Showing posts with label விஷ்ணுபுரம்-குமரகுருபரன் விருது. Show all posts
Showing posts with label விஷ்ணுபுரம்-குமரகுருபரன் விருது. Show all posts

Wednesday, May 3, 2023

கவிதை உன்னைச் சும்மா விடாது

விஷ்ணுபுரம்-குமரகுருபரன் விருதுச் செய்தியை வாசித்தபோது ஆய்வகத்தில் இருந்தேன். அறைக்குச் சென்று சில கவிதைகளை மேற்கோள் காட்டி இதை எழுதலாம் என எண்ணியிருந்தேன்; தொகுப்பு வீட்டில். இன்று திரும்பிப் பார்க்கும்போது கவிஞரின் முதல் தொகுப்பு நிறைய அதிர்ச்சிக் கவிதைகளுடன் வந்திருந்தது நினைவிலிருக்கிறது. கூடவே, திருப்பூரைப் பற்றிய கவிதைகள் மனதிற்கு அணுக்கமானவையாக இருந்தன. மொழியில் நல்ல ஓட்டம். அம்மா என்றாலும் பெண்தானே, பிள்ளை என்றாலும் ஆண்தானே எனும் பொருள்படும் கவிதை குறித்த நினைவுகள் இன்னும் நீங்கவில்லை.


இங்கிருந்து https://www.jeyamohan.in/182138/


ஒருமுறை முகப்புத்தகத்தில் நேரலையாக கையில் சிகரெட்டுடன் - (விருது அறிவிப்புப் புகைப்படத்திலும் பேனா அதே லாவகத்துடன் விரலிடுக்கில் அமர்ந்திருப்பதைக் காணலாம்) பிற கவிஞரின் கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தார். "யார்ரா இவன் ஒரே நேரத்தில் ரெண்டு போதையை போடுறான்! நம்ம சொந்தத்துல இவன் ஒரு டைப்பா இருக்கானே?!" என நினைத்துக் கொண்டேன். பிறகு தமிழ் விக்கியிலோ அல்லது அவர் எழுதிய பெருந்தேவியின் கவிதை ரசனைக் குறிப்பிலோ அவர் உயிர்மை பதிப்பகத்தில் இருக்கிறார் என அறிந்து கொண்டேன். பனியன் கம்பெனியில் இருந்து ஒருவர் பத்திரிகைத் துறைக்குப் பாய்வது, அதுவும் கவிதையால் நிகழ்ந்தது என்பது மகிழ்ச்சியாக இருந்தது; இப்போது விஷ்ணுபுரம்-குமரகுருபரன் விருது. அவர் முன் அன்போடு கைநீட்டிச் சொல்கிறேன்: கவிதை உன்னைச் சும்மா விடாது சதீஷ். இன்னும் வெகுதூரம் அழைத்துச் செல்லும்.

அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கே. என். பி. சுப்பிரமணியன் நகர்
திருப்பூர் 641608
------------------------------------
கே. என். பி. சுப்பிரமணியன் நகரில்தான்
பத்து வருடமாக என் உடல் சுற்றிக்கொண்டிருக்கிறது
என் மூதாதையர்கள் போர்கள் இல்லாமலே
அகதிகளானவர்கள்
தற்செயலாகவோ
வரலாறாகவோ
எப்போதும் ஒரு வறுமை
என் நினைவின் நாளிலிருந்து எரிகிறது
நூறு தெருக்கள் உள்ள இந்த நகரில்
இந்தப் பத்தாவது வருடத்தில் ஏழாவதாக மாறிய மூன்றாவது மாடி வீட்டில் வசிக்கிறோம்
கே. என். பி. சுப்பிரமணியன் நகரில்
மரங்களே இல்லை
இந்த நகரத்திலும்
மரங்களே இல்லை
மஞ்சள் அரளி மரங்கள் மட்டுமே உண்டு
அவைகளில் பெரிதாக நிழல்கள் இல்லை
ஆனால் எல்லா மாலையிலும்
இந்த திருப்பூரில்
தான் மட்டும்தான்
ஒரே அழகனெ
ஒரே மலரென பொலிவு காட்டும்
கே என் பி சுப்ரமணியன் தெருவில்
பத்தாண்டுகளாக சுற்றிக் கொண்டிருக்கும்
என்னுடலில்
இதுவரை
போயும் போயும் இந்த மஞ்சள் அரளியில்
ஒரு அரளி கூட கனவாக வந்ததில்லை
செத்த பிறகு பேயாகத் தலைகீழாகத் தொங்க அத்தனை வலுவான கிளைகளும் இல்லை இந்த மலர் மரத்தில்
எத்தனை பத்து வருடங்களாக அத்தனை உடல்கள் இப்படி அலையணுமோ.