Monday, December 18, 2017

புணர்ச்சி விதிகள்

கல்லுப்பிட்ட
இரத்தச் சிவப்பிற்கு மயங்கி
பால்யத்தில் நான்
வெற்றிலைக்குக்
கை நீட்டியபோது
மாடு முட்டுமென்றாள்
அன்று விட்டவன்தான்
பின்னர்
பத்தாம் வகுப்பில்தான்
திரும்பிப் பார்த்தேன்

முதல் முறையாய்
அக்கா மகளுடன்
வீடு வந்திருந்தவள்
திரும்பிப் போனதும்
புகாரைத் தொடர்ந்தாள்
அவ செரியில்லடா...
வெங்காயங்கூட
வெட்டத் தெரியல...
புள்ளையப் போட்டு
அடிச்சுக்கிட்டே இருக்கறா...

வேறு வழியின்றி நான்
கைபேசியின்
சமீபத்திய புகைப்படம்
ஒன்றை அழித்தேன்.

Tuesday, December 12, 2017

வரலாறு



இப்போது கடந்தோமே பாலம்
காற்று தாளத்துடன்
விட்டு விட்டுக்
காதில் அறைந்ததே
மத்திய அமைச்சர்
திறந்து வைக்கையில்
ரிப்பன் வெட்டிய
அடுத்த நொடியில்
என் தாத்தாதான்
முதல் ஆளாக...
ஒற்றை ஆளாக...
டிவிஎஸ் பிஃப்டியில்
அதைக் கடந்தார்.

தங்கைகளின் வீட்டிற்குப் போவதில்லை

பக்கத்து வீடுதான்
பால்ய சினேகிதம்தான்
அண்ணனுக்குத் தண்ணி குடு
அண்ணங்கிட்ட முறுக்க வையி
அண்ணனுக்கு டீயப் போடு
அண்ணங்கிட்டக் கேட்டுப் படி.

Thursday, June 8, 2017

மனுஷ்ய புத்திரனும் நானும்




மனுஷ்ய புத்திரன் கவிதைகளைப் பற்றி மட்டுமல்ல, வாசித்த எந்தப் படைப்பைப் பற்றியும் சிறு குறிப்பு கூட எழுதும் தன்னம்பிக்கை இன்று வரை இல்லை. நேர்ச்சந்திப்பிலும் ஒரு கையெழுத்து வாங்குமளவுக்குத்தான் தைரியம் இருக்கிறது.

ஒரு கவிஞராக மட்டுமின்றி களப்பணியாளராகவும், பத்திரிகையாளராகவும் பல வருடங்களாகத் தொடர்ந்து பங்களித்து வரும் ஒருவரைக் கௌரவிக்கும் இத்தருணத்தில் வாசகசாலையுடன் இணைந்துகொள்வது மிகுந்த நிறைவளிப்பதாக உள்ளது.
எளிய சொற்களின் வழி எவ்வாறு என்னை இறுக அணைத்துக் கொண்டாரோ அவ்வாறே அவரைத் திருப்பியணைக்க எளிய சொற்களைத் தவிர எதுவுமில்லாததாலும், தலைப்பிலேயே ஐம்பது சதவிகித ஒதுக்கீடு இருப்பதாலும் இக்காரியத்தைச் செய்யத் துணிகிறேன். இதை எழுதுகையில் மூன்று தொகுப்புகள் கைவசமிருப்பதால் அவற்றின் நெடி அதிகமிருக்கும், பொறுத்தருள்க.

சமூக வலைத்தளங்கள் வழி வாசிக்க வந்தேன். அதன் மூலம் சிலர் பெயரைத் தெரிந்து கொண்டு புத்தகக் கண்காட்சிக்குச் சென்ற காலத்தில் மனுஷ்ய புத்திரன் மலிவு விலையில் மெலிந்த தொகுப்புப் போடுபவராக இருந்தது என்னுடைய நல்ல காலம் என்றுதான் சொல்லவேண்டும். நாற்பது ரூபாய் என்பதைத் தாண்டி 'கடவுளுடன் பிரார்த்தித்தல்' தொகுப்பைத் தேர்வு செய்யக் காரணமென்னவென்று எப்படி யோசித்தாலும் நினைவிலில்லை.
ஆனால் அத்தொகுப்பிலுள்ள ஒரு கவிதை மட்டும் என்னை வசீகரித்தது என்பதைவிட எனக்குப் புரிந்தது எனலாம். வகுப்பறையில் நண்பரொருவர் தொகுப்பை வாங்கி, நிதானமாக உரக்க வாசித்து இக்கவிதையின் மூட் -ஐ உச்சரிப்பில் கொண்டுவந்தார்.

இந்தக் கண்கள்
இந்தக் கண்களை மட்டுமே பார்க்கின்றன
அதன் பலவீனங்களை.....

இப்படி நகரும். அப்போது இந்தக் கண்களைக் கொண்டு நான் எத்தனையோ கண்களைக் கண்டுகொண்டிருந்த காலம். இப்படித்தான் அவரை நான் கண்டுகொண்டேன்.


நான் ஒரு அவசரக்குடுக்கை; இப்போது வரை நீளமான கவிதைகளைப் பொறுமையாக வாசிப்பதில்லை. அவர்,

கைவிடப்பட்ட பிச்சைக்காரர்கள்
கைவிடப்பட்ட குடிகாரர்கள்

என்றெழுதும்போது விழியை ஒவ்வோர் முறையும் இடப்பக்கம் திருப்புவதைக் கைவிட்டுவிடுவேன்ஆனால் மனம் உச்சரிக்கும். ஒரே வார்த்தையை திரும்பத்திரும்ப உபயோகித்து அவர் உண்டாக்கும் அழுத்தம் நாம் அறியாததல்ல.
ஆனால் குட்டிக்கவிதைகளின் மீது எனக்குத் தனி விருப்பமுண்டு. ஒரு கவிதைத் தொகுப்பை எடுத்தவுடன் நான் தேடுவது குட்டிக்கவிதைகளைத்தான். இடமும் இருப்பும் தொகுப்பை இந்தக் குட்டிக்கவிதைக்காகத்தான் தேர்வு செய்தேன்.

அழுகை
வராமலில்லை
ஒரு வைராக்கியம்

உங்கள் முன்னால்
அழக்கூடாது

சில வருடங்களில் உதட்டைக் கடித்துக் கொண்டு விழத் தயாராயிருக்கும் கண்ணீருடன் நானே அந்தக் கணத்தில் நின்றேன். அப்போது இக்கவிதை நினைவில் வந்ததாலோ, எனக்கு வைராக்கியக் குறைவென்பதாலோ, அன்பின் கரங்கள் நீளுகையில் அதைத் தட்டிவிட முடியாததாலோ அழுதும் விட்டேன். அதன்பின் சில மாதங்கள் கழித்து ஒன்றுமே தெரியாததுபோல் மனுஷ்ய புத்திரனே கேட்கையில், "யோவ்... முடியாதுய்யா" என்றுதான் சொன்னேன்.

விசும்புகிற தலையைக்
கோதுகிற வேளையில்
ஒரு முறையேனும்
விசும்பாமல்
இருக்க முடிகிறதா
நம்மால்?

நீராலானது தொகுப்பின் புகழ்பெற்ற கவிதைகளில் ஒன்று, "ஒரு பெரிய அவமானத்திற்குப் பிறகு". கல்லூரி இறுதித்தேர்வில் தோல்வியடைந்த நேரத்தில் மனுஷ்ய புத்திரனைத் தேடி எடுத்து மடியில் கிடந்தேன். அராத்து எழுதியதைப்போல, அப்போது அந்தக்கவிதையைப் படித்து அழுதேன் அல்லது அந்தச்சூழலில் எனக்கு அழ ஒரு கவிதை தேவையாக இருந்தது. இப்படித்தான் அந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைத்துப் பின்னர் பல பிரச்சினைகளுக்கு என்னை ஆளாக்கினார்.

நீராலானது தொகுப்பின் முன்னுரையில், கவிதையின் அனைத்துக் கதவுகளையும் திறந்து போட்டுவிடவேண்டுமென்றெண்ணியதைக் குறிப்பிடுகிறார். கவிதைகளின் வலிமையாகிய எளிமையும் நேரடித்தன்மையும் புதிதாக வாசிக்கவருவபருக்கு எச்சிரமத்தையும் தருவதில்லை.

மற்றோர் சிறப்பம்சம் உரைநடைத்தன்மையிலேயே வந்தமரும் ஓசை ஒழுங்கு. ஒரே வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப உபயோகிப்பதால் மட்டுமல்லாமல் சில இடங்களில் இயல்பாகவே அதைச் சாதித்திருக்கிறார். கிணறு தோண்ட ஆட்கள் வந்துவிட்டார்கள் எனத் தொடங்கும் இந்தக்கவிதையில், சின்னஞ்சிறு தாவரமே என்றிறைஞ்சும் குரலில் உள்ள துக்கம் நன்றாகக் கேட்கிறது.

ஒரு நீருற்றைப் போய்ச்சேர
இவ்வளவு பிராசையா
எனக் கேட்கும்
சின்னஞ்சிறு தாவரமே
நீ அறிவாயா
வாடி வதங்கும்
உன் இலைகளின் கருமை
இந்த அந்தியை
எவ்வளவு கருப்பாக்குகிறதென்று

கவிதை பிடிபடவில்லையென்றாலும் திரும்பத்திரும்ப உச்சரித்துப்பார்க்கும் கவிதைகளில் ஒன்றாக இதிருக்கிறது. இது மட்டுமல்ல,

/காணாமல்
போய்விட்டேன்
என்பதற்காக

இல்லாமலேயே
போய்விட்டேன்
என்றாகிவிடுமா,

சொல்?/

/நான்
உனக்காக விட்டுச்செல்லும்
மிகச் சிறந்த பரிசு
என்னைப் பற்றிய வருத்தங்கள்
.....................

என்னைப் பற்றிய வருத்தங்கள்
மட்டும் இல்லையெனில்
இவ்வளவு காதலை
இவ்வளவு கருணையை
எங்கு சென்று மறைப்பாய்?!/

/இருட்டுக்குள் இருந்து
குருடனின்
சுயமைதுனம் பார்க்கும்
ஒரு ஜோடிக் கண்களை
எனக்குத் தெரியும் /

/என்னை நானே
முக்கியமாக
எண்ணிக்கொண்டதைத் தவிர
வேறெந்தத் தவறையும்
செய்யவில்லை/

/அன்பின் வழிமுறைகள் ஏன் இவ்வளவு பதட்டமுடையதாக இருக்கவேண்டும்/

/மக்களை நேசிக்கிற யாவரும் இடதுசாரிகளே/

இப்படிப் பல.

மனத்தின் பல்வேறு வண்ணங்களைப் படிமங்களின் வழியாகவும் நேரடியாகவும் மிக அதிகமாகக் கவிதைகளில் காணமுடிகிறது. அதிலிருக்கும் ஒன்றுக்கும் உதவாதவன் நான்தான், தொட்டாற்சிணுங்கியும் நான்தான். அங்கு கேட்பது நம் அந்தரங்கக் குரல்தான்

இறப்புச் செய்தியை ஏன் தெரிவிக்கவில்லை என்பதற்கு அது உங்களைக் கட்டாயப்படுத்தியது போல் ஆகிவிடுமென்பதுஏப்ரல் ஒன்றில் காதலைச் சொல்பவர்களின் சித்திரம்கேட்கப்படும் எனச் சொல்லாதிருந்தசொல்லப்படும் எனக் கேட்காதிருந்த காதல்கள்பொறாமை என்பது அன்பின் கலங்கிய வடிவம்நியாயம் கேட்கும்போது அழுவதன் காரணம் எனச் சொல்லிக்கொண்டே போகலாம். இக்விதைகள் பேசுவதைப்போல நேரடியாகப் பேசினால் என்ன என்று நினைப்பது பல நேரங்களில் நிம்மதியாகவும் அடுத்தகணமே அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

இவற்றுள் பெண்களின் அக உலகத்தைக் காட்சிப்படுத்திய கவிதைகளுக்கென்று ஒரு தனி வரிசையே இருக்கிறது. அவ்வளவு கூட்டத்துள்ளிருந்தும் தன் முலைகள் பார்வையாலேயே கசக்கப்படுவதை உணரும் பெண், தனியாகவே தூங்கிப்பழகியவள் கணவனுடன் உறங்குகையில் வரும் உளச்சிக்கல், முலைகளை மறைத்துக்கொள்ளாததால் சங்கடத்திற்குள்ளாகும் பெண்கள் என.

கவிதைகளில் வரும் படிமங்கள் நூறு சதவீதம் ஒன்றிப்போகின்றவை. அகப்படாது எனத் தெரிந்தும் பட்டாம்பூச்சிக்குப் பின் செல்லும் பூனை, சக்திக்கு மீறி வெல்லத்துண்டைத் தூக்கிச் செல்லும் எறும்பு, கானல் நீர், தொட்டாற்சிணுங்கிகள், மரவட்டைகள், யானைகள், எத்தனை எத்தனை கிளிகள்... இவற்றிற்கெல்லாம் உச்சமென 'கல்மரம்' (சூரியனுக்கு அருகில் ஒரு வீடு) கவிதையைச் சொல்லலாம். அதன் வரிக்குவரி ஒத்துப்போகிற மரம் ஒன்றை எனக்குத் தெரியும். அத்துயரம் காணச் சகிக்காதது.

மனுஷ்ய புத்திரன் விதைகளை அணுகுவதிலுள்ள தடைகளை எங்கனம் குறைத்தாரோ, அதே அளவுக்கு விதைகளிலுள்ள உடைகளையும் குறைத்தார் எனலாம். நிர்வாண உடலின் கதைகள் எல்லாத் தொகுப்புகளிலும் உலவுகின்றனபாத்திரங்கள் தனித்திருக்கும் வீட்டில் நிர்வாணமாக அலைகிறார்கள்உடை களைகிறார்கள்காமத்தின் பல்வேறு தளங்களைக் கவிதையில் கொணர்கிறார். இப்படியே போனால் உடலுறவின் எல்லாப் பொசிஷன்களுக்கும் கவிதை எழுதியவன் என்கிற பட்டப் பெயரையும் இவர் சுமக்கவேண்டியிருக்கும்

ஆனால் நடு ரோட்டில் தன் யோனியை அறைந்துகொண்டு அழுபவளைக் கடக்க முடியுமா எனப் பார்க்கவேண்டும். முந்தைய இரவில் கொடூரமாகக் கையாண்ட உடலைக் கண்டு பதறுபவனை நாம் ஏனென்று கேட்கவேண்டும். போகத்தில், வலிக்கிறதா எனக் கேட்கையில், கருணையுடன் மறுக்கும் மனத்தையும், விலைமாதின் முலைத்தழும்பைக் கண்டோடுபவனின் முகத்தையும் நாம் ஒருமுறையேனும் காண வேண்டும். ஆயிரமாயிரம் விசித்திரங்கள் இருக்க, இரண்டு முலைகளையும் ஒரு யோனியையும் தவிர எதையும் பார்க்க முடியவில்லையே என மண்டையில் அடித்துக்கொண்டு அழ வேண்டும்.

பாத்திரங்கள் எதாவது செய்துகொண்டே இருக்கிறார்கள். துணியை மடித்து வைக்கிறார்கள், தலைமுடியை அள்ளி முடிகிறார்கள், மழையில் இறங்கி நடக்கிறார்கள். பாத்திரங்களின் செய்கையே கவிதையை உச்சிக்கு எடுத்துச் செல்கிறது. அம்மா முயல் சொன்னதைக் கேட்டுத் தலையை ஆட்டும் குட்டி முயலும், கடற்கரை மணலில் கொட்டும் மழையில் எவ்வளவு முயன்றும் நகர மறுக்கும் சக்கர நாற்காலியுடன் நிற்கும் முதியவளும் இதனால்தான் கண்ணீரை வரவைக்கிறார்கள்.

ஆங்காங்கே சிரிக்க வைக்கும் கவிதைகள் சிலவற்றையும் எழுதியிருக்கிறார். மகத்தான காதல் கவிதை - 2014-ஐ வாசிக்கையில் சிரிப்புத்தான் வருகிறது, முறுமுனையில் நெஞ்சு வெடிக்கும் சத்தம் சற்றுத் தாமதமாகத்தான் கேட்கிறது. "ரெண்டாம் ஆட்டம் முடிந்து உன் புருஷன் எப்போது வீட்டுக்கு வருவான்" என்று காவியத்தலைவியைக் கேட்கையில் விழுந்து புரண்டு சிரித்துவிட்டு, பின்னர் நாமும் ஒரு காலத்தில் காவியத்தலைவனாகத்தானே இருந்தோம் என்றெண்ணித் தலையைத் தொங்கப் போட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.


அரசியல் இயக்கச் சார்புடையவர் என்பதால் வானொலியில் கவிதை தொடர்பான அவரின் உரை இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. அரசியல் இயக்கச் சார்புடையவராய் இருந்தாலும், அதில் ஒலிப்பது கவிஞனின் குரல். பணமதிப்பு நீக்கப்பட்ட காலத்தில் துயருற்ற சாமானியனின் குரல், மாட்டிறைச்சி வைத்திருப்பதாகச் சொல்லிக் கொல்லப்பட்டவரின் குரல், அம்மணமாக்கித் தோலுரிக்கப்பட்டவர்களின் குரல். வன்புணர்த்து கொல்லப்பட்ட சிறுமிகள், கழிப்பறை தேடி அலையும் பெண், இந்தியப் பெண்களும் கரடியும், செக்ஸ் ரோபோக்கள் சந்தைக்கு வந்துவிட்டன, ஒரு கரடியின் வேலைநாள், கடைப்பெண்கள், வேலைதான் நமக்கு எல்லாம் எனத் தொகுப்பெங்கும் துயரக்கதைகள். வெறும் ஸ்டேட்மென்ட்டுகளாக இல்லாமல் உரத்து ஒலிக்கும் ஆதங்கக் குரல்கள்: உப்புப் போட்டுத்தின்று நமக்கு சுரணை வந்துவிட்டதா?, நம் குரலைத் தின்றுவிட்டதா இந்தக் காலம்?, என்ன மாதிரியான கலாச்சாரம் சார் இது?

மனுஷ்ய புத்திரனின் முன்னுரைகளும் கட்டுரைகளும் தனித்துப் பேசப்படவேண்டியவை. அவர் கவிதைகளைப் போலவே முன்னுரைகளும் தாழ்ந்த குரலில், நெகிழ்வுத்தன்மையுடன் அந்தரங்கமாக உரையாடுபவை.

எது கவிதை என்பதற்குக் கீழ் மூர்க்கமாகத் துவங்கி ஓட்டுமொத்தத் தமிழிக்கவிதை வரலாற்றின் பல்வேறு புள்ளிகளைத் தொட்டுச்செல்லும் "எமக்குத் தொழில் கவிதை", தமிழ்க்கவிதைகளை இந்தியக் கவிதைகளுடன் ஒப்பிட்டு எழுதிய "தமிழை யார் எடுத்துச்செல்வது?" உள்ளிட்டவை தமிழ்க்கவிதைகளைப் பற்றிய அவரின் பரந்த அறிதலைச் சொல்பவை.

அவர் தன் முன்னோடிகளைப் பற்றியம் சமகாலத்தவரைப்பற்றியும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசியிருக்கிறார். ஆனால் கொஞ்சம்தான் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. "எப்போதும் வாழும் கோடை" என்கிற நூலும் பதிப்பிலில்லை. அவர் தன் ஞானத்தகப்பனைப் பற்றி எழுதவேண்டும், அக்க மகதேவியைப் பற்றி எழுதவேண்டும், சங்க இலக்கியங்களைப் பற்றி எழுதவேண்டும், தன் வீட்டுப் புத்தக அலமாரியிலிருப்பவர்களைப் பற்றியெல்லாம் எழுதவேண்டும் அல்லது இதுவரை எழுதியதெல்லாம் தொகுக்கப்படவேண்டுமென்பதே இப்போதைய வேண்டுகோள்.

எல்லாவற்றிக்கும் மேலாக உங்களை இறுதியாக எச்சரிக்கிறேன்..... உங்களின் நுண்ணுணர்வை அதிகரிப்பதில் மனுஷ்ய புத்திரனின் கவிதைகளுக்கு முக்கியப் பங்குண்டு, கையாளத் தெரியாவிடில் நெஞ்சுவலி வந்துவிடும், ஜாக்கிரதை.

(27.05.2017 அன்று "மனுஷ்ய புத்திரன் படைப்புலகம்" எனும் தலைப்பில் வாசகசாலை ஏற்பாடு செய்த நிகழ்விற்காக எழுதப்பட்ட கட்டுரை.)




Friday, April 14, 2017

இரண்டாம் காதலியைச் சந்தித்த கதை

நண்பர்களே.... இதை எப்படி ஆரம்பிக்கவேண்டும் என்றே தெரியவில்லை என்று ஆரம்பிப்பது பழைய வழக்கம் என்றாலும் அதுதான் உண்மை. நீங்கள் ஒரு விஷயத்தை உண்மையில் எப்படி ஆரம்பிக்க வேண்டுமென்றே தெரியாத நிலையில் ஏன்றாவது ஒர் நாள் இருந்திருந்தீர்கள் என்றால் உங்களால் இதை எளிதில் விளங்கிக்கொள்ளமுடியுமென்று நம்புகிறேன். அதைப்போலவே, உங்கள் காதலியை பல வருடங்கழித்து எதேச்சையாக சந்தித்திருந்தீர்களென்றால் சொல்லவே வேண்டாம். இல்லையென்றாலும் பரவாயில்லை.

வெயிலின் உக்கிரம் துவங்கும் நேரம். கோயமுத்தூரின் முக்கிய கிளைச்சாலையொன்றில் நடந்துகொண்டிருந்தேன். மனம் புறவிஷயங்களில் கவனம் செலுத்தாததால் கண்டவை எவையும் விழித்திரையைக் கடந்து உள்ளே செல்லவில்லை. பார்த்துவிட்டேன், அவளேதான். பச்சை நிற உடையில் கைப்பையுடன் அதே அதிர்வில்லாத நடை. என் வயிற்றில் ஒரு மாற்றம்.

"மோகனப்பிரியா..."

எங்கோ பார்த்துக்கொண்டு நடந்தவள் சட்டெனத் திரும்பி ஒரு கணம் அதிர்ந்து நின்றாள்.

" மோகனப்பிரியா... என்ன ஞாபகமிருக்கா?... நல்லாருக்கியா?..."

பதில்களில் மனம் ஒன்றவில்லை.

"அப்பறம் இங்க எங்க?" கொஞ்சம் சமநிலைக்கு வந்திருந்து நான் கேட்டேன்.

"இங்கதான் வேல!"

"இங்கயா?!"

"ஆமா"

பக்கத்திலிருந்த கட்டிடத்தின் பெயரைச் சொல்லி, "நாலாவது மாடீல." என்றாள்.

"இங்கயா?!" அதிர்ச்சியில் நான்.

பேச்சைச் தொடர, "நீ... பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரிதான முடிச்ச?!" என்றேன்.

"இல்ல, பயோகெமிஸ்ட்ரி. நீ?"

"நா எம்மெஸ்ஸி. இங்கதான், ஒரு வருஷமாச்சு. இப்பதான் திருவனந்தபுரத்துல வேல கெடச்சிருக்கு. அதான் அட்டஸ்ட்டேசன் வாங்கலாம்னு வந்தேன்."

தலையை ஆட்டிக் கேட்டுவிட்டு இயல்புக்கு வந்தாள். நினைப்பு வந்தவனாய், "அக்காக்கு மேரேஜ் ஆய்டுச்சா?" என்றேன்.

ஆகியிருந்தது. "பூர்ணிமாக்கு கல்யாணமாமா!, கூப்டுருந்தா..." அவளுக்கும் தெரிந்திருக்குமென்ற நம்பிக்கையில் சொன்னேன்.
அவள் அறிந்திருக்கவில்லை. இருவருக்கும் ஏமாற்றம்.

"நானும் போகமுடியாது, நாந்தான் அப்ப அங்கிருப்பனே..." கேரளத்திசையில் கையை உயர்த்திச் சிரித்தேன்.

அலுவலகத்திற்கு நேரமாயிருக்கவேண்டும் அல்லது பேச ஒன்றுமில்லாமல் இருந்திருக்கவேண்டும். ஏதும் பேசாமல் முகம் மாறாமல் நின்றிருந்தாள்.

"ஓக்கே, அப்ப வேல இங்கதான், ஏதாச்சும் பணம் வேணும்னா வந்து வாங்கிக்கலாம்."

சிரித்துக்கொண்டே ஆமோதித்தாள்.

ஆச்சரியமடைந்து அவளைப் பார்க்க முயன்றேன். என் முக மாற்றத்தை கவனிப்பது நன்றாகத் தெரிந்தது.
கொஞ்சம் பதட்டமடைந்திருந்தேன். உள்ளுக்குள் கைபேசி எண் கேட்கலாமாவென்ற சிந்தையோடியது.

அனைத்தையும் நிறுத்திவிட்டு எதுவும் பேசாமல் இடமும் வலமும் பார்த்துவிட்டு மறுபடியும் ஆரம்பித்தேன். நா வறண்டிருந்தது,

"ஓக்கே... நல்லாப் பன்னு... பாப்போம்..."

தலையாட்டினாள். நடைபாதைக்கற்கள் புரண்டிருந்த பாதையில் எதிரெதிர்த் திசைகளில் திரும்பி நடக்க ஆரம்பித்தோம்.
+++++++++++++++++++++++++++++++

கைபேசியெண் வாங்கப்போன கதை
+++++++++++++++++++++++++++++++

கைப்பேசி எண் வாங்காதது ரெம்ப நேரம் உறுத்திக்கொண்டிருந்தது. இரண்டு நாள் கழித்து அதே இடத்திற்குச் சென்றேன். மணி 9.45. பார்த்து வாங்கிவிட வேண்டியதுதான். நிச்சயம் வருவாள், எதிர்வரும் பாதையில் சென்று வாங்கவேண்டுமென்பது திட்டம்.

எதிர்ப்படவில்லை.

திருப்பூர் செல்லும் பேருந்தேறி அமர்ந்து கைப்பேசியை நோண்ட ஆரம்பித்தேன். திடீரென ஞாபகம் வந்தவனாய் சாலையின் மறுபுறம் பார்த்தேன். திருப்பூரிலிருந்த வந்த பேருந்திலிருந்து ஆட்கள் இறங்கி நடந்துகொண்டிருந்தனர். இருக்கையிலிருந்து எழுந்து பேருந்தின் பின்புறக்கண்ணாடி வழியாகப் பார்த்தேன். அவளேதான்.

வெள்ளையும் கத்தரி நீலமும் கலந்த உடையில் நகர்ந்து கொண்டிருந்தாள். கூந்தலில் வெள்ளை நிறப்பூக்கள் நான்கைந்து. இப்போதெல்லாம் முடியை வெட்டிக்கொள்வதில்லைபோலும். இருக்கையிலமர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு பார்த்த அவளது முகத்தை நினைவுக்குக் கொண்டுவர முயன்றேன், தெளிவாக நினைவிலில்லை.

மனதிலிருக்கும் அவளின் அழியாத சித்திரத்தை மீட்டெடுத்தேன். பள்ளிக்கல்வி முடிவுக்குவந்த மார்ச் மாதத்தின் இறுதி அல்லது ஏப்ரல். ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் நண்பனைப் பார்க்கச் சென்றிருந்த மிதிவண்டிப்பயணமது. நகரத்திற்குச் செல்லும் பேருந்து, தாங்கிகள் நெகிழும் ஓசையுடன் தன் மொத்த எடையைக் கால்களால் தாங்கவியலா முதிர்ந்த எருமையைப் போல் மூச்சு வாங்கியபடி நிறுத்தத்தில் வளைந்து நின்றது. குறுக்கே சென்ற செந்நிறப் பசுவொன்று எதிரில் செல்லும் என்னையும் நிறுத்தியது. வலப்பக்கம் திரும்பி பேருந்தின் ஒவ்வொரு சாளரத்தையும் பார்வையால் கடந்து கொண்டிருந்தேன். ஒன்றில் மாறாத புன்னகை. வருடத்திய சினேகத்தை தாங்கி ஊடுருவி நிற்கும் பால் போன்ற தூய கண்கள். சில நொடிகள்தான், காலம் உறைந்து நின்ற அற்புதக் கணம். எதுவும் பேசவில்லை. பதிலுக்குப் புன்னகைத்துவிட்டு இடப்புறம் திரும்பி வண்டியை நகர்த்தி நிகழ்காலத்திற்கு வந்தேன். அந்தக் கண்களின் ஒளி குன்றாதிருக்கட்டும் என நினைத்துக்கொண்டேன்.

14.05.2016
05:27 pm