வேலை தேடுவோர், ஆசிரியர் பயிற்சி எடுத்துக்கொள்வோர், முனைவர் பட்ட மாணவர்கள், பலகைக்கழக மாணவர்கள், மாணவர் அரசியல் அமைப்புகளிடமிருந்து இருந்து ஆதரவோ எதிர்ப்போ இல்லை. 

தமிழ்நாட்டிலும் இதே நிலைதான். இங்கு இருக்கும் அரசு உதவி பெரும் கல்வி நிறுவனங்களில் நடக்கும் நியமனங்கள் அரசு விதிப்படிதான் நடக்கின்றன எனச் சொல்ல முடியுமா? அல்லது அவற்றையெல்லாம் பாலன் முன்மொழிந்ததுபோல் அரசிடமே வழங்கி விடுவது ஏற்புடையதா? அரசால் நிதி நல்கப்பட்டு, அரசால் சம்பளம் கொடுக்கப்படும் ஆசிரியர்களை அரசு நியமிப்பதுதானே நியாயம்? அதைத் தமிழ்நாடு அரசு ஏன் துவங்கி வைக்கக்கூடாது? இது தனிப்பட்ட ஆளாக என்னுடைய கோரிக்கை மட்டுமல்ல, சென்ற செப்டெம்பர் மாதம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் திருநாவுக்கரசும் இதையேதான் சொன்னார். [2]

இந்த வருடம் பிப்ரவரியில் ஆசிரியர் தேர்வு வாரியம் 4000 பணிக்கான தேர்வை நடத்தும் என்கிறார்கள்; இதற்கிடையே TNSET எனும் தகுதித் தேர்வு நடக்குமா என்கிறார்கள் காத்திருப்போர். இதற்குமுன் செட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே பணி நிரந்தரமாகவில்லை எனும்போது, பணி நிரந்தரத்திற்குப் போராடும் கௌரவ விரிவுரையாளர்கள் ஒருபுறம்; செட் தேர்வில் தேர்ச்சி இருந்தாலும் அவர்களுக்கென சம்பள வரைமுறைகள் இல்லை என்பதால் தனியார் கல்வி நிறுவனங்களால் சுரண்டப்படுபவர்கள் ஒருபுறம். இப்படியிருக்கிறது ஆசிரியராக விரும்புவர்களின் நிலை.

ஆசிரியர் பணியை அடைவதற்கு இவ்வளவு குறுக்கு வழிகள் இருக்கும்போது, கல்வியையும் மதிப்பெண்ணையும் மட்டுமே கொண்ட ஒருவர் நேர்மையான வழியில் உள்நுழைவதற்கான வழிகள் இல்லாதபோது, கல்வித்துறை எங்கனம் புனிதமானதாக இருக்கும்? கையூட்டுக் கொடுத்துப் பெற்ற பணியிலிருப்பவர் போட்ட பணத்தை எடுக்கும் முதலீட்டுத் திட்டமாகவே ஆசிரியர் பணியைப் பார்ப்பார். எனவேதான் இவர்கள் கையூட்டு வாங்குவது, வகுப்பிற்கு வராமலிருப்பது, அர்ப்பணிப்பில்லாத அற்பர்களாய் இருப்பது, மாணவர்களை, சக பணியாளர்களை இனத்தால், மதத்தால் வேறுபடுத்தி நடத்துவது எனக் கல்வி நிலையங்களைக் கீழ்மைகளால் நிறைக்கிறார்கள். கூடவே, சிறுமை நிறைந்த இத்தகு ஆளுமைகள்மேல் மாணவர்களுக்கு இயல்பாகவே ஒரு விலக்கமும், மரியாதையின்மையும் ஏற்படுவதை உணர்ந்தே இருக்கும் இவர்கள், அவர்களின் எதிர்காலத்தைத் தங்கள் அகங்கரத்திற்குப் பலியிட்டு நிறைவடைவதும் உண்டு. ஒட்டுமொத்தமாக, துறைசார் அறிவின்மை, முதிர்ச்சின்மை உள்ளிட்ட காரணங்களால் நமது கல்விச்சூழலின் தரத்தைப் பெருமளவு பாதிக்கிறார்கள். இம்முறை தொடர்வது மாணவர் நலனுக்கோ, மாநில நலனுக்கோ, நாட்டிற்கோ நல்லதல்ல.

1. ஆசிரியர்களின் பணியிட மாறுதல் 

பள்ளியோ கல்லூரியோ இரு ஆசிரியர்களுக்கிடையேயான மனமொத்த பணிமாறுதல் அல்லாதவற்றுக்கு இங்கு யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்கிற விஷயம் இங்குள்ள அரசுப் பள்ளி/கல்லூரி ஆசிரியர்களுக்குத் தெரியாததா? அப்படியென்றால் ஆசிரியர் தவிர்த்து கல்வித்துறையில் வாங்கும் இடத்தில் இருப்பவர் எவர்? 

3. குற்றமும் தண்டனையும் 

நவீனத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க சாதனைகள் செய்தவர், நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைகள், மாநில அளவில் உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி, எம்.ஏ, எம்.ஃபில் பட்டங்கள், கற்பித்தல் அனுபவம் பெற்ற எழுத்தாளரிடம் பல்கலைக்கழகம் ஒன்றில் தமிழ்ப் பேராசிரியர் பணிக்கு நேர்முகத்தேர்வில் கேட்கப்பட்ட தொகை நாற்பது இலட்சங்கள்; அதுவும் எட்டு வருடங்களுக்கு முன்பு. [3] 

பிறகு அதே பல்கலைக்கழகத் துணைவேந்தர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தும் போது, கழிவறைக் குழாயில் பணத்தை ஒளித்து வைத்திருந்ததும் கண்டறியப்பட்டு, தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு கையும் களவுமாக பிடிபட்டதெல்லாம் வரலாறு. அவருடன் அவருக்கு உதவி செய்த பேராசிரியர்(கள்) தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு, சிறைசென்றதெல்லாம் நாம் அறிந்ததே. [4] தற்போது வழக்கு நடந்து கொண்டிருப்பதும் அவர்கள் மீண்டும் பணியில் இருப்பதும் எனக்குப் புதிய செய்தி. அதிர்ச்சியாக இருக்கிறது. 

நடைமுறை இப்படி இருக்கையில், சட்டத்தின் நடவடிக்கைகள் இப்படி இருக்கையில் நாம் யாரை நம்புவது? அல்லது இவையும் மீ டூ இயக்கம்போல் ஒரு குற்றவாளியை அம்பலப்படுத்துவது மட்டும்தானா? 

ஒரு அரசுக்கல்லூரி ஆசிரியராக வேண்டும் என்கிற கனவோடு அரசுக்கல்லூரியிலிருந்து வெளியே வந்தவனாக, மாநில, தேசிய அளவிலான உதவிப்பேராசிரியர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவனாக, முனைவர் பட்ட இறுதியாண்டு மாணவனாகச் சொல்கிறேன்: எங்களைப் போன்றவர்களுக்கு கண்ணெதிரில் நேர்வழி என்கிற ஒன்று இல்லை.  


சான்றுகள் :

1. https://timesofindia.indiatimes.com/city/kochi/psc-must-take-over-aided-school-postings-balan/articleshow/91799179.cms  

2. https://www.edexlive.com/news/2022/sep/26/academicians-urge-tn-government-to-conduct-recruitment-of-teachers-through-trb-31300.html

3. எழுத்தாளர் சு.வேணுகோபால். 2016 ஆம் ஆண்டு அன்னை தெரசா பல்கலைக்கழகம் நடத்திய செட் தேர்வில் நாங்கள் இருவரும் தேர்ச்சி பெற்றோம். சான்றிதழ் பெறும்போது நிகழ்ந்த உரையாடலில் இருந்து. இதை முன்பே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன், காலச்சுவடு இதழில் வெளியானது. https://sannaloram.blogspot.com/2019/10/blog-post.html

Thursday, November 2, 2023

முதலமைச்சரின் ஆய்வு உதவித்தொகை முழுமையாகப் பலன் தரட்டும்!

தமிழ்நாட்டிலுள்ள மாணாக்கர்களிடையே ஆராய்ச்சித் திறனை வளர்க்கவும், புதிய ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும், ‘முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகைத் திட்ட’த்தைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதற்கான தேர்வையும் உதவித்தொகை வழங்கும் பணியையும் ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளும் எனத் தெரிகிறது. விண்ணப்பிப்பதற்கோ, தேர்வு எழுதுவதற்கோ எந்தக் கட்டணமும் இல்லை என்பது இதன் சிறப்பு.

இதன் மூலம் ஒவ்வொரு வருடமும் போட்டித் தேர்வின் அடிப்படையில் கலை, மானுடவியல், சமூக அறிவியல் பிரிவுகளில் 60, அறிவியல் பிரிவில் 60 என மொத்தம் 120 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வானவர்கள் தமிழக அரசுக் கல்லூரிகளில் முனைவர் பட்ட ஆய்வாளராகச் சேர இயலும். இந்த உதவித்தொகை மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதத்திலும் பெரிதும் உதவியாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதேவேளையில், ஓர் ஆய்வு மாணவனாக, அண்டை மாநிலமான கேரளத்தில் இத்தகைய உதவித்தொகை செயல்படுத்தப்படும் விதத்தின் அடிப்படையில் சில யோசனைகளை முன்வைக்கிறேன்.

இணைப்புக் கோளாறு:

16.10.2023 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிக்கையின் முதல் பக்கத்தில், இத்திட்டத்துக்கான அரசாணையை (27.02.2023 தேதியிட்டது) வாசிப்பதற்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இக்கட்டுரை பிரசுரமாகும்வரை இணைப்பு வேலை செய்யவில்லை. மாதம் எவ்வளவு உதவித்தொகை வழங்கப்படுகிறது, எத்தனை வருடங்களுக்கு வழங்கப்படும் என்பன உள்ளிட்ட மேலதிகத் தகவல்கள் அரசாணையில்தான் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த உதவித்தொகை குறித்த புரிதலை அரசாணை மாணவர்களுக்கு அளிக்கும்; விண்ணப்பிப்பதா வேண்டாமா என முடிவெடுக்கவும் உதவும். எனவே, அதற்கான இணைப்பு உடனடியாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

எனக்குக் கிடைத்த அரசாணை நகலில் முதல் இரண்டு வருடங்களுக்கு மாதம் ரூ.25,000 எனவும், கடைசி வருடத்துக்கு மாதம் ரூ.28,000 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இடைநிற்காமல் கல்வி கற்கும் ஒருவர் 23 வயதில் இத்தேர்வில் தேர்ச்சி பெற்று, முனைவர் பட்ட ஆய்வுக்குள் நுழைய இயலும்.அவர்களைப் பொறுத்தவரை இது கணிசமான தொகைதான். வயது வரம்பு இல்லை என்பதால் திருமணமானவர்கள், குழந்தை உள்ளவர்கள், வயது முதிர்ந்த பெற்றோர்களுடன் வசிப்பவர்கள் என அனைவருக்கும் உயர்கல்வி பயில இது நல்வாய்ப்பு. அதே நேரத்தில்,அவர்கள் எதிர்கொள்ளும் செலவுகளுடன் ஒப்பிட்டால்,இத்தொகை போதாது. இவர்களுக்குச் சிறப்புக் கவனமோ அல்லது தொகை உயர்த்தியோ வழங்கப்பட வேண்டும். விடுதியில் தங்குவோர் என்றால் வாடகைப்படி வழங்கப்பட வேண்டும்.

கூடுதல் நிதி அவசியம்:

கேரளம் முதல் இரண்டு வருடங்களுக்கு ரூ.31,000, மூன்றாம் வருடத்துக்கு ரூ.35,000 வழங்குகிறது; இதர செலவுகளுக்காக அனைத்துப்புல மாணவர்களுக்கும் வருடம் ரூ.20,000 மற்றும் மாதம் 10% வாடகைப்படியும் வழங்குகிறது. தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டால் பரப்பளவில் சிறிய, கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு குறைவான மக்கள்தொகை கொண்ட கேரளம் வழங்கும் முனைவர் பட்ட ஆய்வு உதவித்தொகைகளின் எண்ணிக்கை 100. வரும் வருடங்களில் தமிழ்நாடு அரசு கூடுதல் நிதி ஒதுக்கி பயனாளிகளின் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும்.

மூன்று வருடங்களில், அதுவும் அரசுக் கல்லூரிகளில் ஆய்வை முடிப்பது கடினம். குறிப்பாக அறிவியல் புலத்தில். எனவே, ‘அரசுக் கல்லூரிகளில் மட்டும் ஆய்வு செய்வதற்கான உதவித்தொகை’ என்னும் வரம்பு தளர்த்தப்பட வேண்டும். தனியார் நிறுவனங்கள் தவிர்த்து, ஒன்றிய அரசுக் கல்வி நிறுவனங்களுக்குள் (சிஎஸ்ஐஆர், ஐஐடி, என்ஐடி, மத்திய அரசுப் பல்கலைக்கழகங்கள் போன்றவை), தமிழகப் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைய இந்த உதவித்தொகை ஒரு நல்வாய்ப்பு; ஆய்வு வசதிகளும் மிகுதி. வருடத்துக்கு ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட முனைவர் பட்டங்கள் வழங்கப்படும் ஒரு நாட்டில் போட்டி அதிகம்; பட்டம் பெற்றது கல்லூரியிலா/பல்கலைக்கழகத்திலா/மத்திய அரசு நிதி நல்கும் கல்வி நிறுவனத்திலா என்பது வேலைவாய்ப்புச் சந்தையில் தர அளவீட்டுக் கருவி என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுக் கல்லூரிகளில்தான் ஆய்வுசெய்ய வேண்டும் என்கிற கட்டாயம் இல்லாமல், ‘அரசுக் கல்லூரிகளில் முதுநிலை பயின்ற மாணவர்களுக்கான உதவித்தொகை’ எனத் திருத்தப்படுமானால் மிக மகிழ்ச்சி. அரசுக் கல்லூரிகளில் ஆய்வுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தத் திட்டங்கள் வகுப்பது முக்கியம். மிக அடிப்படையாக மொழி, கலை, அறிவியல், சமூகவியல் உள்ளிட்ட எந்தப் புல ஆய்வுக்கும் உள்நாட்டு/பன்னாட்டு ஆய்விதழ்களை வாசிப்பதற்கான வசதிகள், சார்ந்துள்ள பல்கலைக்கழகங்களால் செய்துதரப்பட வேண்டும். இத்திட்டத்தின்மூலம் அரசுக் கல்லூரிகளில் முனைவர் பட்ட ஆய்வு செய்யும் மாணவர்கள், அக்கல்லூரி சார்ந்துள்ள பல்கலைக்கழகக் கட்டமைப்பு வசதிகளை, பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களுக்கு நிகரான உரிமையுடன் பயன்படுத்திக்கொள்ள ஆவன செய்ய வேண்டும்.

நடைமுறைச் சிக்கல்கள்:

பொதுவாகவே, கல்வி உதவித்தொகை சரியான காலத்தில் பயனாளிகள் கைகளில் கிடைப்பதில்லை. சிலரின் குடும்பச் செலவுகளே இந்த உதவித்தொகையை நம்பியிருக்கும் என்பதால், 120 பேருக்கும் மாதாமாதம் குறிப்பிட்ட தேதிக்குள் தொகை போய்ச்சேர்வது விதிமுறையாக்கப்பட வேண்டும்.

உதவித்தொகை மூன்று வருடங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. அறிவியல் புலங்களில் மூன்று வருடங்களில் முனைவர் பட்டம் பெறுவதென்பது இந்திய அளவில் பெருவசதி பெற்ற, மத்திய அரசு ஆய்வு நிறுவனங்களிலேயே சாத்தியமற்ற ஒன்று. 30 வயதை நெருங்கும் ஒருவர், தன் ஆய்வுப் பணியின் பாதியிலேயே கைவிடப்பட்டதாகவே உணர்வார். எனவே, ஐந்து வருட காலம் உதவித்தொகை என்பது கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

இந்த சிறந்த திட்டத்தைத் தொடங்கும்போதே, மேற்சொன்னவற்றைக் குறித்து வல்லுநர்களோடு அரசு ஆலோசித்து மாற்றங்களைச் செய்யுமானால் ஆய்வு மாணவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.

(நடுப்பக்கக்கட்டுரை, தி இந்து தமிழ் திசை, 02-11-2023) 







Sunday, June 4, 2023

பள்ளிக்கல்வி - ஒரு விவாதம்

கேரளப் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்வில் மாணவர் - ஆசிரியர் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். உடன் கர்நாடக, ஒரிசா, கேரள மாநில மாணவர்களும் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கேற்ப மாநில/ஒன்றிய/தனியார் பள்ளிகளில் பயின்றிருந்தனர். அமர்வின் நோக்கம் எங்களுடைய பள்ளிக்கால அனுபவங்கள், எவற்றையெல்லாம் ஆசிரியர்கள் செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என நினைக்கிறோம் என்பதைக் குறித்துப் பேசுவதாக இருந்தது.

கற்பித்தல் என்பதைத் தாண்டி தமிழ்நாட்டுக் கல்விச் சூழலுடன் இணைத்து சிலவற்றைப் பேசலாம் என எண்ணினேன். தாய்மொழிக் கல்வி, நுழைவுத் தேர்வுகள், தேசியக் கல்விக் கொள்கை, போட்டித் தேர்வுகள், இட ஒதுக்கீடு இவற்றைக் குறித்த தமிழ்நாட்டின் பார்வை பிற மாநிலங்களைக் காட்டிலும் தனித்துவமானதென்பதாலும், அண்மையில் கல்லூரிச் சுற்றுலா உள்ளிட்ட சில புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருப்பதாலும் அவற்றைக் குறித்து ஆசிரியர்களின் சிந்தையைத் திருப்பலாம் என நினைத்தேன். அவ்வரங்கில் நிகழ்த்தவற்றைக் குறித்து இங்கே பகிர்ந்துகொள்ளத் தோன்றியது.

முதலாவதாக அரங்கு அமைக்கப்பட்டிருந்த விதம்: முகாமில் ஆசிரியர்களே மாணவர்கள், எனவே அவர்கள் மேடைக்குக் கீழ். "ஆசிரியர்கள் மாணவர்களாகவும், மாணவர்கள் ஆசிரியர்களாகவும் இருக்கப் போகும் இந்த நிகழ்வு எனக்கு வித்தியாசமாக இருக்கிறது, எப்படித் துவங்குவதெனத் தெரியவில்லை - மரியாதைக்குரிய மாணவர்களே... நான் தமிழகத்தை சேர்ந்தவன், பள்ளி, கல்லுரிப் படிப்புகளை அரசுக் கல்வி நிறுவனங்களில் முடித்தவன், தமிழகத்தின் பார்வையிலிருந்து சிலவற்றைச் சொல்லலாம் என நினைக்கிறேன்." எனத் துவங்கினேன்.

புகைப்படம்: சமதா மேத்யூ 

மாணவர் இருக்கையும் ஆசிரியர் இருக்கையும் நம் குணத்தையே மாற்றிவிடும் போலும். சலிப்பைக் காட்டும் உடல்மொழி, திறன்பேசியை நோக்குதல், அடுத்திருப்பவருடன் உரையாடல் போன்ற மாணவர்களுக்குரிய குணாம்சங்கள் ஆசிரியர்களிடமும், இவற்றைக் கண்டும் பொறுமையிழக்கும் ஆசிரியரின் குணம் எங்களுக்கும் தொற்றிக்கொண்டதையும் உணர முடிந்தது. ஆனால், இங்கே இரு தரப்பினரும் மற்றவர்மேல் விமர்சனம் வைக்கும் இடம். இதே ஜனநாயகத்தன்மை எல்லா வகுப்பறைகளிலும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற எண்ணம் வராமலில்லை.

முதல் சுற்றின் விவாதப் பொருள் பயிற்றுமொழி. கேரளம் மற்றும் கர்நாடகத்தில் பத்தாம் வகுப்புவரை தாய்மொழிக் கல்வி உண்டு. கர்நாடக நண்பர் தாய்மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மாறுவது கடினமாக இருந்தது எனவும், அறிவியலை சொல்லித் தருவதை விட செயல்முறைக் கல்வி இருந்திருந்தால் கற்பது எளிதாக இருந்திருக்கும். எப்படியென்றால், முப்பட்டகம் வெள்ளொளியை ஏழாகப் பிரிக்கிறதென்பதை வகுப்பறையில் நிகழ்த்திக் காண்பிப்பது கற்றலை இன்னமும் உற்சாகமானதாக்கியிருந்திருக்கும் என்றார். ஆசிரியர்கள் அவர் எடுத்துக்காட்டிற்குச் சொன்னதைப் பதினொன்றாம் வகுப்பு செய்முறைப்பாடம் எனப் பதிலளித்துக் கடந்தனர்.

பள்ளிகளின் மொழிக் கொள்கை தொடர்பான விமர்சனத்தைக் கல்லூரி மாணவர் ஒருவர் வைத்தார். தனியார் பள்ளியில் படித்தவர், அங்கேயும் பள்ளி வளாகங்களில் ஆங்கிலத்தில் பேசுவது கட்டாயம், மீறுபவர்களுக்கு அபராதம் இருந்தது என்றார். மொழி கற்றலில் இவ்வளவு இறுக்கம் வேண்டமெனவும் கேந்திரிய வித்யாலயங்களில் தாய்மொழிக் கல்விக்கே வாய்ப்பில்லை எனவும் குறிப்பிட்டார்.

மொழி தொடர்பான விவாதத்தில், தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. கல்வியில் முன்னிலையில் இருக்கும் வடக்கு ஐரோப்பிய நாடுகள் தாய் மொழியிலேயே பயிற்றுவிக்கின்றன, மொழிச்சிறுபான்மையினருக்கு அவர்களின் தாய்மொழியைக் கற்கவும் தாய்மொழியிலிருந்து உள்ளூர் மொழிக்கு மாறவும் சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றன. மேல்நிலைக் கல்வியை மலையாளத்தில் கற்பிக்கவும் பாடப்புத்தகங்கள் வெளியிடவும் கேரள அரசை ஆசிரியர்கள் வலியுறுத்த வேண்டும் என்றேன். சில வருடங்களுக்கு முன் கேரள அமைச்சர் மற்றும் பிரதிநிதிகள் அங்கு சென்று வந்ததையும் அந்நாட்டின் பிரதிநிதிகள் சில வாரங்களுக்கு முன்பு கேரளத்திற்கு வந்ததையும் அவர்களுக்கு நினைவுறுத்தினேன். கூடவே தமிழகத்தில் மேல்நிலைக் கல்வி மட்டுமல்ல, கல்லூரிக் கல்வியையும் தமிழில் கற்க இயலும் எனக் கூறினேன். கலை, அறிவியல் பாடங்கள் அரசுக் கல்லூரிகளில் தமிழ் வழியில் கற்பிக்கப்படுவதையும் அத்தகைய வகுப்பில் இருந்துதான் வந்திருக்கிறேன் என்பதையும் ஆங்கிலத்தில் சொன்னேன். தமிழ் வழிக்கல்வி என்னுடைய ஆங்கிலத்தை பாதிக்கவில்லை, மாறாக உதவியிருக்கிறதென்றேன். கூடவே தற்போது மத்திய அரசு மருத்துவ படிப்புகளுக்கான புத்தகங்களை இந்தியில் வெளியிட்டு இருப்பதையும் சுட்டி என் வாதங்களுக்கு வலுவைக் கூட்டினேன். தாய்மொழிக் கல்வியை நீங்கள் பிற்போக்குத்தனமாகப் பார்ப்பீர்கள், ஆனால் தாய்மொழியில் கற்க விரும்புவர்களுக்கான வாய்ப்பை நாம் உருவாக்கித்தர வேண்டுமில்லையா? எனக் கேட்டேன்.

கேரளக் கல்லூரி மாணவர், அனைவருக்கும் மருத்துவம் மற்றும் பொறியலில் ஆர்வம் இல்லை என்கிறபோது, மதிப்பெண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவு முக்கியத்துவம் விளையாட்டு, இன்ன பிறவற்றிற்கும் வழங்கப்பட வேண்டும், விளையாட்டுப் பிரிவேளையைக்கூட அபகரிப்பது எந்த வகையில் நியாயம் எனக் கேட்டார். அதை ஆமோதித்து, எழுத்தாளர் பெருமாள்முருகன் கட்டுரையில் இருந்த கருத்தொன்றைச் சுட்டினேன்: வகுப்பறைகளில் விளையாடும் கைக்கிரிக்கெட், புத்தகக் கிரிக்கெட் விளையாட்டுகளைப்பற்றிச் சொல்லி, நீங்கள் விளையாட்டு பாடவேளையை அபகரித்து அவர்களை வகுப்பறையில் அடைக்கையில் அவர்கள் புதிய விளையாட்டுகளை உருவாக்கி இருந்த இடத்திலேயே விளையாடத் துவங்குவார்கள். இது அவர்களின் கற்பனையை விரித்தெடுக்கலாம், ஆனால் உடல் நலத்திற்கு நன்மை பயப்பதல்ல என்றேன்.

கல்லூரி மாணவி ஒருவர் தான் நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி எடுத்துக் கொண்டதாகவும் ஆனால் தரவரிசையில் இரண்டு லட்சத்திற்குப் பிறகான இடமெனவும் சொன்னார். கூடவே ஆசிரியர்கள் வகுப்பறையிலேயே போட்டித் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சியை வழங்க வேண்டுமெனக் கேட்டார். ஆசிரியர்களின் பிரதிநிதி, மாணவர்களுக்குத் தெளிவாகப் புரியும்படி படம் நடத்துவதுதான் தங்கள் முதன்மைப் பணியெனவும், மற்ற அலுவல் பணிகளும் இருப்பதால் அதற்கு வாய்ப்பில்லை எனவும் மறுத்தார்.

"நீங்களெல்லாம் அரசு பள்ளி ஆசிரியர்கள், பெரும்பாலும் முதல் தலைமுறை மாணவர்கள் படிக்க வரும் இடம். தனியார் கல்லூரி மாணவர்களை விட அவர்களுக்கு வசதியும் வாய்ப்பும் குறைவு. கற்பித்தலை தாண்டி அரசின் கொள்கை வகுத்தலில் நம் மாணவர்களுக்கு நீதி வழங்கும் வகையில் நீங்கள் பங்களிக்க வேண்டும். பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு கைப்பேசி வாங்க இயலாத அரசு பள்ளி மாணவர்களைத் தமிழகத்திலும் கேரளத்திலும் கண்டோம். கைப்பேசி இருந்தும் சிக்னல் கிடைக்காததால் வீட்டுக் கூரைகளில் அமர்ந்து பாடம் கற்றோர், சிக்னலுக்காக பல கிலோமீட்டர் நடந்த மலைவாழ் மக்கள் உள்ளிட்டோரைப் பார்த்தோம். வாய்ப்புகளில் சமநிலைத் தன்மை இல்லாத கல்விச் சூழலில், இவர்கள் எல்லோருக்கும் ஒரே தேர்வு என்பது எங்ஙனம் சரியாகும்?" எனக் கேட்டேன்.

ஓரிரு இடங்களில் அது போன்ற நிலை இருக்கலாம் ஆனால் கேரளத்தைப் பொருத்தவரை பெரும்பாலான மாணவர்களிடம் பேசியும் இணைய வசதியும் இருந்தது/இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டது என்றார் ஆசிரியர்களின் பிரதிநிதி. நான் இப்போது வேறு விதமாகக் கேள்வியைத் தொடுத்தேன்: இங்கு இருப்பவர்களின் வகுப்பறையில் இருந்து எத்தனை மாணவர்கள் நீட் தேர்வைக் கடந்து மருத்துவப் படிப்பிற்குச் சென்றார்கள் எனக் கேட்டேன். "எத்தனையோ பேர் உண்டு!" என்ன சத்தமான பதில் வந்தது, பலரும் தலையாட்டி ஆமோதித்தார்கள். நான் அடுத்த கேள்வியைக் கேட்டேன்: அவர்களில் தனிப்பயிற்சி மையங்களுக்குச் செல்லாமல் தேர்ந்தவர்கள் எத்தனைஅமைதி. சரி, கோச்சிங் சென்டர்கள் வசூலிக்கும் குறைந்த கட்டணம் என்று எதைச் சொல்வீர்கள்? மேடையில் இருந்த மாணவி ஒரு லட்சம் என்றார். நீங்கள், பிள்ளைகளே என அழைக்கும் அனைவரிடமும் லட்சங்கள் இருக்குமா? நீண்ட அமைதி. அரசு பள்ளி மாணவர்கள் அனைவரும் லட்சங்கள் செலவு செய்ய இயலாது, அதே நேரத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் நேரடியாக தனிப்பயிற்சி மையங்களுக்குச் செல்லும் வழிமுறைகள் இங்கே உண்டு. அவை உண்டு உறைவிடப் பயிற்சிப் பள்ளிகளாகி நெடுங்காலம் ஆயிற்று; பள்ளிகள் அவர்களுக்கு தேவையான வருகைப் பதிவை வழங்கும், அவர்கள் பள்ளிக்கு வராமல் இரண்டு வருடங்களுக்கு முழு நேரமும் நீட் தேர்வுக்குப் பயிற்சி எடுக்கலாம். இப்படி இருக்கையில் இதை எல்லோர்க்கும் சம வாய்ப்பு எனச் சொல்ல இயலுமா? உடன் தேர்வைப் பலமுறை எழுதி வெற்றிபெறும் மாணாக்கர்கள் அதிகம். அரசுப்பள்ளி மாணவர்களின் குடும்பச்சூழல் பல்லாண்டுப் பயிற்சிக்கும் காத்திருப்புக்கும் ஏற்றதா? பதில் இல்லை.

எனவே இது போன்ற நடைமுறைச் சிக்கல்களை நீங்கள் அரசிற்குக் கொண்டு செல்ல வேண்டும். தமிழகம் நுழைவுத் தேர்வுகளை இதற்காகத்தான் எதிர்க்கிறது, இயலாத பட்சத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவத்திலும் பொறியியலிலும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கிறது. புதிய கல்விக் கொள்கையால் அடுத்தடுத்து நுழைவுத் தேர்வுகள் வரும், ஆசிரியர்கள் தொடர்ந்து இந்தக் கேள்வியைச் சந்திக்க நேரும். கடந்த பிப்ரவரி 16 அரசு/தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு அனுப்பிய சுற்றறிக்கையின்படி 2023-24 கல்வியாண்டில் பட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் பல்கலைக்கழகப் பொது நுழைவுத் தேர்வில் (CUET - Common University Entrance Test) தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். எனவே இணையவழிக் கற்றல் பெருகும் காலத்தில் கற்பித்தல் மட்டுமல்ல, எதிர்வரும் தேர்வுகளுக்கு அவர்களைத் தயார் ஆக்குவதும், இத்தகைய அசமத்துவம் உள்ள ஒரு நாட்டில் போட்டித் தேர்வுகள் அவசியமானவயா எனக் கேள்விக்குள்ளாக்குவதும்தான் ஆசிரியர்களின் பணியாக இருக்க முடியும் எனச் சொன்னேன். ஒருவேளை நுழைவுத் தேர்வுகளால் பாதிப்பு இல்லை எனக் கருதினால் தமிழகத்தை போல, அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை இவை எங்ஙனம் பாதிக்கிறது என்பதைக் குறித்த ஒரு ஆய்வை மேற்கொள்ள அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் கூறினேன். மௌனமே பதில்.

பிறகு, கற்பித்தல் குறித்த மாணவர்களின் வழக்கமான குற்றச்சாட்டுகள். ஆசிரியர்கள் நெளியத்துவங்கினர், ஒருவர் எழுந்து "உங்களின் தற்போதைய நிலைமைக்குக் காரணம் உங்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள் அல்லவா? அவர்களைப் பற்றி பேசுங்கள், அவர்களின் பெயரைச் சொல்லுங்கள், அவர்கள் என்ன செய்தார்கள்?" என்றார். எங்களுடைய பள்ளி-கல்லூரி ஆசிரியர்கள் சிலர் எங்களுக்கு எங்ஙனம் வழிகாட்டியாக இருந்தார்கள் எனச் சொன்னேன். மொழித்திறனை வளர்க்க ஆங்கில நாளிதழ்களைப் படிக்க ஊக்குவித்தார்கள், நடுப்பக்கக் கட்டுரைகளைக் குறித்துப் பேசி அடுத்தநாள் படித்தோமா என்பதையும் உறுதி செய்து கொண்டார்கள். அவர்கள்வழி அறிந்த ஆங்கிலத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், மென்திறன் பயிற்சி வகுப்புகள் எங்களுக்குத் திறனை வளர்த்துக்கொள்ள எவ்வாறு உதவின எனப் பேசினேன். அடிப்படை சேமிப்பு, சமூக நலத்திட்டங்கள், உடல் நலம் குறித்த தகவல்களை எங்களுடன் எப்படிப் பகிர்ந்து கொண்டார்கள் என்பதையும் சொன்னேன். அவர்களில் சிலர் நாங்கள் உயர்கல்வி செல்கிறோமா இல்லையா என்பதைக் கண்காணித்தார்கள், தற்போதைய அரசு அதைக் கட்டாயமாக்கியிருக்கிறது எனவும் சொன்னேன். ஆசிரியர் பிரதிநிதி, இங்கே அதை அரசுத் துறையே செய்கிறது, எங்களின் பங்களிப்பு அவசியமில்லை என்றார்.

மொழி, நுழைவுத் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் என்னுடைய கருத்துக்களின் மீது ஒரு ஒவ்வாமை இருந்ததை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆனால், எங்களின் அனைவரின் கருத்துக்கும் உடனடி மறுப்பினை ஆசிரியர்களிடம் எதிர்வினையாகக் காண முடிந்தது. அவ்வப்போது விவாதம் திசைமாறுகிறது என்கிற கருத்தும் பிரதிநிதியிடமிருந்து வந்தது. குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் பிரதிநிதியால் மறுக்கப்பட்டு உடனடிப் பதில்கள் வழங்கப்பட்டு மேலும் சிந்திப்பதற்கான, விரித்தெடுப்பதற்கான கதவுகள் அடைக்கப்பட்டன. பிறகு, ஆசிரியரும் மாணவரும் விவாதிக்க நேரும்போது எப்போதும் ஆசிரியர்தானே சரியாக இருக்க முடியும்? அரங்கு எங்களுடையதென்றாலும் இப்படி ஒரு மறைமுக அதிகாரம் ஆசிரியர்களிடமிருந்து வெளிப்பட்டதைக் காண முடிந்தது.

இறுதியாக ஆசிரியர்களில் ஒருவர் நன்றியுரை வழங்கினார். அவர் தன் மகள் டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாறுப் படிப்பில் சேர்ந்து, பிற்காலத்தில் முனைவர் பட்டம் வாங்க விரும்பியதை நினைத்துக் கவலை கொண்டதையும், முனைவர் பட்டம் வாங்குகையில் அவர் எட்டியிருக்கும் வயதை நினைவுறுத்தி நல்வழிப்படுத்தி சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்த்திருப்பதையும் பெருமையுடன் பகிர்ந்து கொண்டார். அப்போதுதான் நான் எவர் முன்னே அமர்ந்திருக்கிறேன் எனப் பொறி தட்டியது. அப்பல்கலைக்கழகத்தில் நுழைய இவர் பிள்ளை நிச்சயம் நுழைவுத் தேர்வு எழுதி இருப்பார், அதற்கெனத் தனிப்பயிற்சிக்கூட எடுத்திருப்பார். என் முன்னே அமர்ந்திருப்பவர்களின் பிள்ளைகள் பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் படிப்பார்கள், நுழைவுத் தேர்வுகளுக்குப் பல லட்சங்களில் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார்கள். இவர்களிடம் இருந்து அரசுக்கு நுழைவுத் தேர்வுகளுக்கு எதிரான ஒரு கோரிக்கை எழுவதற்கு வாய்ப்புக் குறைவு. எல்லோரிடமும் போட்டிபோடுவதற்குப் பதில் பொருளாதார வலுவுள்ள உயர்குடிகள் தமக்குள் போட்டிபோட்டுக்கொள்வது ஆரோக்கியமானதுதான் இல்லையா?!