Thursday, June 8, 2017

மனுஷ்ய புத்திரனும் நானும்




மனுஷ்ய புத்திரன் கவிதைகளைப் பற்றி மட்டுமல்ல, வாசித்த எந்தப் படைப்பைப் பற்றியும் சிறு குறிப்பு கூட எழுதும் தன்னம்பிக்கை இன்று வரை இல்லை. நேர்ச்சந்திப்பிலும் ஒரு கையெழுத்து வாங்குமளவுக்குத்தான் தைரியம் இருக்கிறது.

ஒரு கவிஞராக மட்டுமின்றி களப்பணியாளராகவும், பத்திரிகையாளராகவும் பல வருடங்களாகத் தொடர்ந்து பங்களித்து வரும் ஒருவரைக் கௌரவிக்கும் இத்தருணத்தில் வாசகசாலையுடன் இணைந்துகொள்வது மிகுந்த நிறைவளிப்பதாக உள்ளது.
எளிய சொற்களின் வழி எவ்வாறு என்னை இறுக அணைத்துக் கொண்டாரோ அவ்வாறே அவரைத் திருப்பியணைக்க எளிய சொற்களைத் தவிர எதுவுமில்லாததாலும், தலைப்பிலேயே ஐம்பது சதவிகித ஒதுக்கீடு இருப்பதாலும் இக்காரியத்தைச் செய்யத் துணிகிறேன். இதை எழுதுகையில் மூன்று தொகுப்புகள் கைவசமிருப்பதால் அவற்றின் நெடி அதிகமிருக்கும், பொறுத்தருள்க.

சமூக வலைத்தளங்கள் வழி வாசிக்க வந்தேன். அதன் மூலம் சிலர் பெயரைத் தெரிந்து கொண்டு புத்தகக் கண்காட்சிக்குச் சென்ற காலத்தில் மனுஷ்ய புத்திரன் மலிவு விலையில் மெலிந்த தொகுப்புப் போடுபவராக இருந்தது என்னுடைய நல்ல காலம் என்றுதான் சொல்லவேண்டும். நாற்பது ரூபாய் என்பதைத் தாண்டி 'கடவுளுடன் பிரார்த்தித்தல்' தொகுப்பைத் தேர்வு செய்யக் காரணமென்னவென்று எப்படி யோசித்தாலும் நினைவிலில்லை.
ஆனால் அத்தொகுப்பிலுள்ள ஒரு கவிதை மட்டும் என்னை வசீகரித்தது என்பதைவிட எனக்குப் புரிந்தது எனலாம். வகுப்பறையில் நண்பரொருவர் தொகுப்பை வாங்கி, நிதானமாக உரக்க வாசித்து இக்கவிதையின் மூட் -ஐ உச்சரிப்பில் கொண்டுவந்தார்.

இந்தக் கண்கள்
இந்தக் கண்களை மட்டுமே பார்க்கின்றன
அதன் பலவீனங்களை.....

இப்படி நகரும். அப்போது இந்தக் கண்களைக் கொண்டு நான் எத்தனையோ கண்களைக் கண்டுகொண்டிருந்த காலம். இப்படித்தான் அவரை நான் கண்டுகொண்டேன்.


நான் ஒரு அவசரக்குடுக்கை; இப்போது வரை நீளமான கவிதைகளைப் பொறுமையாக வாசிப்பதில்லை. அவர்,

கைவிடப்பட்ட பிச்சைக்காரர்கள்
கைவிடப்பட்ட குடிகாரர்கள்

என்றெழுதும்போது விழியை ஒவ்வோர் முறையும் இடப்பக்கம் திருப்புவதைக் கைவிட்டுவிடுவேன்ஆனால் மனம் உச்சரிக்கும். ஒரே வார்த்தையை திரும்பத்திரும்ப உபயோகித்து அவர் உண்டாக்கும் அழுத்தம் நாம் அறியாததல்ல.
ஆனால் குட்டிக்கவிதைகளின் மீது எனக்குத் தனி விருப்பமுண்டு. ஒரு கவிதைத் தொகுப்பை எடுத்தவுடன் நான் தேடுவது குட்டிக்கவிதைகளைத்தான். இடமும் இருப்பும் தொகுப்பை இந்தக் குட்டிக்கவிதைக்காகத்தான் தேர்வு செய்தேன்.

அழுகை
வராமலில்லை
ஒரு வைராக்கியம்

உங்கள் முன்னால்
அழக்கூடாது

சில வருடங்களில் உதட்டைக் கடித்துக் கொண்டு விழத் தயாராயிருக்கும் கண்ணீருடன் நானே அந்தக் கணத்தில் நின்றேன். அப்போது இக்கவிதை நினைவில் வந்ததாலோ, எனக்கு வைராக்கியக் குறைவென்பதாலோ, அன்பின் கரங்கள் நீளுகையில் அதைத் தட்டிவிட முடியாததாலோ அழுதும் விட்டேன். அதன்பின் சில மாதங்கள் கழித்து ஒன்றுமே தெரியாததுபோல் மனுஷ்ய புத்திரனே கேட்கையில், "யோவ்... முடியாதுய்யா" என்றுதான் சொன்னேன்.

விசும்புகிற தலையைக்
கோதுகிற வேளையில்
ஒரு முறையேனும்
விசும்பாமல்
இருக்க முடிகிறதா
நம்மால்?

நீராலானது தொகுப்பின் புகழ்பெற்ற கவிதைகளில் ஒன்று, "ஒரு பெரிய அவமானத்திற்குப் பிறகு". கல்லூரி இறுதித்தேர்வில் தோல்வியடைந்த நேரத்தில் மனுஷ்ய புத்திரனைத் தேடி எடுத்து மடியில் கிடந்தேன். அராத்து எழுதியதைப்போல, அப்போது அந்தக்கவிதையைப் படித்து அழுதேன் அல்லது அந்தச்சூழலில் எனக்கு அழ ஒரு கவிதை தேவையாக இருந்தது. இப்படித்தான் அந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைத்துப் பின்னர் பல பிரச்சினைகளுக்கு என்னை ஆளாக்கினார்.

நீராலானது தொகுப்பின் முன்னுரையில், கவிதையின் அனைத்துக் கதவுகளையும் திறந்து போட்டுவிடவேண்டுமென்றெண்ணியதைக் குறிப்பிடுகிறார். கவிதைகளின் வலிமையாகிய எளிமையும் நேரடித்தன்மையும் புதிதாக வாசிக்கவருவபருக்கு எச்சிரமத்தையும் தருவதில்லை.

மற்றோர் சிறப்பம்சம் உரைநடைத்தன்மையிலேயே வந்தமரும் ஓசை ஒழுங்கு. ஒரே வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப உபயோகிப்பதால் மட்டுமல்லாமல் சில இடங்களில் இயல்பாகவே அதைச் சாதித்திருக்கிறார். கிணறு தோண்ட ஆட்கள் வந்துவிட்டார்கள் எனத் தொடங்கும் இந்தக்கவிதையில், சின்னஞ்சிறு தாவரமே என்றிறைஞ்சும் குரலில் உள்ள துக்கம் நன்றாகக் கேட்கிறது.

ஒரு நீருற்றைப் போய்ச்சேர
இவ்வளவு பிராசையா
எனக் கேட்கும்
சின்னஞ்சிறு தாவரமே
நீ அறிவாயா
வாடி வதங்கும்
உன் இலைகளின் கருமை
இந்த அந்தியை
எவ்வளவு கருப்பாக்குகிறதென்று

கவிதை பிடிபடவில்லையென்றாலும் திரும்பத்திரும்ப உச்சரித்துப்பார்க்கும் கவிதைகளில் ஒன்றாக இதிருக்கிறது. இது மட்டுமல்ல,

/காணாமல்
போய்விட்டேன்
என்பதற்காக

இல்லாமலேயே
போய்விட்டேன்
என்றாகிவிடுமா,

சொல்?/

/நான்
உனக்காக விட்டுச்செல்லும்
மிகச் சிறந்த பரிசு
என்னைப் பற்றிய வருத்தங்கள்
.....................

என்னைப் பற்றிய வருத்தங்கள்
மட்டும் இல்லையெனில்
இவ்வளவு காதலை
இவ்வளவு கருணையை
எங்கு சென்று மறைப்பாய்?!/

/இருட்டுக்குள் இருந்து
குருடனின்
சுயமைதுனம் பார்க்கும்
ஒரு ஜோடிக் கண்களை
எனக்குத் தெரியும் /

/என்னை நானே
முக்கியமாக
எண்ணிக்கொண்டதைத் தவிர
வேறெந்தத் தவறையும்
செய்யவில்லை/

/அன்பின் வழிமுறைகள் ஏன் இவ்வளவு பதட்டமுடையதாக இருக்கவேண்டும்/

/மக்களை நேசிக்கிற யாவரும் இடதுசாரிகளே/

இப்படிப் பல.

மனத்தின் பல்வேறு வண்ணங்களைப் படிமங்களின் வழியாகவும் நேரடியாகவும் மிக அதிகமாகக் கவிதைகளில் காணமுடிகிறது. அதிலிருக்கும் ஒன்றுக்கும் உதவாதவன் நான்தான், தொட்டாற்சிணுங்கியும் நான்தான். அங்கு கேட்பது நம் அந்தரங்கக் குரல்தான்

இறப்புச் செய்தியை ஏன் தெரிவிக்கவில்லை என்பதற்கு அது உங்களைக் கட்டாயப்படுத்தியது போல் ஆகிவிடுமென்பதுஏப்ரல் ஒன்றில் காதலைச் சொல்பவர்களின் சித்திரம்கேட்கப்படும் எனச் சொல்லாதிருந்தசொல்லப்படும் எனக் கேட்காதிருந்த காதல்கள்பொறாமை என்பது அன்பின் கலங்கிய வடிவம்நியாயம் கேட்கும்போது அழுவதன் காரணம் எனச் சொல்லிக்கொண்டே போகலாம். இக்விதைகள் பேசுவதைப்போல நேரடியாகப் பேசினால் என்ன என்று நினைப்பது பல நேரங்களில் நிம்மதியாகவும் அடுத்தகணமே அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

இவற்றுள் பெண்களின் அக உலகத்தைக் காட்சிப்படுத்திய கவிதைகளுக்கென்று ஒரு தனி வரிசையே இருக்கிறது. அவ்வளவு கூட்டத்துள்ளிருந்தும் தன் முலைகள் பார்வையாலேயே கசக்கப்படுவதை உணரும் பெண், தனியாகவே தூங்கிப்பழகியவள் கணவனுடன் உறங்குகையில் வரும் உளச்சிக்கல், முலைகளை மறைத்துக்கொள்ளாததால் சங்கடத்திற்குள்ளாகும் பெண்கள் என.

கவிதைகளில் வரும் படிமங்கள் நூறு சதவீதம் ஒன்றிப்போகின்றவை. அகப்படாது எனத் தெரிந்தும் பட்டாம்பூச்சிக்குப் பின் செல்லும் பூனை, சக்திக்கு மீறி வெல்லத்துண்டைத் தூக்கிச் செல்லும் எறும்பு, கானல் நீர், தொட்டாற்சிணுங்கிகள், மரவட்டைகள், யானைகள், எத்தனை எத்தனை கிளிகள்... இவற்றிற்கெல்லாம் உச்சமென 'கல்மரம்' (சூரியனுக்கு அருகில் ஒரு வீடு) கவிதையைச் சொல்லலாம். அதன் வரிக்குவரி ஒத்துப்போகிற மரம் ஒன்றை எனக்குத் தெரியும். அத்துயரம் காணச் சகிக்காதது.

மனுஷ்ய புத்திரன் விதைகளை அணுகுவதிலுள்ள தடைகளை எங்கனம் குறைத்தாரோ, அதே அளவுக்கு விதைகளிலுள்ள உடைகளையும் குறைத்தார் எனலாம். நிர்வாண உடலின் கதைகள் எல்லாத் தொகுப்புகளிலும் உலவுகின்றனபாத்திரங்கள் தனித்திருக்கும் வீட்டில் நிர்வாணமாக அலைகிறார்கள்உடை களைகிறார்கள்காமத்தின் பல்வேறு தளங்களைக் கவிதையில் கொணர்கிறார். இப்படியே போனால் உடலுறவின் எல்லாப் பொசிஷன்களுக்கும் கவிதை எழுதியவன் என்கிற பட்டப் பெயரையும் இவர் சுமக்கவேண்டியிருக்கும்

ஆனால் நடு ரோட்டில் தன் யோனியை அறைந்துகொண்டு அழுபவளைக் கடக்க முடியுமா எனப் பார்க்கவேண்டும். முந்தைய இரவில் கொடூரமாகக் கையாண்ட உடலைக் கண்டு பதறுபவனை நாம் ஏனென்று கேட்கவேண்டும். போகத்தில், வலிக்கிறதா எனக் கேட்கையில், கருணையுடன் மறுக்கும் மனத்தையும், விலைமாதின் முலைத்தழும்பைக் கண்டோடுபவனின் முகத்தையும் நாம் ஒருமுறையேனும் காண வேண்டும். ஆயிரமாயிரம் விசித்திரங்கள் இருக்க, இரண்டு முலைகளையும் ஒரு யோனியையும் தவிர எதையும் பார்க்க முடியவில்லையே என மண்டையில் அடித்துக்கொண்டு அழ வேண்டும்.

பாத்திரங்கள் எதாவது செய்துகொண்டே இருக்கிறார்கள். துணியை மடித்து வைக்கிறார்கள், தலைமுடியை அள்ளி முடிகிறார்கள், மழையில் இறங்கி நடக்கிறார்கள். பாத்திரங்களின் செய்கையே கவிதையை உச்சிக்கு எடுத்துச் செல்கிறது. அம்மா முயல் சொன்னதைக் கேட்டுத் தலையை ஆட்டும் குட்டி முயலும், கடற்கரை மணலில் கொட்டும் மழையில் எவ்வளவு முயன்றும் நகர மறுக்கும் சக்கர நாற்காலியுடன் நிற்கும் முதியவளும் இதனால்தான் கண்ணீரை வரவைக்கிறார்கள்.

ஆங்காங்கே சிரிக்க வைக்கும் கவிதைகள் சிலவற்றையும் எழுதியிருக்கிறார். மகத்தான காதல் கவிதை - 2014-ஐ வாசிக்கையில் சிரிப்புத்தான் வருகிறது, முறுமுனையில் நெஞ்சு வெடிக்கும் சத்தம் சற்றுத் தாமதமாகத்தான் கேட்கிறது. "ரெண்டாம் ஆட்டம் முடிந்து உன் புருஷன் எப்போது வீட்டுக்கு வருவான்" என்று காவியத்தலைவியைக் கேட்கையில் விழுந்து புரண்டு சிரித்துவிட்டு, பின்னர் நாமும் ஒரு காலத்தில் காவியத்தலைவனாகத்தானே இருந்தோம் என்றெண்ணித் தலையைத் தொங்கப் போட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.


அரசியல் இயக்கச் சார்புடையவர் என்பதால் வானொலியில் கவிதை தொடர்பான அவரின் உரை இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. அரசியல் இயக்கச் சார்புடையவராய் இருந்தாலும், அதில் ஒலிப்பது கவிஞனின் குரல். பணமதிப்பு நீக்கப்பட்ட காலத்தில் துயருற்ற சாமானியனின் குரல், மாட்டிறைச்சி வைத்திருப்பதாகச் சொல்லிக் கொல்லப்பட்டவரின் குரல், அம்மணமாக்கித் தோலுரிக்கப்பட்டவர்களின் குரல். வன்புணர்த்து கொல்லப்பட்ட சிறுமிகள், கழிப்பறை தேடி அலையும் பெண், இந்தியப் பெண்களும் கரடியும், செக்ஸ் ரோபோக்கள் சந்தைக்கு வந்துவிட்டன, ஒரு கரடியின் வேலைநாள், கடைப்பெண்கள், வேலைதான் நமக்கு எல்லாம் எனத் தொகுப்பெங்கும் துயரக்கதைகள். வெறும் ஸ்டேட்மென்ட்டுகளாக இல்லாமல் உரத்து ஒலிக்கும் ஆதங்கக் குரல்கள்: உப்புப் போட்டுத்தின்று நமக்கு சுரணை வந்துவிட்டதா?, நம் குரலைத் தின்றுவிட்டதா இந்தக் காலம்?, என்ன மாதிரியான கலாச்சாரம் சார் இது?

மனுஷ்ய புத்திரனின் முன்னுரைகளும் கட்டுரைகளும் தனித்துப் பேசப்படவேண்டியவை. அவர் கவிதைகளைப் போலவே முன்னுரைகளும் தாழ்ந்த குரலில், நெகிழ்வுத்தன்மையுடன் அந்தரங்கமாக உரையாடுபவை.

எது கவிதை என்பதற்குக் கீழ் மூர்க்கமாகத் துவங்கி ஓட்டுமொத்தத் தமிழிக்கவிதை வரலாற்றின் பல்வேறு புள்ளிகளைத் தொட்டுச்செல்லும் "எமக்குத் தொழில் கவிதை", தமிழ்க்கவிதைகளை இந்தியக் கவிதைகளுடன் ஒப்பிட்டு எழுதிய "தமிழை யார் எடுத்துச்செல்வது?" உள்ளிட்டவை தமிழ்க்கவிதைகளைப் பற்றிய அவரின் பரந்த அறிதலைச் சொல்பவை.

அவர் தன் முன்னோடிகளைப் பற்றியம் சமகாலத்தவரைப்பற்றியும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசியிருக்கிறார். ஆனால் கொஞ்சம்தான் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. "எப்போதும் வாழும் கோடை" என்கிற நூலும் பதிப்பிலில்லை. அவர் தன் ஞானத்தகப்பனைப் பற்றி எழுதவேண்டும், அக்க மகதேவியைப் பற்றி எழுதவேண்டும், சங்க இலக்கியங்களைப் பற்றி எழுதவேண்டும், தன் வீட்டுப் புத்தக அலமாரியிலிருப்பவர்களைப் பற்றியெல்லாம் எழுதவேண்டும் அல்லது இதுவரை எழுதியதெல்லாம் தொகுக்கப்படவேண்டுமென்பதே இப்போதைய வேண்டுகோள்.

எல்லாவற்றிக்கும் மேலாக உங்களை இறுதியாக எச்சரிக்கிறேன்..... உங்களின் நுண்ணுணர்வை அதிகரிப்பதில் மனுஷ்ய புத்திரனின் கவிதைகளுக்கு முக்கியப் பங்குண்டு, கையாளத் தெரியாவிடில் நெஞ்சுவலி வந்துவிடும், ஜாக்கிரதை.

(27.05.2017 அன்று "மனுஷ்ய புத்திரன் படைப்புலகம்" எனும் தலைப்பில் வாசகசாலை ஏற்பாடு செய்த நிகழ்விற்காக எழுதப்பட்ட கட்டுரை.)