Showing posts with label விஷ்ணுபுரம் விருது. Show all posts
Showing posts with label விஷ்ணுபுரம் விருது. Show all posts

Friday, November 18, 2022

சாரு

புனைவுகளை விட கவிதைகளையும் அபுனைவுகளையும் அதிகம் வாசிக்கும் பழக்கமுடையவன் என்று கூறி சாருவின் கட்டுரைகள் எனக்குப் பிடிக்கும் என்றாலும் நடக்கும் விவாதங்களில் அதற்கு மதிப்பிருக்குமா எனத் தெரியவில்லை; என் தகுதி அப்படி. ஆனால், ஒரு வாசகனுக்கு சாரு என்னவாக இருக்கிறார்?! சில நேரங்களில் அவர் படைப்பை வாசித்துவிட்டு இதை அவருக்கு எழுதினால் வசை கிடைக்குமோ என்கிற பயம் கடிதம் எழுதத் தடுத்திருக்கிறது. விஷ்ணுபுரம் விருதை முன்னிட்டு நினைவில் வருபவற்றை எழுதலாம் எனத் தோன்றுகிறது. 

 
நேர்வழியெனினும் கட்டுரைகளுக்குள்ளும் சில வகைகளுண்டு. அந்த ஆட்டத்தில் நடனமொரு பாகமென்றால் அங்கங்கே தெறிக்கும் பொறிகளும் வாசகனுக்கு முக்கியம்.  அவை ஒரு ரசனைக்குறிப்பாகவோ, புத்தக/இட/திரைப்பட/ஆளுமை பெயராகவோ இருக்கலாம். ஆடுபவர் இதையெல்லாம் வழங்கிவிட்டு நேர்வழியில் செல்லலாம், எந்த வாசகன் எந்த இடத்தில் இறங்கிப்போவான் என்று யாருக்குத் தெரியும்?! என் குறுகிய வாசிப்பனுபவத்தில் இப்படி என்னைப் பாதி வழியில் இறக்கி விட்டுச் செல்பவர்கள் மூவர்: சாரு நிவேதிதா, சுகுமாரன், நாஞ்சில் நாடன். சாரு இவ்விருதை ஏற்றுக்கொண்டமை மகிழ்வளிக்கிறது.

மிக முக்கியமாக அவரின் சமூக விமர்சனங்களில் காணப்படும் பகடி மற்ற இடங்களில் காணக்கிடைக்காதது. கட்டுரை நூல்கள் மிக அரிதாகவே சிரிப்பை வரவழைக்கும் என்கையில் இவர் எழுத்தில் வெடிச்சிரிப்பு உறுதி, வயிற்றுவலி போனஸ்.  ஆனால், அவை அதைச் செய்ய எழுதப்படும் நுகர்பொருளா? தமிழக/இந்திய  சமூகத்தை உலகத்துடன் வைத்துப்பார்த்து விமர்சிக்கும் அந்தப் பார்வை நேரமும் உழைப்பும் இன்றி வந்துவிடாது; அவ்விளைபொருளின் அடிப்படை அக்கறை. அரசியல்/கலாச்சார ரீதியாக குடிமக்களாக நாம் இழப்பவை, குறைபடுபவை என்னவென்ன என்பதை எங்கெங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் சொல்லியிருக்கிறார். ஒரு மேடையில் விருது பெற்றுக்கொள்வதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும் உள்ள வேற்றுமையை சொல்லித்தந்தது அவரே. சாரு எழுதும் சினிமா விமர்சனம், விமர்சனம் மட்டுமல்ல; பூனை உணவுப் பிரச்சினை, உணவுப் பிரச்சினை மட்டுமல்ல. 

எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு வாழ்த்துக்கள்.