Thursday, February 6, 2014

நானும் புத்தகக்கண்காட்சியும்



              ட்விட்டரிலிருந்து கொஞ்சகாலம் விலகியிருந்தாலும் வாய்ப்பிருக்கும் போதெல்லாம் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு சமயம் திருப்பூர் புத்தகக் கண்காட்சி சம்பந்தமாக, நடக்கும் நாட்கள் குறித்து ஒருவர் (@manipmp என நினைக்கிறேன்.) போட்ட ட்வீட் கண்ணில் பட்டது. தேதிகள் 31 முதல் 9 வரை என்பது நினைவிலிருந்தாலும் மாதங்கள் சரியாக நினைவிலில்லை. டிசம்பர் 31 முதல் ஜனவரி 9 வரை என்றே நினைத்திருந்தேன். இம்முறை வேடிக்கை மட்டும் பார்க்காமல் சில புத்தகங்கள் வாங்கிவிட வேண்டுமென முடிவெடுத்துக் காத்திருந்தேன்.


புத்தாண்டுக்குப் பின் வந்த சனிக்க்கிழமையொன்றின் பின்மாலைப் பொழுதில்.....(ஆஹா...!)

பக்கத்து வீட்டிலிருக்கும் 12 ஆம் வகுப்புத் தோழர்களையும், பால்ய நண்பனையும் கண்காட்சி நிகழ்விடத்திற்க்கு வரச்சொல்லிவிட்டு கோயமுத்தூரிலிருந்து பேருந்தேறினேன். திருப்பூருக்கு வந்து சேரும் முன்னரே "டேய்எங்கடா நடக்குது கண்காட்சி?! இங்க ஒன்னையும் காணோம்" எனச் சூடான வார்த்தைகள் காதில் விழுந்தபோதுதான் என் ஆழ்மன சந்தேகம் தீர்ந்தது. கண்காட்சி ஜனவரி 31ல் தான் துவங்குகிறது என உறுதியாகத் தெரிந்து கொண்டேன்.

"அது ஏற்கனவே நடந்து முடிஞ்சுருச்சாம்..", ''இந்தமாசம் 31 க்குத் தள்ளி வெச்சுட்டங்களாம்.." எனப் பல ராஜதந்திரங்களை பயன்படுத்தியும் அவையனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. உரிமையோடு கோபித்தவனின் கோபத்தை ஒரு முட்டை பஃப்ஸ் தீர்க்குமென அனுமானித்து அத்திட்டத்தைச் செயல்படுத்தி இறுதியில் வெற்றி கண்டேன்.


சென்ற வருடம் அவ்வளவாகப் புத்தக வாசிப்புப் பழக்கமில்லையென்றாலும் கையிறுப்பு 100 ரூபாயை வைத்துக்கொண்டு நண்பனுடன் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். அது எனக்கு கண்காட்சியாகத்தான் இருந்தது. புத்தகம் வாங்கவேண்டுமென்ற ஆர்வத்தைவிட செலவழித்துவிடக்கூடாது என்ற உணர்வே அதிகமாயிருந்தது. நெஞ்சவர்ணக்கிளி, இட்லியாய் இருங்கள் உள்ளிட்ட சில புத்தகங்களை அந்த அரங்கிலேயே அரைகுறையாய்ப் படித்துவிட்டு, நிச்சயமாய் அடுத்தவருடம் ஏதாவது வாங்கவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் வெளியே வந்தேன்.

நேற்றுத் தேர்வு முடிந்ததும் புறப்பட்டு 6 மணிக்கெல்லாம் திருப்பூரை அடைந்தேன். பயணிக்கையில் எந்தப் பதிப்பகங்களுக்கெல்லாம் செல்லவேண்டுமென முடிவு செய்திருந்தேன். முடிந்தவரை அதிக அளவிலான மலிவுவிலைப் புத்தகங்களை, இருக்கிற பணத்தைக்கொண்டு  வாங்க வேண்டும் என்ற முடிவோடுதான்  நண்பர்களோடு அரங்கிற்குள் நுழைந்தேன்.

ட்விட்டர், ஃபேஸ்புக்-ல் பேசப்படும் பல எழுத்தாளர்களின்  புத்தகங்களையும், அங்கிருந்து அச்சிற்கு வந்தோரின் புத்தகங்களையும்  அரங்கில் காண முடிந்தது. பெரும்பாலும் கவிதைத் தொகுப்புகளே என் விருப்பமென்பதால் புத்தகங்களைத் தேர்வுசெய்கையில் லதாமகன் அவர்களின் ட்விட்டர்  #t1kavithai பதிவுகள் பெரிதும் உதவியாக இருந்தன.

ட்விட்டுகளின் வாயிலாக அறிமுகமான எழுத்தாளர்கள் பா.ராகவன், என்.சொக்கன், சி.சரவணக்கார்த்திகேயன் மற்றும் அராத்து போன்றோரின் புத்தகங்களைக் காணமட்டுமே செய்தேன். சிலவற்றை ஆர்வமில்லாததாலும், சிலவற்றில் ஆர்வமிருந்தும் விலை பற்றிய எண்ணத்தால் வாங்காமலேயே வந்துவிட்டேன்.

காலச்சுவடு அரங்கில் புத்தகங்களைத் தேர்வுசெய்துவிட்டு பணம் செலுத்தச் சென்றபோது அங்கு அமர்ந்திருந்த ஒருவர் என் கையிலிருந்த 'இசை'யின் கவிதைத் தொகுப்பைப் பார்த்துவிட்டுச் சொன்னார்,

"சிவாஜிகணேசனின் முத்தம் வாங்கிகப்பா, 'இசை'யோடது..நல்லாருக்கும்.."

என்னுடைய தேர்வினைக்காட்டி ஒருவர் பேசுகையில் அவரிடம் பேசவேண்டுமென்ற ஆர்வந்தொற்றிக்கோண்டது..

"படிச்சுருக்கீங்களா..?" என்றேன்.
(என்ன ஒரு அற்புதமான கேள்வி.!, வீடு திரும்புகையில் நினைத்துச் சிரித்துக்கொண்டேன்.)

"ம்.."

என் பணப்பையின் எடை குறைந்திருந்ததை நன்றாகவே அறிந்திருந்தேன். அவருக்காக பர்ஸை ஒருமுறை பார்த்துவிட்டு, "இப்ப எங்கிட்ட காசு இல்ல சார்.!"னேன்.

"சகுந்தலாதேவியின் முத்தமா இருந்தா வாங்கிருப்பாரு..." பில் போட்டுக்கொண்டிருந்தவர் சொல்லிச்சிரித்தார்.

"கண்டிப்பா..." இது நான்.

"அதுக்கு கொஞ்சம் செலவாகுமேப்பா...!"

"அதுக்காக எவ்வளவு செலவானாலும் பரவாயிலீங்க..."

பேசிக்கொண்டிருக்கையில் முன்னர் பேசியவரின் செல்ஃபோன் ஒலித்தது.

"எங்கிருக்கீங்க..? வந்தாச்சா?"

"செரி..வாங்க. இப்பதான் உங்க புத்தகத்த இளைஞர் ஒருத்தர் வாங்கறார்.."

அது 'இசை'தான், யூகித்தேன். ஆர்வமிகுதியால் ஃபோனுக்காக அவரிடம் கையை நீட்டிவிட்டேன். உண்மையில் அவர் பெயரைத்தவிர எனக்கு அவரைப்பற்றி எதுவுமே தெரியாது. அவரின் ஒரேயொரு கவிதையைப் படித்து மறந்திருந்தேன்.

"இப்ப வந்துருவாரு...அவர் இருகூர்தான்." ஃபோனை வைத்துவிட்டுச் சொன்னார்.

வந்தவுடன் அடையாளங் கண்டுகொள்வதற்காய் அவர் புத்தகத்தைத் தேடி பின்னட்டையைப் பார்த்துவைத்துக் கொண்டேன்.

அங்கேயே நின்று பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருக்கையில் அவர் வந்துவிடவே உடனிருப்பவர் என்னையழைத்து அறிமுகஞ் செய்து வைத்தார்.

"வணக்கம் சார், உங்கள சந்திச்சது சந்தோஷம்..." சொல்லிக் கை குலுக்கினேன்.

பதில் வணக்கஞ் சொன்னவரிடம் என்னதான் பேசுவது?! முதல்முறை அவர் தொகுப்பை வாங்குவதாகவும், அறிமுகமானது லதாமகனின் பதிவு மூலமாகவும் என்று சொன்னேன்.
"லதாமகன்?!".
புரிந்துகொண்டார்.

"நீங்க எந்த ஊரு..?"

"இங்க அவினாசிக்கு பக்கத்துல இருக்கேங்க.."

"இவுரும் அவினாசிதாம்ப்பா.." முன்னவரை அறிமுகப்படுத்தினார்.

அப்போதும் கூட அவர் யாரென்று கேட்கத் தோன்றவில்லை... "பூண்டில இருந்து 2 கிலோமீட்டர் உள்ள போகனும் சார்" என்று சொல்லி பேச்சை முடித்துக் கொண்டேன்.

"ஒரு ஆட்டோகிராஃப் போட்டுத் தறீங்களா...?" புத்தகத்தை நீட்டினேன்.

"அதெல்லாம் எதுக்குப்பா? விடு." தோளைத்தட்டி மறுத்தார்.

"போட்டுக்குடுங்க சார்... ஃபிரெண்ட்'ஸ்ட காட்டி சீன் போட்டுக்குறேன்.." கையெழுத்து வாங்கிவிடவேண்டுமென்ற எண்ணத்தில் சொல்லி புத்தகத்தை நீட்டினேன்.

"போட்டுக்குடுங்க... ஆசப்படுறார்ல" அருகிலிருந்தவர் சொல்லி பேனாவும் பரிந்துரையும் கொடுத்தார்.

கையொப்பமிட்டுவிட்டு பேரைக்கேட்டார். கையொப்பத்தின் மீது எழுதிக்கொடுத்தார், "விஜிக்கு..."

சிறிது நேரம் நண்பனுக்காக அங்கேயே காத்திருந்தேன்...அரங்கிலிருந்த ஒருவர் ஒரு புத்தகத்தைக் காட்டி "இது இவர் எழுதுனதுதான்.." என்று சொல்லி 'இசை'யின் அருகிலிருந்தவரைக் காட்டினார்.
'சிவாஜிகணேசனின் முத்தம்' வாங்கச் சொன்னவர், இசையிடம் தொலைபேசியில் பேசியவர், கையொப்பத்திற்கு பேனா கொடுத்தவர், அவினாசிக்காரர்தான் அவர். புத்தகத்தைப் பார்த்தேன், பெயரிட்டிருந்தது

"கே.என்.செந்தில்"

அவரைப் பார்த்தேன்.
"நம்மளே சொல்லிக்கிட்டா நல்லாருக்காதில்லப்பா..." சிரிப்பைப் பரவவிட்டுவிட்டு கடந்தார்.
பின்பு நினைத்துப் பார்த்தேன், நம்மோடிருக்கும் நெருங்கினவர்களைப் பற்றியே தெரிந்துகொள்ளாத போது இது பெரியவிஷயமாகப் படவில்லை.

வெளியே வருகையில் முகப்புத்தகப் பதிவர், பதிவுகளைப் புத்தகமாக வெளியிட்டிருந்தவர் (அம்பாரம்) 'லெனின்' அவர்களைச் சந்தித்தேன்.
இணையத்திலும் அறிமுகமில்லாததால் அறிமுகப்படுத்திக் கொண்டேன்,பரிசல்காரன் அவர்களின் பதிவில் பார்த்ததாகச் சொல்லிக்கொண்டு பேசிக்கொண்டிருந்தேன். நண்பர்கள் வரவே விடைபெற்றோம்.

தேவதைகளின் வரத்து குறைவாகவே இருந்தது.
 .
வீடு திரும்புகையில் புத்தகம் வாங்கச் சென்ற இடத்தில் கற்றுக்கொண்டவைகளே மனதில் ஓடிக்கொண்டிருந்தது... உரையாடக் கற்றுக்கொள்ள வேண்டும்.!

"சமூக வலைத்தளங்களினால் கேடு" என்பதை வெளியிலிருந்து சொல்பவர்களைக் கடக்கையில் இவைகளைத்தான் நினைத்துக்கொள்கிறேன்...

இங்கு ஆரம்பகால நேர விரயங்கள், ஆபாசங்கள் போன்றவற்றையெல்லாம் சந்தித்திருக்கிறேன். இருந்தும் இது எனக்குத் தெரியாத நிறைய விஷயங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது, சொல்லிக்கொடுத்திருக்கிறது, எதேதோ எழுதவும் தூண்டியிருக்கிறது.

இவற்றையெல்லாம் என் நிலையாய் மட்டும் நான் பார்க்கவில்லை... பல முகப்புத்தகப் பதிவுகளில் புத்தகக் கண்காட்சிப் புகைப்படங்கள், அவர்கள் வாங்கிய புத்தகங்களின் தொகுப்புகளைச் சொல்லும் பதிவுகள் போன்றவற்றைக் காணுகிறேன். அத்தகையவற்றிற்கான விமர்ச்சனங்களையும் காணுகிறேன்.
பகட்டுக்காகப் பதிவிடுவதாயினும், அது இயல்பினதாயினும் எழுதுகின்றவருக்கான இன்பத்தைத் தருவதோடு  அது ஒருபோதும் நின்றுவிடுவதில்லை. அது நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ எதோ ஒரு தாக்கத்தை படிப்பவருக்கு ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது...
வெளியில் இத்தகையோரைச் சொற்பகாலத்தில் கண்டறிவது அரிதாகவும் இருக்கிறது.  
இத்தளங்கள் நம்முள் இருக்கும் நம்மீதான அதீத நம்பிக்கைகளை சில நேரங்களில் உடைத்தும் விடுகிறது, சின்னஞ்சிறு திறமைகளுக்கு அங்கீகாரமும் அளிக்கிறது.
இவை எல்லாவற்றிற்குப் பின்னும் அழகான மனிதர்கள் இருக்கிறார்கள்.!


வாங்கியவை:
தேசாந்திரி  - எஸ்.ராமகிருஷ்ணன்
துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்
இன்னொரு கேலிச் சித்திரம் - கல்யாண்ஜி
இடமும் ருப்பும் - மனுஷ்ய புத்திரன்
உறுமீங்களற்ற நதி - இசை
எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை - ச.விஜயலட்சுமி
உலோகருசி - பெருந்தேவி    


நன்றி.!


Tuesday, November 19, 2013

Daytour

                                                                                      "சந்தோசமா இருக்க பணம் தேவையில்ல,மனசிருந்தா போதும். போய்ட்டு வாங்க:-/"      HOD இதச் சொல்லித்தான் பணப்பிரச்சனை காரணமா வரமாட்டேன்னு சொன்னவங்களோட நடந்த பேச்ச முடிச்சுவச்சாங்க...சத்தியமங்கலத்துல இருக்க ஒரு சக்கரை ஆலைக்கு போறதுக்கான பேச்சுதானது. போறதுக்காக முதல்ல போட்ட திட்டத்துல வந்த ஒரு சின்ன மாற்றத்துனாலதான் அவசரமா இந்த முடிவ எடுக்கவேண்டியதாப் போச்சு. அது என்னான்னு சொல்றதுக்கு இங்க கண்டிப்பா ஒரு கொசுவர்த்திச் சுருள போட்டுத்தான் ஆகனும்..

சில நாட்களுக்கு முன்...

Lab-ல இருக்கும் போது பொறுப்பாசிரியர் வந்து, "இங்க பாருங்கப்பா... நாம இந்த மாச கடைசி வாரத்துல ஒரு நாள் பெங்களூர்ல இருக்குற ****** pharmaceuticals-க்கு IV போலாம்னு இருக்கோம், அதுக்கான permission வாங்குற வேலையெல்லாம் நடந்துட்டு இருக்கு, சீக்கிரம் சொல்றோம், நீங்களும் ready-ஆ இருங்க"னு சொன்னாரு.(That இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே moment)

கொஞ்ச நாள்ல, அந்த நாள் செப்டம்பர் 24ன்னு முடிவாச்சு.அதுக்கப்புறம் Bus-ல போறதால குடுக்க வேண்டிய பணத்த கணக்குபோட்டு பாக்கும்போது செலவு அனுமானிச்சதவிட கொஞ்சம் அதிகமாத்தான் இருந்துச்சு..காலக்கெடு கம்மியா இருந்ததால Train-லயும் Reserve-பன்னி போகமுடியாதுன்னு தெரிஞ்சதுக்கப்புறம் பெங்களூர் பயணம் இனிதே தள்ளி வைக்கப்பட்டது.
பிறகு வாங்குன Permission வீணாய்டக்கூடாதுன்றதுக்காக அதே தேதில போகனும்னு முடிவு செஞ்ச இடம்தான் சத்தியமங்கலம்.!




செப்டம்பர் 24,அதிகாலை 3 மணி...,

நல்லா தூங்கீட்டு இருந்தேன்.


 4:30 மணிக்கு alarm அடிச்ச பின்னாடி எந்திரிச்சு கிளம்பி நண்பர்களோட Collegeக்கு 6:30கிட்ட வந்து சேந்தேன். வழக்கம்போல, Fix பன்ன நேரத்த விட 1 மணி நேரம் கழிச்சு எல்லாரும் (Teachers, Non-teaching staff members, Research scholars & Studentsனு கிட்டத்தட்ட 40 பேர்) வந்த பின்னாடி காலை உணவோட கோயமுத்தூர்ல இருந்து 7:45க்கு கெளம்பினோம்.
புறப்பட்ட உடனே வகுப்புத்தோழர்களும் Seniors-ம் சேர்ந்து ஆட ஆரம்பிச்சாங்க..,ரெம்ப நல்லா ஆடுனாங்க.

நாலாம் வகுப்பு படிக்கறப்ப..,மோதிலால் Teacher வந்து “ஆண்டுவிழா வரதால எல்லாரும் கலை நிகழ்ச்சில கலந்துக்கங்க”னு சொன்னதால நாடகத்துல நடிக்கலாம்னு முடிவுபன்னி கலந்துக்கிட்டேன்,அப்பறம் அஞ்சாம் வகுப்புலயும்...

விளைவு?!
.
.

ஆடத் தெரியல.

வழக்கம்போல உக்காந்து வேடிக்க பாத்துட்டு இருந்தேன்.

அப்புறம் ஆடுறவுங்க எல்லாம் வற்புறுத்தி கூப்ட்டதால நானும் எழுந்திருச்சு நின்னுட்டே வரவேண்டியதாப் போய்டுச்சு.

ஆம், நின்று கொண்டே வந்தேன் எனச் சொல்வதில் எனக்கு அளவில்லாத கர்வமுண்டு... இந்த 21ஆம் நூற்றாண்டில் காலை வேளையில் பெருநகரச் சாலைகளில் பேருந்தினுள் கம்பியைப் பிடிக்காமல் நடனமாடிக்கொண்டு வருவதா பெரிய விடயம்?!.. நிற்பதுதானே?!

சிறிது நேரக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு 10 மணிக்கு சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவிலுக்கு போய்ச் சேர்ந்தோம்.




தரிசனத்தையும் காலை உணவையும் முடிச்சிட்டு அங்கிருந்து கிளம்பி 11 மணிக்கு சர்க்கரை ஆலைக்கு போய்ட்டோம்.
அங்க கரும்புல இருந்து சர்க்கரை எடுக்குற எல்லா Process-ஐயும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் சுத்திப்பாத்தோம், ஒரு நாளுக்கு மட்டும் அங்க 50 ton சர்க்கர தயாரிக்கறாங்கன்னா பாருங்களேன்.! அது மட்டுமில்லாம அவங்களுக்கு தேவையான மின்சாரத்தையும் கிடைக்கிற சக்கையிலிருந்து தயாரிக்கிறாங்க..எஞ்சி இருக்குற mud waste-களும் உரமா போய்டுது. அங்க இருந்த கொஞ்ச நேரமும் கரும்பு, சர்க்கரைனு தின்னுட்டே இருந்ததால இத இனிப்பான அனுபவம்னுதான் சொல்லனும்.! பிறகு அதோட Biproduct industry-ஆன Alcohol manufacturing-ஐயும் பாத்துட்டு மதியம் சாப்ட்டதுக்கப்புறம் 2 மணிக்கு கிளம்பீட்டோம்.


அங்கிருந்து கொடுவேரிக்குப் போற வழில பேருந்தின் மேற்கூரை, தளம், இருக்கைகளின் நலம் கருதி அதுவரைக்கும் நான் "பாக்காத..." புதுப்படம் ஒன்ன driver போட்டாரு. உண்ட களைப்புல எல்லாரும் கம்முனு வந்தோம்..ஒரு 20 நிமிசத்துக்கப்புறம், "கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேலென…"ன்னு ஆரம்பிக்கிற மாதிரி ஒரு இடம் வந்தது ஏரிய நெருங்கீட்டோம்னு காட்டுச்சு... 









அங்க போய் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேல தண்ணில ஆடுனோம். ஆச்சரியம் என்னன்னா என் வகுப்புல எனக்கும் இன்னொருத்தருக்கும் தவிர மத்த எல்லாருக்கும் நீச்சல் தெரிஞ்சிருந்துச்சு.! பிறகென்ன?!..,எல்லோரும் நீந்திக்களித்திருக்க நாங்களிருவரும் அழுக்குத் தேய்த்துக் குளித்துவிட்டு வந்தோம். (க்கும்..நீச்சல் கத்துக்கறேன்னு சொல்லி ரெண்டு தடவ தண்ணியக் குடிச்சதையெல்லாம் சொல்லிக்கிட்டா இருப்பாங்க?!)

அங்கிருந்து 5:30 மணிக்கு கிளம்பி பொறுப்பாசிரியர் வீட்டுக்கு போய் ஒரு Refreshment-க்கு அப்புறம் படம் பாத்துக்கிட்டே 7 மணிக்கு College வந்து சேர்ந்து அங்கிருந்து எல்லோரும் அவங்கவுங்க வீட்டுக்கு போனோம்.


இப்பதான் First year-ன்றதால எல்லோரோடையும் கொஞ்ச நேரம் செலவளிக்கறதுக்கு இந்த நாள் ரெம்ப உதவியா இருந்துச்சு..
சில நட்புக்களையும் சந்தோசங்களையும் நேரம் கொடுத்துதான் பெற முடியும்றது எவ்வளவு பெரிய உண்மை.!



சந்தோசமா இருக்க பணம் மட்டும் போதாது,மனசும் வேணும்.

  

Friday, August 23, 2013

ஒரு கவிதை



சென்ற
வார விகடனில் வெளியாகமல் போன எனது கவிதை:-p

அவள்

வண்ண வண்ணப் பூச்சுக்கள்..

தோரணங்கள்..

அலங்காரங்கள்..

இருக்கைகள்..

வழி நெடுக அழைப்பு வார்த்தைகள்

பெயர்ப்பலகைகள்

இயந்திர(ற) மனிதர்கள் !


'வியாபாரமேதான்!' எனச் சொல்லாமல் சொல்லும்

நிர்ணயித்த விலைப்பட்டியலும்,

யாரேனுமொரு திரைப்பிரபலம் கையில் வைத்துப்

பல்லிளிக்கும் விளம்பரச் சுவரொட்டியும்...

இவையெல்லாம் பற்றி ஏதுமறியாமல் அந்த பானக்

கடையிடம் கொஞ்சம் தோற்றுத்தான் போகிறாள்..,


அதன் முன்னேயோ, பக்கவாட்டிலோ

எதிரிலோ, இல்லை ஓடியோடியோ

வெள்ளரிப்பிஞ்சையும் தர்ப்பூசணிக்கீற்றையும்

நோண்டிய நுங்கையும் திராட்சைக்குலையயும்,

விலைஅளவு வரைமுறையின்றி

சிறு உரையாடலுடன் விற்கப்போராடும்

வெற்றிலைக் கிழவி...!          

                                                                       

Sunday, June 9, 2013

அ...

அனைவருக்கும்  வணக்கங்கள் :-)

வலைப்பூவினை அறிமுகம் செய்த கீச்சுலக நண்பர்களுக்கு இக்கணத்தில் நன்றிகள்!

சித்திரத்தோடு எழுத்தும் கைப்பழக்கம் என்பது முதல் பதிவினை எழுதுகையிலேயே புரிகின்றது...

என் எழுத்துக்கள் இயல்பை மீறி சிறிது விறைப்பான நடையிலேயே போகலாம்...சில நேரங்களில் என் உளப்பார்வையையும் முட்டாள்தனத்தையும் வெளிக்காட்டலாம்...
எழுதுவது என் உரிமை என்றாலும் சில நேரங்களில் உங்களைப்போன்ற வாசிப்பாளர்களை திருப்திப்படுத்தாமலும் போகலாம்...!

இவ்வலைப்பூ எனது நாளேடு போலக் காட்சியளிக்கலாம்...சில நேரங்களில் பயணக்குறிப்பாகவோ,தன்னுரலின் வெளிப்பாடாகவோ,கவிதையைக்கொண்டதாகவோ,கவிதை போன்ற ஏதேனுமொன்றைக் கொண்டதாகவோ இருக்கலாம் அல்லது இப்போது இப்பதிவு உங்களுக்கு எவ்வாறு காட்சியளிக்கிறதோ அவ்வாறே எப்போதும் காட்சியளிக்கலாம்...
இதுவே எனது இறுதிப்பதிவாகவும் இருக்கலாம்!

இவை எல்லாவற்றையும் ஒரு கணிப்பாகவே விட்டுவிடுகின்றேன்...!

எழுதுவது நானாக இருப்பினும் இங்கு கற்றுக்கொள்ளவே வந்திருக்கிறேன்...
 
உங்கள் தோழமையோடு பின்னூட்டமும் எப்போதும் வேண்டும்...!

வாசித்தமைக்கு நன்றிகள்!!

இப்படிக்கு
நான்