Showing posts with label மலையாளம். Show all posts
Showing posts with label மலையாளம். Show all posts

Tuesday, July 9, 2019

கவிதைகள் - கல்பற்றா நாராயணன்





பிறந்த நாள்

பிறந்தநாள்ப் புலரியில்
கைகளை விரித்தவாறே  
மகளோடி வந்தாள்
அப்பா, இந்த விரல்களுக்கு மூன்று வயதாகியோ?
மூன்றாம் வயது
விரல்வரை வந்துவிட்டதா எனத் தெரியவில்லையெனினும்
கிட்ட நெருங்கிக்கொண்டிருக்கிறது,
நான் சொன்னேன்
ஆம்.

இந்த மச்சத்திற்கோ?
அதற்கும்.
அவளுக்கது அத்தனை பிடிக்கவில்லையென்று  தோன்றிற்று.
அது என்னுடனே வளர வேண்டாம்.
காண்போரெல்லாம்
கன்னத்தைத் தொட்டு முத்தினார்கள்.
கன்னத்தை யார் தொடுவதும் அவளுக்கு விருப்பமில்லை.
அதிகவனத்துடன் சவரம் செய்கையில்
-சவரம் செய்கையில்
சவரச்சத்தம் நிசியில் தொடர்வண்டியைப் போல-
அவளென்னை வேதனைப்படுத்தும்விதம் கேட்டாள்;
இதையும் கொஞ்சம் ஷேவ் செய்து விடுகிறீர்களா?

இந்தக் காலிற்கும் மூன்று வயதாகியோ?
என்றாள் நம்பிக்கை குறைந்த தொனியில்.
காலுயர்த்திக் காட்டுகிற சாகசத்தில்
நீர் நிரம்பியிருந்த பாத்திரம் சரிந்து
மேசைப்புறம் நனைந்தது.
ஆம், கிட்டத்தட்ட.
அவளோடு அது ஓடத்துவங்கி
ஒன்றரை வருடங்களே கடந்திருந்தன.
அதுவும் துவக்கத்தில் தயங்கித் தயங்கி.
அதற்கு எத்தனையோ காலம் முன்பே அவளோடத்துவங்கியிருந்தாள்.

இந்தப் பல்லிற்கோ?
இம்முறை அம்மை இடைமறித்தாள்.
இரண்டிற்கு இரண்டேகால் வயது
மற்றவை ஒவ்வொன்றிற்கும்
இரண்டும், ஒன்றரையும், ஒன்றேகாலும்.
இதற்கு மூன்று மாதம்
என் செல்ல மகளே;
அம்மையின் விரல்களால்
அவளதைத் தொட்டுணர்ந்தாள்
என் செல்லக்குட்டி.

இந்தக் காதிற்கோ?
எனக்குத் தெரியவில்லை.
அவளதைக்கொண்டு நேற்றுக் கேட்டதல்ல
இன்று கேட்பது.
இந்தக் கண்ணிற்கோ?
தெரியவில்லை.
அவளதைக்கொண்டு நேற்றுக் கண்டதல்ல
இன்று காண்பது.
அவள் உதிர்க்கும் சொற்களுக்கு
அவளுடையதல்ல வயது.
சிலதிற்கு ஐநூறோ ஆயிரமோ.
அவளிப்போது அறுவடை செய்கிறாள்.
பலவும் அனேக வருடங்களுக்கு முன்பு யாரோ விதைத்தது.

என்றால் எனக்கு மட்டுமா மூன்று வயது?
ஆமோதிக்கத்தான் வேண்டுமோ?
நானவளுக்கோர் உண்மை சொன்னேன்,
என் செல்ல மகளே
உன்னில் எதற்கும் மூன்று வயதல்ல.




இத்தனை அதிகம் காதலித்தால்

இத்தனை அதிகம் காதலிக்கப்பட்டும்
அவள் பிரியத்தான் விரும்பினாள்
தோழிக்கும் எழுதினாள்
காண்கையிலெல்லாம்
என்னைத்தான் பார்க்கிறான்
உற்றுநோக்கலின் சூட்டில்
முட்டை விரிவதைப்போல்
என் முலைகள் விரியுமென்று
நம்புவபனைப்போல,
அவை விரிகையில்
வெளிப்படும் சிசுக்களை
வளர்த்தியெடுப்பவனைப்போல.
விரல்களை இழுத்துச் சுவைக்கிறான்
அதற்குள் ஒன்றுமில்லையென
எத்தனை முறை சொல்லியும்
அவனுக்குப் புரிவதில்லை.
ஓரிரவில்
கோடரி கையிலெடுத்து
அவனிடம் சொன்னேன்:
விடியும்முன்னே என்னை
முழுதும் கிரியிடு
சின்னச்சின்னத் துண்டுகளாக.
பதின்மத்தில்
அம்மா பலமுறை அழைத்தும் போகாமல்
ஜன்னல் வழி நான் கண்டுநின்ற
மழுப்பணிக்காரனைப்போல, ஒரு தயவுமில்லாமல்.
அவனோ சந்தையில் வாங்கிவந்த
ரோஜா இதழ்களைத் தேகத்திலிட்டான்.
சிலிர்க்கிறதெனக்கு.
சிநேகம்
எத்தனை தாங்கவியலா ஒன்று!
நீ சொல்வதைப்போலேயே அல்ல
சிநேகிக்கப்படுவதில் ஒரு சுகமுமில்லை
சிநேகிப்பதில்தான்.




வயநாடு மாவட்டம் கல்பட்டாவில் பிறப்பு. தற்போது கோழிக்கோடு மாவட்டம் கொல்லத்தில் வசிக்கிறார். கவிஞர், நாவலாசிரியர், இலக்கிய, சமூக விமர்சகர். இலக்கியப்பணிகளுக்காக பஷீர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப்பெற்ற இவருக்கு 2018-ஆம் ஆண்டிற்கான ‘பத்மபிரபா’ இலக்கிய விருதும் வழங்கப்பட்டுள்ளது. இவருடைய 'இத்ர மாத்ரம்' என்னும் நாவல் தமிழில் 'சுமித்ரா' என்னும் பெயரில்  கே.வி.ஷைலஜா அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவருடைய கவிதைகள் சிலவற்றை 'கல்பற்றா நாராயணன் கவிதைகள்' என இணையத்தில் தேடியும் படிக்கலாம். இவ்விரு கவிதைகளும் 2017 ஆகஸ்ட்டில் 'மாத்ருபூமி புக்ஸ்' வெளியிட்ட 'கருத்த பால்' என்னும் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. கவிதைகள் கவிஞர் மற்றும் பதிப்பாளரின் முன் அனுமதியின்றி வெளியிடப்பட்டுள்ளன.

(NIIST Magazine 2019)

Tuesday, March 27, 2018

Sexy Durga / S Durga / இரு துர்க்கைகள்

கபீருக்கும் துர்க்கைக்கும் இடையில் காதலும் மதமும். துர்க்கை எதுவாக ஆனாலும் அவள் லவ் ஜிகாதின் இலக்கெனப்படுவாளென்பதால் கபீர் கண்ணனாக முயல்கிறான். அதுவும் நம்மவர்களுக்குப் போதவில்லை. காதலே வெல்வதால், கபீரும் துர்க்கையும் பயணப்படுகிறார்கள். எங்கு போவது? தெரியாது. குறைந்தபட்சம் ரயில் நிலையத்திற்காவது போகலாமில்லையா?! தங்கச்சிப் பாப்பாக்களின்றி மாளிகைக்கடைக்குக் கூடப் போகமுடியாத துர்க்கைகள், நள்ளிரவில் ஆண் துணையிருந்தாலும் ரயில் நிலையத்திற்குப் போவது அவ்வளவு எளிதா என்ன?!


அதே ஊரில் இன்னொரு துர்க்கை வசிக்கிறாள். வெகுகாலத்திற்கு முன்பே சிலையானவள். அதனால் வழிபாட்டிற்கும் கொண்டாட்டங்களுக்கும் குறைச்சலில்லை.

இந்த முரணையும் இவர்கள் இருவரையும் படம் பின்தொடர்கிறது.

http://ddnews.gov.in/entertainment/kerala-hc-says-screen-s-durga-iffi-ministry-considers-challenging-order

சனல் குமார் சசிதரனின் மூன்றாம் படமிது. இரண்டாம் படம், ஓழிவு திவசத்தே களி - விடுமுறை நாள் ஆட்டம். தன் கதை சொல்லல் முறைக்காக பெரிதும் கொண்டாடப்பட்ட இந்தப்படத்தின் கதையாசிரியர் உண்ணி.ஆர். படமாக வெளிவருவதற்கு முன்பே, சுகுமாரனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, உயிர்மை பதிப்பகம் வாயிலாக காளி நாடகம் எனுந்தலைப்பில் புத்தகமாகவும் வெளிவந்தது.


இந்தப்படத்திலும் கதாப்பாத்திரங்களைப் பின் தொடரும் கேமிரா, முன் தீர்மானிக்கப்படாத வசனங்கள், தொடர் ஒளிப்பதிவு போன்ற சிக்னேச்சர் யுக்திகள்.
புறப்பட்ட இருவரும் உதவி கேட்டு ஒரு காருக்குள் எற, காரும் கதையும் நகர்கின்றன. பெரும்பாலான காட்சிகள் காரினுள். என்ன நடக்கப்போகிறது என்பதைப் பார்வையாளர், இதை வாசிப்பவர் என எவரும் யூகிக்க இயலும். எனினும், அதை எங்கனம் திரைக்கதையாக்கியிருக்கிறார்கள் என்பதே படத்தை சுவாரஸ்யப் படைப்பாக்குகிறது.

இரவுக்கு வேறு முகம்; இருளில் நமக்கும். இருளில் நடக்கும் அத்துமீறல்கள் அனைத்தையும் படம் காட்சிப்படுத்துகிறது. நள்ளிரவில் ஆயுதக்கடத்தல் செய்வபர்கள், காவல்துறை, முன்பின் அறியாதவர்களிடம் பஞ்சாயத்தை துவங்கும் வெள்ளை வேட்டிகள் என. காரில் ஏறிய நொடி துவங்கிய மீறல் மெல்ல மெல்ல நகர்ந்து நமது கழுத்தையும் நெரிக்கிறது.

ஒளிப்பதிவாளருக்குத் தனியே கை தட்ட வேண்டும். ஒவ்வொரு காட்சியும் குறைந்தபட்சம் மூன்று நிமிடங்களிலிருந்து இருபது நிமிடங்கள் வரை நீள்கின்றன. புகுந்து விளையாடியிருக்கிறார். புகுந்து விளையாடியிருக்கிறார் என்றால் நிஜமாகவே. இரண்டு மூன்று 360 டிகிரி காட்சிகள். அதுவும் ஒரு காருக்குள்; காருக்குள்ளிருந்து கேமரா மேலெழும்பி காரின் முதுகிலேறி தலையைச் சுற்றிவிட்டு மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்து சேர்க்கிறது. படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது காவல் துறையினர் வருகிற சிங்கிள் ஷாட்டும் அவர்களின் நடிப்பும்.

காரின் டிக்கியில் இருந்தவாறு பதிவு செய்யத் துவங்கும் கேமரா, படம் நகர நகர, காட்சிகளுக்கேற்ப பின்னிருக்கை, டேஷ் போர்டு, டிரைவருக்கு முன் என நகர்ந்து நகர்ந்து இறுதிக்காட்சியை காருக்கு முன் சாலையில் அமர்ந்து பதிவு செய்கிறது.

இறுதியை நெருங்கும்போது மெல்ல  வந்து சேர்ந்து கொள்ளும் பின்னணி இசையும் பதைபதைப்பைக் கூட்டும் பணியைச் செவ்வனே செய்கிறது. ஒரு செல்ல நாய்க்குட்டிபோல் அறிமுகமாகும் கார் கொடுமிருகமாகி நம்மை அதிரச்செய்யும் மாயாஜாலம் பின்னணி இசையாலும் ஒளி அமைப்பாலுமே நிகழ்கின்றன.

முழுப் படத்தையும் யாருடைய புத்திசாலித்தனமும் தொந்தரவு செய்வதில்லை. வசனங்களுக்கிடையில் வலிந்த நகைச்சுவைகளில்லை, பொன்மொழிகளேதும் திணிக்கப்படவில்லை. நடப்பதை மட்டும் பதிவுசெய்து துர்க்கையின் உடல் நடுக்கத்தைப் பார்வையாளருக்கும் கடத்துகிறது.

படத்தின் இந்த ஒரு காட்சியை மட்டும் எழுதாமல் தவிர்க்க இயலவில்லை. களேபரச் சத்தம் கேட்டு வீடொன்றின் கதவுகள் திறக்கப்படுகின்றன. யாராவது வரமாட்டார்களா எனப் பதைத்த நாமும் கொஞ்சம் தளர்ந்து அமர்கிறோம். கனவான், மனைவியுடன் வெளிப்படுகிறார். சப்த மூலத்தை ஆராய்கிறார். எந்தச் சலனமும் இன்றி வீட்டின் நான்கு கதவுகளையும் அடைத்துவிட்டு உறங்கச் செல்கிறார். நான்கு கதவுகள் வைத்துக் கட்டுவதே நன்றாக உறங்கவேண்டும் என்பதற்குத்தானே?!

படம் துவங்கும் முன் ஒரு சம்பவம். இதை எப்படியும் விலக்கிப் பார்க்க இயலவில்லை. இருக்கை எண் 12 & 13-ல் நண்பரும் நானும். ஒரு குடும்பம் எங்கள் வரிசைக்கு வருகிறது; மகள் 10-ல் அமர  உடன் வந்தவர் 9-ல். எங்களை எட்டிப் பார்த்த பிறகு அவர் என்ன நினைத்தாரோ, காலியாயிருந்த 11-க்கு மாறி அமர்ந்தார்.

சிறுமிக்கு எத்தனை வயதெனத் தெரியவில்லை. எந்த வயதென்றாலும் நாம் இதுவரை அறிந்தது, சிலையானாலே ஒழிய துர்க்கைகளுக்குப் பாதுகாப்பில்லை என்கிற உண்மையைத்தானே?