Thursday, November 4, 2021

தீபாவளி 2021

வைத்திருந்த ஒரு இதயமும்

இரண்டு மாதங்களுக்கு முன்பு வெடித்துவிட்டது

கொளுத்த வேண்டும் என்றால்

என்னை நானே கொளுத்திக் கொண்டால்தான் உண்டு.

Sunday, August 22, 2021

கோவிட் பெருந்தொற்றும் தனியார் கல்வி நிறுவனப் பணியாளர் நிலையும்

தி இந்து நாளிதழில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம். 

மூலக்கட்டுரை: Weighing down the private unaided college teacher


ஏ பி அருண் கண்ணன் & கிஷோர்குமார் சூர்யபிரகாஷ்


கோவிட் பெருந்தொற்று உலக அளவில் அனைத்துத் துறையினரையும் பெரும் பொருளாதாரச் சீரழிவிற்கு ஆளாக்கியிருக்கிறது. பள்ளிகளும் கல்லூரிகளும் இணையவழி வகுப்புகளுக்கு மாற்றமடைந்துள்ளன. இதைக் காரணம்காட்டி பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மாணாக்கர்களிடம் முழுக்கட்டணத்தையும் வசூலித்துள்ளன. பிற துறைகளுடன் ஒப்பிட்டால் தனியார் கல்வித்துறை தன் நிதிநிலையைப் பாதுகாத்து வருகிறது எனலாம்.

தனியார் கல்வி நிறுவனங்களின் வருமானம் பெருத்த அளவில் இல்லையெனக் கொண்டாலும் அவற்றை உயிர்ப்புடன் வைத்திருக்கும் கட்டண வசூல் அவற்றைச் சார்ந்திருக்கும் ஆசிரியர்களையும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களையும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறதா, அவர்தம் வாழ்வில் அது எதிரொலிக்கிறதா என்றால் இல்லை. பெருந்தொற்றால் ஏற்பட்ட தற்காலிகப் பணி நீக்கமும், ஊதியக்குறைப்பும் அவர்களை வேறு வேலை தேடும் நிலைக்குத் தள்ளியிருக்கின்றன. ஊதியக்குறைப்பால் பனை ஏறும் தொழிலுக்குச் சென்ற தனியார் கல்வி நிறுவன ஆசிரியரின் எதிர்பாராத இறப்பு எங்களை அப்பணியிலுள்ளோரைக் கவனிக்க வைத்தது. சென்னைப்பல்கலைக்கழக தனியார் உறுப்புக் கல்லூரிகளில் பணிபுரியும் 194 உதவிப்பேராசிரியர்களிடம் ஜூன் 13 முதல் 26 வரை நடத்திய ஆய்வில் கிடைத்த தகவல்களை அறியத்தருகிறோம்.

ஆய்வு முடிவுகள்

முதலில் வெளிப்பட்ட அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், பெருந்தொற்றுக்கு முன்பிருந்தே அவர்களின் கல்வித்தகுதிக்கு நிர்ணயிக்கப்பட்டதைவிடக் குறைவான ஊதியமே வழங்கப்பட்டதும், பெரும்பாலானவர்கள் எந்தவித ஊழியர் நலத்திட்டத்திலும் பயனாளிகள் இல்லை என்பதுமாகும்.  ஆய்விற்குட்படுத்தப்பட்ட 194 பேரில் 137 பேர் பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயித்த தகுதிகளைப் பெற்றிருந்தும் (முனைவர் பட்டம் அல்லது மாநில/தேசிய தகுதித்தேர்வில் தேர்ச்சி) அவர்களில் 72% பேர் மாதம் 25,000க்கும் குறைவான உதியத்தையே பெற்றுவருகின்றனர். இங்கு நினைவுகூறப்படவேண்டியது ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைக்கும் உதவிப்பேராசிரியருக்கான ஆரம்பச் சம்பளம் - ரூபாய் 76,804. மேலும், அவர்களில் 38% பேருக்கு மட்டுமே தொழிலாளர் காப்பிட்டுக் கணக்கும், 42% பேருக்கு மட்டுமே சம்பளத்துடன் கூடிய விடுப்பும் உள்ளது.

புதிய தாராளவயக் கொள்கை உயர்கல்வி வழக்கும் பொறுப்பை அரசுகளிடமிருந்து பறித்து தனியார் பங்களிப்பை வரவேற்றது இந்நிறுவனங்களின் அசாதாரண வளர்ச்சிக்கு வழிகோலியது. சென்ற வருடம் நடத்தப்பட்ட உயர்கல்வித்துறை குறித்த ஆய்வில் நாட்டிலுள்ளவற்றில் 65% தனியார் கல்லூரிகள் என்பதும் அதிலும் தமிழ்நாட்டிலுள்ள 77% தனியார் கல்லூரிகள், 1980களின் முற்பகுதியிலிருந்தே கல்வித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதித்ததன் விளைவையும், கல்வித்துறையில் இலாபம் ஈட்டும் தனியார் கல்வி நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

இணையவழிக்கல்வி என்னும் சுமை

இந்தப்பின்புலத்தில்தான் பெருந்தொற்றுக்காலம் தனியார் கல்வி நிறுவனப் பணியாளர்களின் வாழ்வில் ஏற்படுத்துகிற பாதிப்பையும் நாம் மதிப்பிட வேண்டியிருக்கிறது. உதவிப் பேராசிரியர்கள் தம்மால் இயன்ற அளவு முயற்சி செய்து இணையவழிக் கற்பித்தலில் ஈடுபட்டு வருகிறார்கள். நடத்தப்பட்ட ஆய்வில் 88% பேர் இணையவசதி, அறை/இட வசதி, தரமான உபகரணங்கள் உள்ளிட்ட ஏதாவதொன்றில் போதாமையைச் சந்தித்ததாகத் தெரிவித்துள்ளனர். 194 பேரில் 137 பேர் கைப்பேசி, கணினி, ஒலிபெருக்கி/ஒலிவாங்கி என ஏதேனுமொன்றை வாங்கவேண்டியிருந்தது. மிக முக்கியமாக இணையவசதிக்கான செலவையும் ஆசிரியர்களே ஏற்க வேண்டியிருக்கிறது. நிதிநெருக்கடிக் காலத்தில் இவற்றால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாக அவர்களில் 107 பேர் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இணையவழிக்கல்வி தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களைக் கடுமையான உடல், மன, நிதி ரீதியிலான சிக்கல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இருந்தும் அவர்களுக்கான முறையான அங்கீகாரம் குறைந்தபட்சம் ஊதிய அளவிலேனும் வழங்கப்படுவதில்லை. மாறாக, அவர்கள் பல்வேறு வகையான ஊதியக்குறைப்பு நடவடிக்கைகளால் தண்டிக்கப்பட்டு வருகிறார்கள். 2020-2021 ஆம் ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கிற்கு குறைவானவர்களே நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தைப் பெற்றிருக்கிறார்கள். 10% பேர் 2021 ஏப்ரல் முதல் ஜூன் வரை எந்தவித ஊதியத்தையும் பெறவில்லை.

இணையக்கல்விக்கு மாறிய பின்னர் கல்லூரிகளின் நிர்வாகச் செலவினங்கள் குறைந்திருந்தாலும் மாணாக்கர்களிடம் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தவில்லை. எனவே, அவர்களின் சம்பளக்குறைப்பு நடவடிக்கையில் எந்தவித நியாயமும் இல்லை. தனியார் கல்வி நிறுவனங்கள், இப்பேரிடர் காலத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி பல்வேறு கடின சூழ்நிலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களை சுரண்டவே செய்கின்றன.

செல்ல வேண்டிய பாதை

சம்பளக்குறைப்பு நடவடிக்கைகள் பெரும்பாலான ஆசிரியர்களை வேறு வேலைகள் நோக்கித் திருப்பியிருக்கிறது அல்லது கடனாளியாக்கியிருக்கிறது. அவர்கள் பெரும்பாலும் கடின உடல் உழைப்பைக்கோரும் கட்டிட, விவசாய, பழுதுபார்க்கும், உணவு விநியோகிக்கும் வேலைகளை செய்து வருகின்றனர்.

பேரிடர்க்காலம் அவர்களின் வழிவியலை பறிப்பதாக இருந்தாலும் அதற்கு முந்தய காலத்திலும் நிலைமை மெச்சக்கூடியதாக இருந்ததில்லை. அதற்கு காரணம், இத்தகைய அமைப்புகளுக்கென விதிமுறைகள் ஏதும் வகுக்கப்படாததே ஆகும். தமிழக அரசு ஆசிரியர் நலன்கருதி பின்வரும் சில வழிகாட்டல்களைக் குறித்துச் சிந்திக்கலாம்: ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட/வழங்கப்படாத முழு ஊதியமும் வழங்கப்பட வேண்டும். காரணமின்றிப் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் திரும்பவும் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். இணையவழிக் கல்விக்கென அவர்கள் செலவழித்த தொகை திருப்பி வழங்கப்பட வேண்டும்.

கேரள அரசு 2018ஆம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய வரம்பை நிர்ணயித்தது. அதன்படி பல்கலைக்கழ மானியக்குழு நிர்ணயித்த கல்வித் தகுதியைப் பெற்றவர்களுக்கு நாளொன்றுக்கு 1750ம், மாதம் 43750ம், பல்கலைக்கழ மானியக்குழு நிர்ணயித்த கல்வித் தகுதியைப் பெறாதவர்களுக்கு நாளொன்றுக்கு 1600ம், மாதம் 40000ம் வழங்கப்பட்டுவருகிறது. தமிழக அரசும் இதுபோன்ற நெறிமுறைகளை வகுக்கலாம். கூடவே, தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (முறைப்படுத்தும்) சட்டம் 1976 மறு ஆய்வு செய்யப்படல் வேண்டும். இந்நிறுவனங்களில் பணியிலிருக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் உரிமைகளுக்காகவேனும் கல்லுரிக் கல்வி இயக்குனரகம் மற்றும் வட்டார கல்லுரிக் கல்வி இயக்குனரகம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து தனியார் கல்லூரிகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

 

பி அருண் கண்ணன்

சென்னை லயோலா கல்லூரி தொழிற்கல்வி மைய இயக்குநர்

 

கிஷோர்குமார் சூர்யபிரகாஷ்

அமெரிக்காவிலுள்ள எம்ஐடியில் முனைவர்பட்ட ஆய்வாளர் (பொருளாதாரம்)

Tuesday, May 25, 2021

ஊர் கூடித் தேர் இழுப்போம்

 தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்த நேரத்தில் கடைவீதிகளில் முட்டிமோதிய கூட்டம், கோவிட் தொற்று குறித்த சரியான விழிப்புணர்வும், கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படை முன்னெச்சரிக்கைகள் குறித்தும் மக்களுக்கு இன்னும் தெளிவில்லை என்பதையே காட்டுகின்றது. ஆனால், அதை வெளிக்காட்டும் இதுபோன்ற நிகழ்வுகள் முதல் அலையின்போதும், தற்போதும் அதே அளவில் தொடர்வது வருத்தமளிக்கிறது.  

 மருத்துவமனைகளில் இடமில்லாத, கோவிட் தொற்றை எதிர்கொள்ளவேண்டிய வைத்தியமுறைகள் கைப்பேசியில் வந்து நிறையும் இந்த நேரத்தில் கடைவீதிகளில் முட்டிமோதும் ஒவ்வொருவரும் நமக்குச் சொல்லும் செய்தி என்ன? நோய் குறித்த அச்சத்தை விட நோய்ப்பட்டால் தனித்து விடப்படும் நடைமுறை அவலத்தைத்தான்; ஒரு சமூகம் அவர்களுக்குப் பின் இல்லை என்கிற அச்சத்தைத்தான். 

இந்த குறிப்பை எழுதுவதற்காக தமிழகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் உள்ள சொற்ப நண்பர்களிடம் இரண்டு கேள்விகளைக் கேட்டேன்: கோவிட் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உள்ளாட்சிப் பிரதிநிதிகளோ, கட்சி நிர்வாகிகளோ, மாணவர்களோ அல்லது ரசிக அமைப்புகளோ அமைப்பாய்த் திரண்டு உள்ளூரிலேயே உதவி மேசை துவங்கியிருக்கிறார்களா? வீட்டை விட்டு வெளியே வர இயலாத சூழ்நிலையில் அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றித் தருவது யார்? பெரும்பாலோரின் பதில் அப்படி எந்த அமைப்பும் இல்லை என்பதுதான்.

உணவில்லாதவர்கள், பறவைகள், விலங்குகளுக்கு உணவு கொடுக்கும் அமைப்புகள் குறித்த செய்திகள் நிறைய உண்டெனினும் கோவிட் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உதவ, அரசு அமைப்புகளைத்தவிர சமூகத்தின் பங்களிப்பு குறைவாகவே உள்ளதாகவே தோன்றுகிறது. ஒன்றிய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள், முன்களப்பணியிலுள்ள மருத்துவம், காவல், சுகாதாரம், போக்குவரத்து, உணவு உற்பத்தி உள்ளிட்டோரின் பங்களிப்புக்கு அப்பால் ஒரு சமூகமாக நமக்கும் சில கடமைகள் இருக்கின்றன.

இடம்பெயர்வினால் தனிக்குடும்பங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில் கோவிட் தோற்று உறுதி செய்யப்பட்டவுடன் குடும்பங்கள் தனித்து விடப்படுகின்றன. சில இடங்களில் பக்கத்து வீடுகளிலிருந்து தொலைபேசி அழைப்புகள் கூடச் செல்வதில்லை. 

அண்டை மாநிலமான கேரளத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அச்சமூகம் தத்தெடுத்துக்கொள்கிறது. பெரும்பாலான இடங்களில் அரசியல் அல்லது ரசிக அமைப்பைச் சேர்ந்தவர்கள் களத்தில் இருக்கிறார்கள். சமூக இடைவெளியுடன் நால்வர், உதவிக்கு அழையுங்கள் என்று கைப்பேசி எண்கள் தாங்கிய சுவரொட்டிகள், ஒரு மேசை, இரு நாற்காலிகள், வாகனங்கள் என்கிற எளிய அமைப்பு. அவர்களுக்குத் தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படத்தேவைகளை உணர்ந்தும் கேட்டும் இச்சேவையை இலவசமாகவோ அல்லது சிறுதொகைபெற்றோ செய்துவருகிறார்கள்.



பெருந்தொற்றுக்காலம் போர்க்காலம்; எதிரி நம் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிரேயன்றி நோய்த்தொற்றாளர்கள் அல்ல. தனித்திருப்பவர்களுக்காக விருப்புவெறுப்பு அச்சம் கடந்து எல்லோரும் களத்தில் ஒன்றிணையவேண்டிய நேரமிது.

Thursday, January 21, 2021

அதிகாரிகள் என்பதும் அதிகாரம் என்பதும்

புலம்பெயர் வாழ்வில் வீட்டிற்கும் நமக்கும் அதீதத் தேவையாயிருப்பது பண்டிகைக் காலங்கள். பதிமூன்று மாதங்களுக்குப் பிறகான பயணம். உடல் வெப்பம், கைப்பை என எச்சோதனைகளுமின்றி திருவனந்தபுரத்தில் இருந்து திருப்பூருக்குத் தொடர்வண்டி ஏறினேன்; பயணம் கிட்டத்தட்டப் பதினோரு மணிநேரம். எல்லா நேரமும் அமர்ந்திருக்க இயலாது. நிறைய இடங்களைத் தொட வேண்டும். இரண்டு முறை உண்ண வேண்டும்; குறைந்தபட்சம் நான்கு முறையேனும் கழிக்க வேண்டும். 

கை சுத்தத்திற்கு ஆல்கஹால் உள்ள சானிடைஸர்கள் போதா. அவற்றை உபயோகித்தாலும் கை கழுவாமல் உண்ண இயலாது. கழிப்பறைகளிலோ, கை கழுவும் இடங்களிலோ சோப்பு எந்த வடிவிலும் இல்லை. 

ட்விட்டர் கணக்கும் ஆங்கிலமும் இருந்ததால் @RailwaySeva-க்கு எழுதினேன். 
பிஎன்ஆர், வண்டி, கைப்பேசி எண்கள் கேட்கப்பட்டதால் கொடுத்தேன். இருபது நிமிடத்திற்குள் ஒரு அழைப்பு. ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அம்மொழியிலேயே பதில்களைச் சொன்னேன். பின்னர் குறைகள் பதிவு செய்யப்பட்டதை உறுதி செய்யும் எண்களைக் தாங்கிய சில குறுஞ்செய்திகள் ஆங்கிலத்தில்.

ஐந்து நிமிடத்தில் சீருடைப் பணியாளர்கள் சிலர் இந்திக் கேள்விகளுடன் முன்நின்றனர்‌. இந்தியும் இல்லை சோப்பும் இல்லை என்று காற்றில் கைகழுவி விளக்கினேன். பத்து நிமிடத்தில் காலியான குடிநீர் பாட்டிலில் சோப்பு நீர் வந்தது; நன்றியுடன் பெற்று உபயோகிக்கையில் நுரை வரவில்லை. இதற்கு ட்விட்டரில் எதுவும் சொல்ல வேண்டாமென விட்டுவிட்டேன்.

எர்ணாகுளத்தில் மலையாளம் எழுப்பி சோப்பு கிட்டியோ என்றது. கழிவறைக்குள் பாருங்கள் என்றேன் தமிழாளத்தில். பார்த்தபின் நிலைமை புரிந்து நான்கு ரூபாய் மதிப்புள்ள பதினைந்து கிராம் சோப்புக்கட்டியைக் கொடுத்துச் சென்றார்.

நடந்தவை அனைத்தையும் உடனிக்கும் பயணிகள் கவனித்து வந்தனர்; ஏதோ தனிச்சலுகை கோரிப் பெறுபவனைப்போல வெட்கமாக இருந்தது.

இங்கு பேசப்பட வேண்டியவை இரண்டு.

1. தொற்றுநோய்க் காலம் மட்டுமின்றி எல்லாக் காலத்திலும் ஒரு சேவையைப் பெற நமக்குத் தடையாய் உள்ள மொழி, இணைய, பொருளாதாரக் காரணங்கள்.

2. ஒரு பொதுப்பிரச்சினையை தனிமனிதப் பிரச்சினையாக மட்டும் அணுகும் மனப்பாங்கு. 

ட்விட்டரில் @RailwaySeva-க்கு மறுபடியும் எழுதினேன்: எனக்குக் கிடைத்தது மற்றவருக்குக் கிடைக்கவில்லை. மற்ற பெட்டிகளின் நிலையோ, வண்டிகளின் நிலையோ எனக்குத் தெரியவில்லை. அனைத்துப் பெட்டிகளிலும் சோப்புகள் வைக்கப்பட வேண்டும்; இது கேட்டுப் பெறவேண்டிய சேவையாக இருக்கக்கூடாது. அனைத்துப் பயணிகளும் சமமாக நடத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும்.

எதிர்பார்த்தபடியே எவ்விதப் பதிலும் இல்லை. 
அதிகாரம் என்பதும் அதிகாரிகள் என்பதும் பாவனைகளோ என்று தோன்றுகிறது.