Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

Friday, April 21, 2023

நந்திதா தாசின் ஸ்விகாட்டோ

நந்திதா தாசின் படங்கள் அவர் தன் காலத்திற்குச் செய்யும் எதிர்வினையோ எனத் தோன்றுகிறது. குஜராத் வன்முறைக்குப் பின்னான காலத்தில் நிகழும் கதைகளின் தொகுப்பான ஃபிராக் (2008), அதன்பின் வெளிவந்த மண்டோ* (2018) வரிசையில் பெருந்தொற்றுக் காலத்தில் கருப்பெற்றுக் குறும்படமாகச் செய்யவிருந்த படம் ஸ்விகாட்டோ. கண்ட- கேட்ட கதைகளின் வழி முழுப்படமாக உருவாகியிருக்கிறது. ஊரடங்கு நேரத்தில் மருத்துவ சேவையினருக்கு அடுத்து அதிகளவில் மக்களுடன் தொடர்பு கொண்டிருந்த உணவு கொண்டுவந்து சேர்ப்பவர்களின் கதை. 

https://www.newsbytesapp.com/news/entertainment/everything-we-know-about-kapil-sharma-s-zwigato/story


வீட்டிலிருந்தபடியே வேலை, இணையவழிக் கல்வி என ஊரடங்கு புதிய நடைமுறைகளைக் கொண்டு வந்தாலும் அவை சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர், தர உறுதி செய்யும் அமைப்பாளர், பொறியாளர், கட்டிடப் பணியாளர் போன்றோர்க்கு வீட்டிலிருந்து செய்ய வேலையென எதுவும் இல்லை. அப்படி வேலையிழந்தவர்களில் ஒருவர்தான் மனஸ்.

நாம் இருவர் நமக்கு இருவர் என்னும் நடுத்தரக் குடும்பம் மனஸ் - பிரதிமா தம்பதியினருடையது. உடன் படுக்கையோடொன்றிவிட்ட தாய். ஸ்விகாட்டோ நிறுவனத்தில் பணியாற்றும் பல லட்சம் பேரில் ஒருவர் மனஸ். பள்ளிக் குழந்தைகள் எப்படித் தம் காலணியை புதுப்பித்துக்கொள்கிறார்களோ அதைப்போல தன் தினத்தைப் புதுப்பித்துக் கொள்ள மனஸுக்கு ஒரு வாக்கியம் இருக்கிறது: இன்று நான் பத்து டெலிவரி செய்வேன். பத்து டெலிவரியை இலக்கெனக் கொண்ட எவர்க்கும் உயிர்ப்பயம் இல்லை, சாலை விதிகள் இல்லை, நிற்கவோ, நீர் - உணவு அருந்தவோ நேரம் இல்லை. 

பிரதிமா இல்லம் சமைக்கிறாள். மனஸின் வருமானம் போதமாலாகவே,  வணிக வளாகமொன்றில் தூய்மைப்பணிக்கெனத் தேர்கிறாள். வசீகரமான சீருடை, மனஸைவிட அதிக சம்பளமிருந்தும் அவருக்கு அதில் விருப்பமில்லாததால் வீட்டிலேயே இருக்கிறாள்.

நிறுவனம் - தொழிலாளர் - நுகர்வோர் என்கிற சங்கிலியில் தேவையின் பொருட்டு சந்தித்துக்கொள்வது மனிதர்கள் மட்டுமல்ல. மனிதர்கள் சந்திக்கும்போது அவர்களின் சாதிகள் சந்திக்கின்றன, மதங்கள் சந்திக்கின்றன, இருவேறு வர்க்கங்கள் சந்திக்கின்றன. இத்தகைய முரண்கள் சந்திக்கும் புள்ளியில் ஏராளம் கதைகள் பிறக்கின்றன. 

மனஸைத் தொடரும் கதையெனினும் இது மத்திய வர்க்கக் குடும்பமொன்றின் கதை, வர்க்கங்களின் கதை. துப்புரவுப் பணியாளர்கள் - அவர்களிலும் சுரண்டப்படும் பெண்கள், குப்பை சேகரிப்பவர்கள், மிதிவண்டியைக் கொண்டு உணவு சேர்ப்பிக்கும் வேலையில் நுழையமுயலும் வாலிபன், மேட்டுக்குடி இளைஞர்கள், பள்ளி முதல்வர் உள்ளிட்ட செல்வந்தர்கள் என அனைவரும் சந்திக்கும்புள்ளி இயல்பாகக் கோர்க்கப்பட்டிருக்கிறது. கூடவே, அச்சந்திப்புகள் நிகழும் களம், உரையாடல்கள்வழி உறவுகளுக்குள் நிலவும் மனக்குறைகளும் அசமத்துவமும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சமகாலத்திற்குப் பல அடிகள் பின்னே நிற்கும் தொலைக்காட்சித் தொடர்கள், குழந்தைகளின் உலகில் தொலைக்காட்சியைப் பதிலீடு செய்திருக்கும் இணையம் - சமூக வலைத்தளங்கள் எனப் பேசவேண்டிய ஒவ்வொன்றையும் படம் தொட்டுச் செல்கிறது.

கணவனுடனான தனித்த பொழுதுகளை இழக்கும் மனைவி, சிறந்த மாணவியெனினும் தந்தை பார்க்கும் வேலையால் கேலிக்குள்ளாகிக் குறுகிப்போகும் மகள், அப்பனின் சுமையைப் பின்னிருக்கையிலமர்ந்து சுமக்கும் மகன் எனப் புதிய வேலை மொத்தக் குடும்பத்தையும் உள்ளிழுத்துக்கொள்கிறது. வேலை தரும் அழுத்தம் மனஸைக் கனவிலும் வேலை தேடப் பணிக்கிறது. தன்னுடைய எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கும் நிரந்தரப் பணி என்னும் தொடர்கனவு அவரைத் தூங்க விடுவதில்லை. வேலை இழந்தபின் கனவும் நிஜமும் ஒன்றென ஆகுமிடத்தில் வேலை பெற்றுத்தரும் விண்ணப்பத்தைத் தேடி அலைகிறார். ஒரு பொத்தானை அழுத்தினால் வேண்டுவன வீட்டிற்கு வரும் நாட்டில், ஒரு பொத்தானை அழுத்தி வரி கட்டவியலும் நாட்டில் ஒரு விண்ணப்பத்தால் நிரந்தர வேலை கிட்டத்தானே வேண்டும் என்கையில் அரங்கம் மனஸின் அறியாமையை நினைத்துச் சிரிக்கிறதா அல்லது தன் நிலையைப் பொருத்திச் சிரிக்கிறதா எனத் தெரியவில்லை.

வேலையின்மை பெருகிவரும் நாட்டில் 'பலருக்கு வேலையளிக்கிறோம்' என்னும் உணவு சேர்ப்பிக்கும் நிறுவனங்கள் மனிதத்தன்மையுடன் நடந்துகொள்கின்றனவா என்கிற வலுவான கேள்விகள் படம் நெடுக வருகின்றன. இணையத்தின் உதவியால் தொடர்ந்து கண்காணிக்கப்படும் ஊழியர்கள், மீறல்களுக்கு விதிக்கப்படும் உடனடித் தண்டனைகள், வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் தரவு சேகரிக்கவும் என உருவாக்கும் புதுப்புது வியாபார யுக்திகள், கருணையுடன் பேசும் மனிதத்தன்மையற்ற இயந்திரக் குரல் எனப் படம் முழுக்க நிறுவன வன்முறைகள். அனைத்தையும் அனுமதிக்கிற நாட்டில், எப்போதும் வேலை வேண்டி ஆட்கள் வரிசையில் - பேருந்து நிறுத்தங்களில் நிற்கிற நாட்டில், வேலை வேண்டாம் என சீருடையைக் கழற்றி எறிவது எவர்க்கும் அவ்வளவு எளிதல்ல என்பதையும், அப்படி எறிந்தாலும் அதை எடுக்க ஆட்களிற்கும் நிலையில் நிறுவனம் என்னும் அமைப்பு பணியாளர் ஒருவரை நோக்கி எப்போது வேண்டுமானாலும் ‘வெளியே போ’ எனச் சொல்லலாம் என்றமைந்திருக்கிற சௌகரியத்தையும் படம் நிகழ்த்திக்காட்டுகிறது.

நிறுவனம் - தொழிலாளர் - நுகர்வோர் உறவின் இருண்ட பக்கங்களைச் சுட்டிக்காட்டி இப்படம் எதிர்நோக்குவது அதிரடிப் புரட்சி அல்ல. மாறாக எளிதில் மாறாத இந்த முரணான அமைப்பில் ஊழியர்களிடம், சமூகத்தின் அடுத்த நிலையில் இருப்பவர்களிடம், நம்முடைய தேவையைப் பூர்த்தி செய்யும்பொருட்டுக் கதவைத் தட்டுபவர்களிடம் கொஞ்சம் கருணையுடன் நடந்துகொள்ளவேண்டும் என்கிறது, அவர்களைக் கண்ணியமாக நடத்தக் கேட்கிறது.

சமூகத்தின் படிநிலைகளைக் கச்சிதமாகச் சித்தரித்ததில், கதாப்பாத்திரங்களைத் தன்னியல்பில் நிகழவிட்டதில், பிரச்சார நெடியோ, பரிதாபமோ உணர்வோ ஏழாதவகையில் திரைக்கதையை அமைத்ததில் நந்திதா தாசும் சமீர் பாடிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். எனினும் இதே பணியைச் செய்யும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் வேறு விதமானவை, ஆண்களினதைக் காட்டிலும் விரிவானவை; படம் அதையும் பதிவு செய்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

கபில் சர்மா (மனஸ்) - சஹானா கோஸ்வாமி (பிரதிமா) இணையர்களாக நடித்திருக்கின்றனர். பெரும்பாலானவர்கள் மேடை நடிகர்கள், திரைக்குப் புதுமுகங்கள். நிகழ்களம் இந்திப் படங்களால் அதிகம் பதிவு செய்யப்படாத ஒடிஷா மாநிலம் புவனேஷ்வர். வர்க்க அரசியலையும் இடர்பாடுகளையும் பேசும் படத்தில் எந்த வசனமும் அழுகையும் வலிந்து திணிக்கப்பட்டது போலில்லை. ஆங்காங்கே வரும் ஒற்றை வரிகள் அரங்கைச் சிரிப்பால் நிறைக்கின்றன. சாகர் தேசாயின் பின்னணி இசை இருப்பே தெரியாத அளவுக்குப் படத்துடன் ஒன்றிப்போயிருக்கிறது. படத்தின் இறுதியில் வரும் வரைகலையும் இசையும் படம் சொல்லவந்ததை வெகுவாக உயர்த்திப்பிடிக்கின்றன. 

சமூக முரண்களை விமர்ச்சிக்கும் படத்தில் அவை இல்லாத இடங்கள் ஏதேனும் தென்படுகிறதா எனப் பார்த்தால் ஆரம்பக்காட்சியொன்று நினைவுக்கு வருகிறது. குப்பை வண்டியுடன் வரும் சிறுவன் பிரதிமாவிடம் நீர் கேட்கிறான். அரைமணிநேரத்திற்கும் மேலாக பிரதிமாவைக் கண்டவன் என்பதால் அவள் பகிர்வது நிதமும் அருந்தும் நீரின் ஒரு பகுதிதான், கொடுப்பது அவள் குடிக்கும் குவளையில்தான் எனச் சொல்கிறேன், அல்லது அப்படியே நம்ப விரும்புகிறேன்.

---
*படத்திற்கு முன்னும் பின்புமான அனுபவங்களை மண்டோவும் நானும் என்கிற புத்தகமாக எழுதியிருக்கிறார், இன்னும் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை.


உயிர்மை இணைய இதழ் 
https://uyirmmai.com/news/news-articles/article-nadita-das-zwigato-vijayakumar/

Saturday, October 13, 2018

சேராத காதலின் துயர்

நிறைய விமர்சனங்களைக் கண்டதால் எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருந்தன. இடைவேளைக்குப் பின்னான காட்சிகள் அதைக் கொஞ்சம் பூர்த்தி செய்தன எனலாம்.

காதலின் பிரத்யேக குணங்களான அணுகுதல்-விலகுதல், தயக்கம், அருகிருத்தல், இயலாமை, சமூக நிர்பந்தத்திற்கும் ஆழ்மன விழைவிற்கும் இடையேயான மனக்குழப்பம், காத்திருப்பு எனப் பல நுண்ணிய தளங்களைத் தொட்டுச்சென்ற படங்களின் வரிசையை இவ்வாறு அமைப்பேன்.

1. இன் த மூட் ஃபார் லவ்
2. மயக்கம் என்ன
3. 96
4. என்னு நிண்டெ மொய்தீன் (மலையாளம்)
5. சார்லி (மலையாளம்) - முதியவரின் காதல் காட்சிகள்.

மௌனத்தை இட்டு நிரப்பும் இடங்கள், காட்சி அமைப்பு, பின்னணி இசை, எனப் பல அம்சங்கள் மேற்கண்ட படங்களுடன் இதை ஒப்பிடத் தோன்றுகிறது. குறிப்பாக, ஜானுவிடம் தட்டை வாங்கி உணவருந்தும் காட்சியின் பின்னணி இசையும், ஹோட்டல் காரிடோரில் நடக்கும் காட்சியும் 'இன் த மூட் ஃபார் லவ்' படத்தை நினைவிலிருந்து எழுப்பின.


https://www.imdb.com/title/tt7019842/


சேராத காதல் கொணரும் துயரம் அசாதாரணமானது. அது உண்டாக்கும் வெற்றிடத்தை எதைக்கொண்டும் நிரப்ப இயலாது என்பதை ராமச்சந்திரன்கள் நன்கு அறிவார்கள். அதனால்தான் அதற்குத் தன் வாழ்வையே விலையாய்த் தருகிறார்கள்.

ராமச்சந்திரன்கள் அழியா நினைவுகளைக் கொடுப்பதாலேயே காதலில் வெல்கிறார்கள்; ராமச்சந்திரன்கள் குற்ற உணர்வைக் கொடுத்துக் காதலில் வெல்கிறார்கள். ராமின் காதலுக்கு நிவர்த்தியாவது ஜானுவின் உடலோ, சேர்த்து வாழ்தலோ அல்ல; அவளின் கண்ணீரே. ஆம், நம் ஆழ்மனம் வேண்டுவது அதைத்தான். பிரியத்திற்குள்ளோரின் சிநேகத்தைவிட கண்ணீரின் அடர்த்தி அதிகமானதில்லயா?!

சேராத காதலுக்குப்பின், ஒரு காதலின் தோல்விக்குப் பின், தன் வாழ்வையே பணயமாய் வைத்து எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் எல்லா இடங்களிலிருந்தும் விடுவித்துக்கொள்வதும், மறைத்துக்கொள்வதும், மறைந்தே போவதும் அந்த ஒரு துளி கண்ணீருக்குத்தனா? அதன் தித்திப்பிற்குத்தானா?!

காதலின் மதுரமும், உவர்ப்பும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.

Monday, July 16, 2018

Watch Out


Court- Marathi – 2014
Camera goes behind a person accused, lawyers, judge involved in a case and measures the distance between their life and carrier.


In the mood for love – Chinese - 2000
Two individuals, post marriage, living in next doors, can’t resist falling in. After knowing their partners also not so concerned witness what they decided. Much celebrated for the perfect blend of music and visualization. Available on YouTube.


Kakoos – Tamil - 2017
Records the physiological & psychological struggles faced by the manual scavengers of Tamilnadu who goes in to the places even camera couldn’t. Available on YouTube.


Kelin – Kazakhstan - 2009
Apart from well-being and war what remained as the fundamental responsibility of mankind? How it transformed in a period where no language exists?


Leela – Malayalam - 2016
Based on the short story of Unni. R, camera follows Kuttiyappan who wants to fulfill his desire in a country where individual rights are prominent, where strict laws against violence on woman exists. Did he reached the edge of it? Does anyone helps him?


Newton – Hindi - 2017
Records the struggle in conducting polling in an area where none of the government welfare scheme reached. Documents issues like existing child marriages, language politics and entire film shuttles between use and misuse of power between a polling officer and army men.


Onaayum Aatukkuttiyum – Tamil - 2013
Story of wolf, known for bundle of crimes who tries to save few goats from criminals. What drives him to do so by putting his life on line? Night and music are characters here. Available on Hotstar.


Poetry – Korean - 2010
A woman at the early stage of Alzheimer’s wants to write poems. Parallelly she enters into a conflict because of her grandson. Is she come out of that? Just remembering words makes a poet? Available on YouTube.


Sairat – Marathi - 2016
Portrays love blossoms between two in college and their life after they flew out from home. Witness who stands at last to document their life.

The way home – Korean - 2002
May remind your grandmother. Available on YouTube.




(Published in NIIST Magazine 2018)

Tuesday, March 27, 2018

Sexy Durga / S Durga / இரு துர்க்கைகள்

கபீருக்கும் துர்க்கைக்கும் இடையில் காதலும் மதமும். துர்க்கை எதுவாக ஆனாலும் அவள் லவ் ஜிகாதின் இலக்கெனப்படுவாளென்பதால் கபீர் கண்ணனாக முயல்கிறான். அதுவும் நம்மவர்களுக்குப் போதவில்லை. காதலே வெல்வதால், கபீரும் துர்க்கையும் பயணப்படுகிறார்கள். எங்கு போவது? தெரியாது. குறைந்தபட்சம் ரயில் நிலையத்திற்காவது போகலாமில்லையா?! தங்கச்சிப் பாப்பாக்களின்றி மாளிகைக்கடைக்குக் கூடப் போகமுடியாத துர்க்கைகள், நள்ளிரவில் ஆண் துணையிருந்தாலும் ரயில் நிலையத்திற்குப் போவது அவ்வளவு எளிதா என்ன?!


அதே ஊரில் இன்னொரு துர்க்கை வசிக்கிறாள். வெகுகாலத்திற்கு முன்பே சிலையானவள். அதனால் வழிபாட்டிற்கும் கொண்டாட்டங்களுக்கும் குறைச்சலில்லை.

இந்த முரணையும் இவர்கள் இருவரையும் படம் பின்தொடர்கிறது.

http://ddnews.gov.in/entertainment/kerala-hc-says-screen-s-durga-iffi-ministry-considers-challenging-order

சனல் குமார் சசிதரனின் மூன்றாம் படமிது. இரண்டாம் படம், ஓழிவு திவசத்தே களி - விடுமுறை நாள் ஆட்டம். தன் கதை சொல்லல் முறைக்காக பெரிதும் கொண்டாடப்பட்ட இந்தப்படத்தின் கதையாசிரியர் உண்ணி.ஆர். படமாக வெளிவருவதற்கு முன்பே, சுகுமாரனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, உயிர்மை பதிப்பகம் வாயிலாக காளி நாடகம் எனுந்தலைப்பில் புத்தகமாகவும் வெளிவந்தது.


இந்தப்படத்திலும் கதாப்பாத்திரங்களைப் பின் தொடரும் கேமிரா, முன் தீர்மானிக்கப்படாத வசனங்கள், தொடர் ஒளிப்பதிவு போன்ற சிக்னேச்சர் யுக்திகள்.
புறப்பட்ட இருவரும் உதவி கேட்டு ஒரு காருக்குள் எற, காரும் கதையும் நகர்கின்றன. பெரும்பாலான காட்சிகள் காரினுள். என்ன நடக்கப்போகிறது என்பதைப் பார்வையாளர், இதை வாசிப்பவர் என எவரும் யூகிக்க இயலும். எனினும், அதை எங்கனம் திரைக்கதையாக்கியிருக்கிறார்கள் என்பதே படத்தை சுவாரஸ்யப் படைப்பாக்குகிறது.

இரவுக்கு வேறு முகம்; இருளில் நமக்கும். இருளில் நடக்கும் அத்துமீறல்கள் அனைத்தையும் படம் காட்சிப்படுத்துகிறது. நள்ளிரவில் ஆயுதக்கடத்தல் செய்வபர்கள், காவல்துறை, முன்பின் அறியாதவர்களிடம் பஞ்சாயத்தை துவங்கும் வெள்ளை வேட்டிகள் என. காரில் ஏறிய நொடி துவங்கிய மீறல் மெல்ல மெல்ல நகர்ந்து நமது கழுத்தையும் நெரிக்கிறது.

ஒளிப்பதிவாளருக்குத் தனியே கை தட்ட வேண்டும். ஒவ்வொரு காட்சியும் குறைந்தபட்சம் மூன்று நிமிடங்களிலிருந்து இருபது நிமிடங்கள் வரை நீள்கின்றன. புகுந்து விளையாடியிருக்கிறார். புகுந்து விளையாடியிருக்கிறார் என்றால் நிஜமாகவே. இரண்டு மூன்று 360 டிகிரி காட்சிகள். அதுவும் ஒரு காருக்குள்; காருக்குள்ளிருந்து கேமரா மேலெழும்பி காரின் முதுகிலேறி தலையைச் சுற்றிவிட்டு மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்து சேர்க்கிறது. படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது காவல் துறையினர் வருகிற சிங்கிள் ஷாட்டும் அவர்களின் நடிப்பும்.

காரின் டிக்கியில் இருந்தவாறு பதிவு செய்யத் துவங்கும் கேமரா, படம் நகர நகர, காட்சிகளுக்கேற்ப பின்னிருக்கை, டேஷ் போர்டு, டிரைவருக்கு முன் என நகர்ந்து நகர்ந்து இறுதிக்காட்சியை காருக்கு முன் சாலையில் அமர்ந்து பதிவு செய்கிறது.

இறுதியை நெருங்கும்போது மெல்ல  வந்து சேர்ந்து கொள்ளும் பின்னணி இசையும் பதைபதைப்பைக் கூட்டும் பணியைச் செவ்வனே செய்கிறது. ஒரு செல்ல நாய்க்குட்டிபோல் அறிமுகமாகும் கார் கொடுமிருகமாகி நம்மை அதிரச்செய்யும் மாயாஜாலம் பின்னணி இசையாலும் ஒளி அமைப்பாலுமே நிகழ்கின்றன.

முழுப் படத்தையும் யாருடைய புத்திசாலித்தனமும் தொந்தரவு செய்வதில்லை. வசனங்களுக்கிடையில் வலிந்த நகைச்சுவைகளில்லை, பொன்மொழிகளேதும் திணிக்கப்படவில்லை. நடப்பதை மட்டும் பதிவுசெய்து துர்க்கையின் உடல் நடுக்கத்தைப் பார்வையாளருக்கும் கடத்துகிறது.

படத்தின் இந்த ஒரு காட்சியை மட்டும் எழுதாமல் தவிர்க்க இயலவில்லை. களேபரச் சத்தம் கேட்டு வீடொன்றின் கதவுகள் திறக்கப்படுகின்றன. யாராவது வரமாட்டார்களா எனப் பதைத்த நாமும் கொஞ்சம் தளர்ந்து அமர்கிறோம். கனவான், மனைவியுடன் வெளிப்படுகிறார். சப்த மூலத்தை ஆராய்கிறார். எந்தச் சலனமும் இன்றி வீட்டின் நான்கு கதவுகளையும் அடைத்துவிட்டு உறங்கச் செல்கிறார். நான்கு கதவுகள் வைத்துக் கட்டுவதே நன்றாக உறங்கவேண்டும் என்பதற்குத்தானே?!

படம் துவங்கும் முன் ஒரு சம்பவம். இதை எப்படியும் விலக்கிப் பார்க்க இயலவில்லை. இருக்கை எண் 12 & 13-ல் நண்பரும் நானும். ஒரு குடும்பம் எங்கள் வரிசைக்கு வருகிறது; மகள் 10-ல் அமர  உடன் வந்தவர் 9-ல். எங்களை எட்டிப் பார்த்த பிறகு அவர் என்ன நினைத்தாரோ, காலியாயிருந்த 11-க்கு மாறி அமர்ந்தார்.

சிறுமிக்கு எத்தனை வயதெனத் தெரியவில்லை. எந்த வயதென்றாலும் நாம் இதுவரை அறிந்தது, சிலையானாலே ஒழிய துர்க்கைகளுக்குப் பாதுகாப்பில்லை என்கிற உண்மையைத்தானே?