Sunday, May 31, 2020

ஆசிரியர் தேர்வு முறை - எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில்

கடிதமும் ஜெ.வின் பதிலும்


அன்புள்ள ஜெ,

வணக்கம்.

தமிழகத்தின் கல்விச்சுழல் குறித்து, குறிப்பாக உயர்கல்வித்துறை குறித்து வருந்தாத சிந்தனையாளர்கள் இங்கு இல்லை. அதுகுறித்த கசப்புணர்வும், தூற்றல்களும் தமிழ் வாசிப்புச்சூழலில் புதிதும் அல்ல. இணையம், அச்சு என எவ்வூடகம் வழியேனும் மாதம் ஒருமுறையாவது அதைக் கடக்கிறோம். இப்போது கல்விச் சாதனைகள் என்று நாம் மார்தட்டிக் கொள்ள எதாவது இருக்குமென்றால், அது சென்ற தலைமுறை நமக்கு விட்டுச்சென்றவைகளில் ஒன்று. நிகழ்காலம் தேய்பிறை.

ஆனால், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கோ அது குறித்த அக்கறை சிறிதும் இல்லை. சமீபத்திய உதாரணம், தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள உதவிப்பேராசிரியர் தேர்விற்கான அறிவிக்கை. இதுபோன்ற தேர்வுமுறைக்கென எனக்குத் தெரிந்து இந்திய அளவில் முன்னுதாரணங்கள் இல்லை. இது வேறேதாவது மாநிலத்தில் நிகழ்ந்திருந்தால் ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்கள் போராட்டம் நடத்தியிருப்பார்கள். அப்படியொன்று நிகழ்ந்ததாக எனக்குத் தெரியவில்லை.

இத்தகைய அறிவிக்கை குறித்து ஒருவர் நீதிமன்றம் சென்றார் என்கிறது செய்திக்குறிப்பொன்று.  https://www.hindutamil.in/news/tamilnadu/515308-highcourt-ordered-to-issue-notice-to-teachers-recruitment-board.html  ஆசிரியர் தேர்வு வாரியம் அவ்வழக்கில் வென்றிருக்கிறது, அதனால்தான் இப்போது விண்ணப்பங்களை வரவேற்றிருக்கிறது.

இம்மாத காலச்சுவடு இதழில், கேரளமும் மேற்கு வங்கமும் பேராசிரியர் தேர்விற்குப் பின்பற்றும் முறைகளுடன் தமிழகம் பின்பற்றும் தேர்வுமுறை குறித்த ஒப்பீட்டை ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறேன். https://sannaloram.blogspot.com/2019/10/blog-post.html

மேற்சொன்ன செய்திக்குறிப்பிலும், கட்டுரையிலும் எல்லோருக்கும் புரியும் ஒரு எளிய நீதி இருப்பதாக நம்புகிறேன்.  நீதிமன்றத்தில் வென்றதாலேயே அம்முறை சரி என்பதை நான் ஏற்க மறுக்கிறேன். நான் தவறாகக்கூட இருக்கலாம்; இங்கு எது சரி என்பது தெரிவுபடுத்தப்பட வேண்டும். இது குறித்த ஒரு விவாதம் இங்கு நிகழவேண்டும் என எண்ணுகிறேன். எனவே, இந்தக்கட்டுரையைப் பொதுவில் வைக்கக் கேட்கிறேன்.

இங்கு நேர்மையான வழியில் ஒருவர் பேராசிரியர் பணி நியமனம் பெற விழைந்தால் அதற்கான சூழலை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா என்பதில் எனக்குச் சந்தேகங்கள் இருக்கின்றன. இதற்கு நாம் என்னதான் செய்து விடமுடியும்? மனம் வெதும்பி பக்கங்களை நிரப்பிக்கொண்டிருப்பதைத்தவிர? கசப்பில் இதைக் கடந்து செல்வதைத்தவிர?

அதிகாரத்தில் இருப்பவரோ-இல்லாதவரோ, நம் எல்லோர் பிள்ளைகளும் இச்சூழலில்தானே வளர்ந்தாக வேண்டும்?!

 

நன்றி,
விஜயகுமார்.