Wednesday, January 5, 2022

மும்மொழிக்கொள்கை - விவாதம்

 மும்மொழி கற்றல்  - எழுத்தாளர் ஜெயமோகன் 

மும்மொழி- கடிதம் - எழுத்தாளர் ஜெயமோகன் 

மேற்கண்ட கடிதத்திற்கு என் எதிர்வினை 

அன்புள்ள ஜெ,

வணக்கம். மும்மொழிக்கொள்கை குறித்த சாய் மகேஷ் அவர்களின் கடிதம் தொடர்பாக சிலவற்றை தெளிவுபடுத்தலாமென எண்ணுகிறேன்.

1. 484 பக்க தேசிய கல்விக்கொள்கை வரைவானது, கல்வியியல் தொடர்பான பல முக்கிய புத்தகங்களைப் பதிப்பிக்கும் பாரதி புத்தகாலயத்தின் முயற்சியால் ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் முழுவதுமாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்தப் பெரும்பணியை பலரை ஒருங்கிணைத்து செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் இப்படி நிகழ்ந்துள்ளதா எனத் தெரியவில்லை. அவர்களனைவருக்கும் இக்கடிதம்வழி முதல் நன்றி.

https://bookday.co.in/wp-content/uploads/2019/06/NEP-2019-TAMIL-V01.pdf

2. புதிய கல்விக்கொள்கை வரைவு வெளிவருவதற்கு முன்பே இந்தித்திணிப்பிற்கான சமிக்கைகள் வெளிவரத் துவங்கின. ஜனவரியில் புதிய கல்விக்கொள்கை இந்தியைக் கட்டாயமாக்க எந்தப் பிரிவையும் கொண்டிருக்கவில்லை என அப்போதைய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்வந்து மறுப்புத் தெரிவித்தார். http://www.newindianexpress.com/nation/2019/jan/10/no-plans-to-make-hindi-compulsory-javadekar-1923243.html 

உண்மை என்னவென்றால், ஜனவரியில் மறுப்புத்தெரிவிக்கும் முன்பே இந்தியைக் கட்டாயமாக்கும் அறிக்கை அவர்முன் டிசம்பர் 15இலேயே சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான ஆதாரமாக, சமர்ப்பித்த குழுவின் கையொப்பமிட்ட பக்கம் அறிக்கையிலேயே உள்ளது.  https://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/Draft_NEP_2019_EN_Revised.pdf

3. "P2.3. Workbooks on language and mathematics: Every child in Grades 1-5 will have a workbook for languages and mathematics in addition to the school textbook. This will ensure that grade-appropriate, creative, and engaging practice opportunities are available for each child to work at his/her own pace. This would supplement the textbook, build on lessons with a variety of exercises/examples, save teachers’ time, help teachers identify what each child can do and, therefore, help individualise instruction." அவர் எடுத்துக்காட்டிய பகுதிக்கு மாறாக இந்தப் பிரிவு, ஒன்றாம் வகுப்பிலிருந்தே எழுதப்பயில பயிற்சிப் புத்தகங்கள், கணக்குப் பயிற்சிப்புத்தகங்கள் வழங்கப்படும் என்கிறது. அவர்களுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுக்க எல்லாப் பெற்றோராலும் இயலுமா? அவர்களுக்கும் மூன்று மொழிகள் தெரிய வேண்டுமே?!

4. எதற்கு மூன்று மொழிகள்? வேறெந்த நாட்டிலாவது இதுகுறித்த முன்னுதாரணங்கள் உள்ளனவா?

5. தெரிந்தோ தெரியாமலோ 'இந்தி நம் தேசிய மொழி' என்கிற பொய்யை பெரும்பான்மையினர் நம்பத்துவங்கிவிட்டோம். இந்தி தெரிந்தால் அனுகூலம் என்பதும் உண்மையே. இன்றும் ஒன்றிய அரசால் நடத்தப்படும் கல்வி, இராணுவத் தேர்வுகளில் இந்திக்கு முன்னுரிமை உள்ளதை நாம் அறிவோம். ஐஐடி தேர்வுகளில் குஜராத்தியை மூன்றாம் மொழியாகப் புகுத்தியதன் பின்னுள்ள அரசியல் நமக்குத் தெரியாமலில்லை. இதெல்லாம் நீதி அல்ல. அதனால், பெரும்பான்மையினர் மூன்றாம் மொழியாக இந்தியைத்தான் தேர்ந்தெடுப்பர். அடிப்படையில், எந்த மொழியை கற்கவேண்டுமென்பதை அரசு முடிவெடுக்கக் கூடாது. அதன்முலம் நம் அரசியல் அதிகாரம் பறிக்கப்படும். இந்திய ஒன்றியத்தில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் என்ன உரிமைகளை அனுபவிக்கிறாரோ, அதே உரிமையை இந்தி பேசாத ஒருவரும் தன் தாய்மொழியைக்  கொண்டு  அனுபவித்தால்தான் அது சமத்துவம். https://ta.quora.com/inti-moliyaik-kattayamakkinal-tamil-moli-aliyuma/answers/147886132?__nsrc__=4&__snid3__=5320432183

6. போகிற போக்கில் சமஸ்கிருதம் இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு அடிப்படை என்றெல்லாம் அடித்துவிடுகிறார்கள். "P4.5.14 Considering the special importance of Sanskrit to the growth and development of Indian languages, and its unique contribution to knowledge development in as well as the cultural unity of the country, facilities for the study of Sanskrit, its scientific nature, and including samplings of diverse ancient and medieval writings in Sanskrit from a diverse set of authors (e.g. the plays of Kalidasa and Bhasa), will be made widely available in schools and higher educational institutions." 

7. இடைநிற்றல் அதிகரித்திருப்பதால் பிரஜ், போஜ்புரி,அவதி, பன்டேல்கந்தி மொழிகளில் அவர்கள் புத்தகங்களை அச்சிடுகிறார்கள். சில நாட்களுக்குமுன்பு உத்திரப்பிரதேசத்தில் பள்ளி மாணவர்கள் பலர் இந்தியிலேயே தோற்றார்கள் என்பதை வாசித்திருப்பீர்கள். அதுவும் ஒரு காரணம். https://www.thehindu.com/education/schools/hindi-school-books-in-uttar-pradesh-now-available-in-braj-bhojpuri-bundelkhandi-and-awadhi/article29397833.ece

 8. தமிழகம் போராடியதால்தான் அறிக்கை 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதை சுருக்கப்பட்ட அறிக்கை என்கிறார்கள். அதாவது 484 பக்கங்களை 80க்கும் குறைவான பக்கங்களில் சுருக்கியிருக்கிறார்கள். சில மொழிகளில் அது 44 பக்கம்தான் இருக்கிறது. https://mhrd.gov.in/relevant-documents

தமிழகத்தில்தான் கல்வி குறித்த விவாதத்திலும் போராட்டத்திலும் பலர் பங்கேற்றிருக்கிறார்கள். அண்டை மாநிலமான கேரளத்தின் தலைநகரில் ஒரு கூட்டம் நடந்ததாகவே எனக்குத் தெரியும். தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் இப்படி நிகழ்ந்துள்ளதா எனத் தெரியவில்லை. தமிழகம் பெருமை கொள்ள வேண்டும்.

9. தற்போது, உதவிப்பேராசிரியர் பணிக்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு நிறுத்தி வைத்திருக்கிறது. அவர்கள் பின்பற்றப்போகும் தேர்வுமுறை இந்திய ஒன்றியத்தில் எங்கும் இல்லாதது. வேறெந்த மாநிலத்திலாவது இப்படிப்பட்ட அறிக்கை வெளிவந்திருந்தால் போராட்டம் நடத்தியிருப்பார்கள். அதற்கான கவலை நம் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ இல்லை. தமிழகம் வெட்கப்பட வேண்டும்.

10. மும்மொழி குறித்த உங்களின் கட்டுரையும், அதே தினத்தில் வெளிவந்த செல்வேந்திரனின் மொக்கை கட்டுரையும் ஒட்டுமொத்த சமூகத்தையே 'இவ்வளவு கீழிருக்கிறாய் நீ' எனக்கூறி முகத்தில் உமிழ்வபை. உங்கள் இருவருக்கும் முத்தங்கள் நூறு.

11. வரைவு குறித்த என்னுடைய சில குறிப்புகள்:

https://sannaloram.blogspot.com/2019/06/blog-post_24.html

https://sannaloram.blogspot.com/2019/06/what-national-education-policy-draft.html

நன்றி.

Sep 28, 2019, 7:34 PM


சாய் மகேஷின் எதிர்வினை 

மும்மொழிக்கொள்கை மறுப்புக்கு மறுப்பு

இதற்கான என் பதில் 

அன்புள்ள ஜெ,

புதிய கல்விக் கொள்கை மீதான விவாதங்களின் சூடு ஆறிய இந்த நேரத்தில் சாய் மகேஷ் அவர்களின் எதிர்வினை https://www.jeyamohan.in/127827#.XdzE_ugzZPY குறித்து சிலவற்றைச் சொல்லலாமென நினைக்கிறேன். அவருக்கு எழுதுவதால் எனக்கும் கற்க எதாவது கிடைக்கிறது.

புதிய கல்விக்கொள்கை குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடரில் நிகழப்போவதாக அறிந்தேன். நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கிற அரசின் முடிவுகள் குறித்த விவாதங்கள் இந்த நேரத்தில் மீண்டும் இத்தளத்தில் முன்னுக்கு வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி.  கடந்த ஆறு மாதங்களில் காலச்சுவட்டில் வந்த கல்வி தொடர்பான கட்டுரைகளை யாரும் வாசிப்பார்களெனில் கூடுதல் மகிழ்ச்சி.

இனி உணர்ச்சிகர ஊசலாட்டம்.

1. மறுப்புக்கு மறுப்புக் கடிதம் படித்தபின் 'தமிழில் தேசிய கல்விக் கொள்கை' என கூகுளில் தேடினேன். நான்  மேற்கோள்காட்டிய மொழிபெயர்ப்பின் சுட்டி ஏழாவதாக வந்தது. இம்மொழிபெயர்ப்புக்கு வெளியீட்டுக் கூட்டமே நடத்தினார்கள். யூடியூபில் புதிய கல்விக் கொள்கை எனத் தேடினால் மாநாடுகள், போராட்டங்கள், கல்வியாளர்கள் வசந்திதேவி, பிரின்ஸ் கஜேந்திரபாபு, பேராசிரியர் கருணானந்தன் ஆகியோரின் காணொளிகள் கிடைக்கின்றன. இங்கு எதுதான் அதிகம் படிக்கப்படுகிறது? அதிகம் பகிரவோ, படிக்கவோ இல்லையென்றாலும் புள்ளிவிவரங்களுக்கும், அறிக்கையை படித்தவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் நான் முடிச்சிட மாட்டேன்.

2. நண்பர் எதைப் 'பரவலாக்கம்' எனச் சொல்லிக் கடக்கிறாரோ, அதைத்தான் நான் திணிப்பு முயற்சி என்கிறேன். அது அவ்வளவு எளிதில் கடந்து போகக்கூடியதல்ல எனவும் எண்ணுகிறேன். திரும்பிப் பார்க்கையில், புதிய கல்விக்கொள்கையில் இந்தியைக் கட்டாயமாக்கும் விதிகளே இல்லை என அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் சொன்னது பொய் அல்லவா? ஒரு அரசுப் பிரதிநிதியின் வாக்கின் சத்தியம் இவ்வளவுதானா? (பார்க்க : முதல் மறுப்புக் கடிதம் , 2 ஆம் குறிப்பு) 

மற்றபடி முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ப. சிதம்பரம் செய்த தவறுகளை பட்டியலிட்டு சமஸ் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் http://writersamas.blogspot.com/2017/04/blog-post_60.html#more . அதை என்னுடைய கட்டுரையொன்றில் மேற்கோள் காட்டியுமிருக்கிறேன் https://sannaloram.blogspot.com/2019/04/blog-post.html . இதைப் 'பொதுவான மத்திய அரசின் போக்கு' எனக் கடந்து செல்லும் பெருந்தன்மை எமக்கு இல்லை.

ஒரு கொள்கையைப் பொதுவில் வைத்துக் கருத்துக்கேட்கையில் அதனைப் பாராட்டுவதும் குறைகளைப் பட்டியலிடுவதும் தனிநபர் அல்லது அக்குழுவின் பார்வையைப் பொறுத்தது. எதுவாயினும் அதற்கு முகங்கொடுக்கத்தான் வேண்டும். ஆனால், பாராட்டுகளின் பயன் என்ன?  இந்து ஆங்கிலப் பதிப்பில் பாராட்டுக்கட்டுரைகளே அதிகம் வந்தன. இந்து தமிழ் இருபக்கமிருந்தும் நடுப்பக்கக் கட்டுரைகளைக் கொண்டுவந்தது. 

கருத்துக்கேட்பிற்கு அளித்த கால அவகாசம் என்ன? முதலில் முப்பது நாட்கள் மட்டும் கொடுத்தார்கள்; கோயம்புத்தூரில் மூடிய கதவிற்குள் சொற்ப நபர்களை வைத்துக் கூட்டம் நடத்தினார்கள். காலம் நீட்டிக்க வேண்டுமெனவும் பிராந்திய மொழிகளில் வெளிவிட வேண்டுமெனவும் தமிழகத்தில் போராட்டங்கள் நிகழ்ந்தன. அவை நியாயமானவை இல்லையா? ஒரு கொள்கை வெளியிடுவோர் கால அளவு, மொழிப்பிரச்சினைகளையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டாமா? 

இவற்றையெல்லாம் சிந்திக்காமல் கருத்துக்கேட்டால் விமர்ச்சிக்கத்தான் செய்வார்கள். நண்பரையே பாருங்கள், முதலில் முடியாதென மறுத்தாலும் மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து செயல்பட்டிருக்க வேண்டுமென்கிறார். ஒரு கூட்டாட்சி அமைப்பில் அதைத்தானே செய்ய வேண்டும்?! அதுதானே சமத்துவப் பார்வை?

//மத்திய அரசு வெளியிடும் ஒவ்வொரு அறிக்கை, கோப்புகளையும் 22 மொழிகளில் வெளியிட்டு மொழிபெயர்ப்புக்கும் பொறுப்பேற்பது நடக்காத வேலை. மொழிபெயர்ப்பு பொறுப்பை மாநில அரசுகளிடம் கொடுத்து உரிய கால அவகாசம் கொடுத்து அவை தயாரானவுடன் ஒன்றாக வெளியிடலாம்.//

3. வரைவு அறிக்கையும் நண்பரும் 'மொழிகள்' எனப் பன்மையில் குறிப்பிடும்போது, முதல் வகுப்பிலிருந்தே பயிற்சிப்புத்தகங்கள் மும்மொழிகளுக்கும்தான் என எண்ணத் தோன்றுகிறது. நண்பர் விளக்கும்போது புரிந்துகொள்கிறேன். இதுபோன்ற குழப்பங்களைத் தவிர்த்திருக்கலாம். அதைத் கவனிக்கத் தவறியிருக்கிறேன்.

//மேலும், அவர்களுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுக்க எல்லாப் பெற்றோராலும் இயலுமா? அவர்களுக்கும் மூன்று மொழிகள் தெரிய வேண்டுமே?!  என்கிறார்.

இது என்ன மாதிரியான வாதம் எனப் புரியவில்லை. எனில், படிக்காத அல்லது ஆங்கிலம் தெரியாத பெற்றோர் எனில், இருமொழிக் கொள்கை உள்ள பள்ளிகளில் கூட படிக்க வைக்க முடியாதே!//

களநிலவரத்தைப் பார்த்துவிட்டு இதை விவாதிக்க வேண்டுமென நினைக்கிறேன். நண்பரே சொல்கிறார், தமிழ் தெரியாமல் எட்டாம் வகுப்பைக் கடக்கிறார்கள் என்று. தமிழகத்தில் நிலவும் இருமொழிக்கொள்கையே தோல்வி என்கிறார் பள்ளி ஆசிரியரும், கவியுமாகிய சுகிர்தராணி. பெரும்பாலான கல்லூரி மாணவர்களுக்கு தமிழும் ஆங்கிலமும் சரளமாக வரவில்லை. ஒரு குழந்தையின் கற்றலுக்கு பள்ளிச்சுழல் மட்டும் போதாது. அன்றாட வாழ்வில் ஆங்கிலம் அளவுக்கு சம்பந்தமில்லாத பிறமொழி ஒன்றை ஏன் பிள்ளைகளிடம் திணிக்க வேண்டும்? கற்றலில் வீடும், சுற்றமும் பெரும்பங்கு வகிக்கின்றன. பெற்றோர் இருவரும் வேலைக்குச்செல்வோர் உள்ள வீடுகளைப் பாருங்கள். அவர்கள் தனிப்பயிற்சி நிலையங்களை நாடவேண்டுமெனெத் தோன்றவில்லையா? அது குடும்பத்தின் மீது சுமத்தவிருக்கும் நிதிச்சுமை என்ன?

4. //எதற்கு மூன்று மொழிகள்? வேறெந்த நாட்டிலாவது இதுகுறித்த முன்னுதாரணங்கள் உள்ளனவா?//

உடன் பயிலும் நண்பர் நைஜீரியர். 520 மொழிகளைக் கொண்ட நாடு என்கிறார்; அவற்றுள் பெரும்பான்மையினர் பேசும் மொழிகள் மூன்று. பள்ளிகளில் மாநில மொழியும் பிற பாடங்கள் ஆங்கிலத்திலும் பயிற்றுவிக்கப்படுவதாகக் கூறுகிறார். நிறைய மொழிகள் கற்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து நமக்கு ஆய்வுகள் வேண்டும். ஆய்வுகளிருந்தாலும் அவை தனிமனிதத் தெரிவுகளுக்கு விடப்படவேண்டும். பள்ளிக்கூடங்கள் சோதனைச்சாலைகள் அல்ல.

பல மொழிகள் கற்பதால் கிடைக்கும் பயன்கள் யாருக்கும் தெரியாமலில்லை. கேரளத்தில் மும்மொழிக் கொள்கை உண்டு; இந்தி படிக்கத் தெரிந்தவர்கள். ஆனாலும் கல்வி நிலைய நூலகத்தில் இந்தி புத்தகங்கள் காற்று வாங்குகின்றன. நடைமுறையில் அவையெல்லாம் தனிமனிதரின் ஆர்வம் பொறுத்தது. நான் மூன்றாண்டுகளாகத் திருவனந்தபுரத்தில் வசிக்கிறேன். இலக்கியம் வழியாகவும் அனுபவம் வழியாகவும் சுகுமாரன் அளவிற்கோ, சாம்ராஜ், சமஸ் அளவிற்கோ இம்மண்ணை உள்வாங்கியிருக்கிறேனா என்றால் இல்லை. இங்கேயே இடம்பெயர்ந்தபின்பும் மலையாளம் எழுதப் படிக்கக் கற்காதவர்கள் உண்டு. அவர்களுக்கு மலையாளம் தேவையாகத் தோன்றவில்லை. அவர்கள் பால் சாகரியாவையும் உண்ணி ஆரையும் வாசிக்கவில்லை என்று சொல்லி நாம் வருந்திக்கொண்டிருக்க இயலுமா? எல்லா மொழியிலும் வளங்கள் உள்ளன. இயற்றப்பட்ட மொழியிலேயே படிப்பதில் இன்பம் இருக்கலாம். தேவையென்றால் அதைத் தேடி வருவார்கள், ஜி யு போப் போல, டேவிட் ஷுல்மன் போல.

5. குஜராத் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஐஐடி நுழைவுத்தேர்வுகள் இந்தி, ஆங்கிலத்தோடு குஜராத்தியிலும்  நடத்தப்படுகின்றன. மற்ற மாநிலங்கள் கேட்டால் செய்வார்கள். ஆனால், யாரையும் கேட்காமலேயே தபால் துறைத்தேர்வில் மற்ற மொழிகளை நீக்குவார்கள். இதன் பெயர் சம வாய்ப்பு; குடிமக்களை சமமாக நடத்துதல்.

6. சமஸ்கிருதம் பற்றிய குறிப்பை தமிழ்ப் பார்வையில் இருந்துதான் எழுதினேன். இப்போதும் அது தமிழின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் எவ்வகையில் உதவுமெனத் தெரியவில்லை. நண்பர் மேற்கோள் காட்டியவற்றை வாசிக்கிறேன்.

சமஸ்க்ருதத்திற்காக செலவிட்டவை எத்தனை? https://www.vikatan.com/government-and-politics/politics/120688-essays-tamilian-as-political-identity-suguna மற்ற மொழிகளுக்குச் செய்தவை என்ன? அரசின் மொழிக்கணக்கெடுப்பில் எங்கே பிழைகள் நிகழ்கின்றன? https://www.thehindu.com/opinion/lead/getting-the-language-count-right/article24454570.ece

7. இடைநிற்றலுக்கும் பயிற்றுமொழிகளுக்கும் உத்திரப்பிரதேசத் தோல்விகளுக்கும் பிரஜ், போஜ்புரி,அவதி, பன்டேல்கந்தி மொழிகளில் புத்தகங்களை அச்சிடுவதற்கும் பந்தம் உண்டு; அதை இங்கே சான்றுடன் குறிப்பிட்டிருக்கிறேன். https://sannaloram.blogspot.com/2019/04/blog-post.html

8. பாரதி புத்தகாலய முன்னெடுப்பில் நிகழ்ந்த தமிழ் மொழிபெயர்ப்பிலுள்ள பிழைகளை சுட்டிக்காட்டியிருக்கிறார். அதற்கான பதில் அம்மொழிபெயர்ப்பின் நான்காம் பக்கத்தில் உள்ளது. https://bookday.co.in/wp-content/uploads/2019/06/NEP-2019-TAMIL-V01.pdf

9. உதவிப் பேராசிரியர் பணி நியமன முறை குறித்த தனிக்கட்டுரை. https://www.jeyamohan.in/126672#.Xd05mugzZPY

10. தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தில், தனியார் நிறுவனங்கள் பன்மொழிகளில் செயல்படுகையில் மொழிப்பன்மைத்துவம் பேணுவதில் பெரிய சிரமங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. சிரமங்கள் இருந்தாலும் சமூக நீதிக்கான விலையை கொடுத்துத்தான் ஆகவேண்டும்.

அதற்காக தொடர்வண்டி நிலையப் பெயர்ப் பலகைகளில் 22 மொழிகள் இருக்கவேண்டுமென்பதில்லை. இங்கு எத்தனை மாநிலங்களில் தொடர்வண்டி பயணச்சீட்டை பிராந்திய மொழிகளில் அச்சிடுகிறார்கள்? தமிழிலும் மலையாளத்திலும் இருப்பதைத் தமிழகத்திலும் கேரளத்திலும் கண்டிருக்கிறேன். எல்லா மாநிலங்களிலும் அவ்வாறு உண்டா? பதில் எதுவெனினும் அதன் பின் ஒரு போராட்டம் நிச்சயம் இருக்கும்.

மற்றபடி நண்பரின் -லாம் விகுதியுள்ள வார்த்தைகளுக்கும், காலம் கனிந்து வர வேண்டும் என்கிற வார்த்தைகளுக்கும் என்னிடம் பதில் இல்லை.  

இன்று (26-11-2019) இந்திய ஒன்றியத்தின் அரசியல் நிர்ணய சபையால் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம். அதன் முகப்பு சமத்துவம் என்னும் வார்த்தையைத் தாங்கி நிற்கிறது. ஆனால், மொழிக்கொள்கையைப் பொறுத்தவரை சமத்துவம் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தொனிப்பதாக நம்முடைய ஒன்றிய அரசாங்கங்களின் (முந்தைய மற்றும் தற்போதைய) செயல்பாடுகள் இருந்தனவா/இருக்கின்றனவா என்றால் நிச்சயம் இல்லை. பெரும்பான்மைவாதம் திரும்பத்திரும்ப தன் சுட்டுவிரலை அதிகாரத்துடன் நீட்டுகிறது. அதனால்தான் ஆங்கிலத்தில் பேசும் ஒரு நடிகரைப் பார்த்து நீங்கள் இந்தி நடிகர்தானே இந்தியில் பேசுங்கள் என அதிகாரம் விரல் நீட்டுகிறது. அதுவே அடுத்தமுறை பெரும்பான்மையினர் புரிந்துகொள்ளும் மொழியில் பேசுங்கள் என்று வாதிடுகிறது. ஒரு பத்திரிக்கையாளருக்கு இந்தப்பார்வையைக் கொடுத்தது யார்? அதில் அரசின் பங்கு இல்லையா? இந்தப்பின்புலத்திலதான் நாம் அரசின் மொழிக்கொள்கையைப் பார்க்கவேண்டுமென நினைக்கிறேன்.

Nov 26, 2019, 8:25 PM

(இன்றய தினத்தில் நன் எழுதிய முதல் மறுப்புக் கடிதத்தின் இணைப்பு ஜெயமோகன் அவர்களின் வலைத்தளத்தில் சரியாக இயங்கவில்லை, அதனால் இங்கு பதிந்து வைக்கிறேன்.)





Sunday, August 22, 2021

கோவிட் பெருந்தொற்றும் தனியார் கல்வி நிறுவனப் பணியாளர் நிலையும்

தி இந்து நாளிதழில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம். 

மூலக்கட்டுரை: Weighing down the private unaided college teacher


ஏ பி அருண் கண்ணன் & கிஷோர்குமார் சூர்யபிரகாஷ்


கோவிட் பெருந்தொற்று உலக அளவில் அனைத்துத் துறையினரையும் பெரும் பொருளாதாரச் சீரழிவிற்கு ஆளாக்கியிருக்கிறது. பள்ளிகளும் கல்லூரிகளும் இணையவழி வகுப்புகளுக்கு மாற்றமடைந்துள்ளன. இதைக் காரணம்காட்டி பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மாணாக்கர்களிடம் முழுக்கட்டணத்தையும் வசூலித்துள்ளன. பிற துறைகளுடன் ஒப்பிட்டால் தனியார் கல்வித்துறை தன் நிதிநிலையைப் பாதுகாத்து வருகிறது எனலாம்.

தனியார் கல்வி நிறுவனங்களின் வருமானம் பெருத்த அளவில் இல்லையெனக் கொண்டாலும் அவற்றை உயிர்ப்புடன் வைத்திருக்கும் கட்டண வசூல் அவற்றைச் சார்ந்திருக்கும் ஆசிரியர்களையும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களையும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறதா, அவர்தம் வாழ்வில் அது எதிரொலிக்கிறதா என்றால் இல்லை. பெருந்தொற்றால் ஏற்பட்ட தற்காலிகப் பணி நீக்கமும், ஊதியக்குறைப்பும் அவர்களை வேறு வேலை தேடும் நிலைக்குத் தள்ளியிருக்கின்றன. ஊதியக்குறைப்பால் பனை ஏறும் தொழிலுக்குச் சென்ற தனியார் கல்வி நிறுவன ஆசிரியரின் எதிர்பாராத இறப்பு எங்களை அப்பணியிலுள்ளோரைக் கவனிக்க வைத்தது. சென்னைப்பல்கலைக்கழக தனியார் உறுப்புக் கல்லூரிகளில் பணிபுரியும் 194 உதவிப்பேராசிரியர்களிடம் ஜூன் 13 முதல் 26 வரை நடத்திய ஆய்வில் கிடைத்த தகவல்களை அறியத்தருகிறோம்.

ஆய்வு முடிவுகள்

முதலில் வெளிப்பட்ட அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், பெருந்தொற்றுக்கு முன்பிருந்தே அவர்களின் கல்வித்தகுதிக்கு நிர்ணயிக்கப்பட்டதைவிடக் குறைவான ஊதியமே வழங்கப்பட்டதும், பெரும்பாலானவர்கள் எந்தவித ஊழியர் நலத்திட்டத்திலும் பயனாளிகள் இல்லை என்பதுமாகும்.  ஆய்விற்குட்படுத்தப்பட்ட 194 பேரில் 137 பேர் பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயித்த தகுதிகளைப் பெற்றிருந்தும் (முனைவர் பட்டம் அல்லது மாநில/தேசிய தகுதித்தேர்வில் தேர்ச்சி) அவர்களில் 72% பேர் மாதம் 25,000க்கும் குறைவான உதியத்தையே பெற்றுவருகின்றனர். இங்கு நினைவுகூறப்படவேண்டியது ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைக்கும் உதவிப்பேராசிரியருக்கான ஆரம்பச் சம்பளம் - ரூபாய் 76,804. மேலும், அவர்களில் 38% பேருக்கு மட்டுமே தொழிலாளர் காப்பிட்டுக் கணக்கும், 42% பேருக்கு மட்டுமே சம்பளத்துடன் கூடிய விடுப்பும் உள்ளது.

புதிய தாராளவயக் கொள்கை உயர்கல்வி வழக்கும் பொறுப்பை அரசுகளிடமிருந்து பறித்து தனியார் பங்களிப்பை வரவேற்றது இந்நிறுவனங்களின் அசாதாரண வளர்ச்சிக்கு வழிகோலியது. சென்ற வருடம் நடத்தப்பட்ட உயர்கல்வித்துறை குறித்த ஆய்வில் நாட்டிலுள்ளவற்றில் 65% தனியார் கல்லூரிகள் என்பதும் அதிலும் தமிழ்நாட்டிலுள்ள 77% தனியார் கல்லூரிகள், 1980களின் முற்பகுதியிலிருந்தே கல்வித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதித்ததன் விளைவையும், கல்வித்துறையில் இலாபம் ஈட்டும் தனியார் கல்வி நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

இணையவழிக்கல்வி என்னும் சுமை

இந்தப்பின்புலத்தில்தான் பெருந்தொற்றுக்காலம் தனியார் கல்வி நிறுவனப் பணியாளர்களின் வாழ்வில் ஏற்படுத்துகிற பாதிப்பையும் நாம் மதிப்பிட வேண்டியிருக்கிறது. உதவிப் பேராசிரியர்கள் தம்மால் இயன்ற அளவு முயற்சி செய்து இணையவழிக் கற்பித்தலில் ஈடுபட்டு வருகிறார்கள். நடத்தப்பட்ட ஆய்வில் 88% பேர் இணையவசதி, அறை/இட வசதி, தரமான உபகரணங்கள் உள்ளிட்ட ஏதாவதொன்றில் போதாமையைச் சந்தித்ததாகத் தெரிவித்துள்ளனர். 194 பேரில் 137 பேர் கைப்பேசி, கணினி, ஒலிபெருக்கி/ஒலிவாங்கி என ஏதேனுமொன்றை வாங்கவேண்டியிருந்தது. மிக முக்கியமாக இணையவசதிக்கான செலவையும் ஆசிரியர்களே ஏற்க வேண்டியிருக்கிறது. நிதிநெருக்கடிக் காலத்தில் இவற்றால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாக அவர்களில் 107 பேர் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இணையவழிக்கல்வி தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களைக் கடுமையான உடல், மன, நிதி ரீதியிலான சிக்கல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இருந்தும் அவர்களுக்கான முறையான அங்கீகாரம் குறைந்தபட்சம் ஊதிய அளவிலேனும் வழங்கப்படுவதில்லை. மாறாக, அவர்கள் பல்வேறு வகையான ஊதியக்குறைப்பு நடவடிக்கைகளால் தண்டிக்கப்பட்டு வருகிறார்கள். 2020-2021 ஆம் ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கிற்கு குறைவானவர்களே நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தைப் பெற்றிருக்கிறார்கள். 10% பேர் 2021 ஏப்ரல் முதல் ஜூன் வரை எந்தவித ஊதியத்தையும் பெறவில்லை.

இணையக்கல்விக்கு மாறிய பின்னர் கல்லூரிகளின் நிர்வாகச் செலவினங்கள் குறைந்திருந்தாலும் மாணாக்கர்களிடம் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தவில்லை. எனவே, அவர்களின் சம்பளக்குறைப்பு நடவடிக்கையில் எந்தவித நியாயமும் இல்லை. தனியார் கல்வி நிறுவனங்கள், இப்பேரிடர் காலத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி பல்வேறு கடின சூழ்நிலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களை சுரண்டவே செய்கின்றன.

செல்ல வேண்டிய பாதை

சம்பளக்குறைப்பு நடவடிக்கைகள் பெரும்பாலான ஆசிரியர்களை வேறு வேலைகள் நோக்கித் திருப்பியிருக்கிறது அல்லது கடனாளியாக்கியிருக்கிறது. அவர்கள் பெரும்பாலும் கடின உடல் உழைப்பைக்கோரும் கட்டிட, விவசாய, பழுதுபார்க்கும், உணவு விநியோகிக்கும் வேலைகளை செய்து வருகின்றனர்.

பேரிடர்க்காலம் அவர்களின் வழிவியலை பறிப்பதாக இருந்தாலும் அதற்கு முந்தய காலத்திலும் நிலைமை மெச்சக்கூடியதாக இருந்ததில்லை. அதற்கு காரணம், இத்தகைய அமைப்புகளுக்கென விதிமுறைகள் ஏதும் வகுக்கப்படாததே ஆகும். தமிழக அரசு ஆசிரியர் நலன்கருதி பின்வரும் சில வழிகாட்டல்களைக் குறித்துச் சிந்திக்கலாம்: ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட/வழங்கப்படாத முழு ஊதியமும் வழங்கப்பட வேண்டும். காரணமின்றிப் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் திரும்பவும் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். இணையவழிக் கல்விக்கென அவர்கள் செலவழித்த தொகை திருப்பி வழங்கப்பட வேண்டும்.

கேரள அரசு 2018ஆம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய வரம்பை நிர்ணயித்தது. அதன்படி பல்கலைக்கழ மானியக்குழு நிர்ணயித்த கல்வித் தகுதியைப் பெற்றவர்களுக்கு நாளொன்றுக்கு 1750ம், மாதம் 43750ம், பல்கலைக்கழ மானியக்குழு நிர்ணயித்த கல்வித் தகுதியைப் பெறாதவர்களுக்கு நாளொன்றுக்கு 1600ம், மாதம் 40000ம் வழங்கப்பட்டுவருகிறது. தமிழக அரசும் இதுபோன்ற நெறிமுறைகளை வகுக்கலாம். கூடவே, தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (முறைப்படுத்தும்) சட்டம் 1976 மறு ஆய்வு செய்யப்படல் வேண்டும். இந்நிறுவனங்களில் பணியிலிருக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் உரிமைகளுக்காகவேனும் கல்லுரிக் கல்வி இயக்குனரகம் மற்றும் வட்டார கல்லுரிக் கல்வி இயக்குனரகம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து தனியார் கல்லூரிகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

 

பி அருண் கண்ணன்

சென்னை லயோலா கல்லூரி தொழிற்கல்வி மைய இயக்குநர்

 

கிஷோர்குமார் சூர்யபிரகாஷ்

அமெரிக்காவிலுள்ள எம்ஐடியில் முனைவர்பட்ட ஆய்வாளர் (பொருளாதாரம்)

Tuesday, May 25, 2021

ஊர் கூடித் தேர் இழுப்போம்

 தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்த நேரத்தில் கடைவீதிகளில் முட்டிமோதிய கூட்டம், கோவிட் தொற்று குறித்த சரியான விழிப்புணர்வும், கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படை முன்னெச்சரிக்கைகள் குறித்தும் மக்களுக்கு இன்னும் தெளிவில்லை என்பதையே காட்டுகின்றது. ஆனால், அதை வெளிக்காட்டும் இதுபோன்ற நிகழ்வுகள் முதல் அலையின்போதும், தற்போதும் அதே அளவில் தொடர்வது வருத்தமளிக்கிறது.  

 மருத்துவமனைகளில் இடமில்லாத, கோவிட் தொற்றை எதிர்கொள்ளவேண்டிய வைத்தியமுறைகள் கைப்பேசியில் வந்து நிறையும் இந்த நேரத்தில் கடைவீதிகளில் முட்டிமோதும் ஒவ்வொருவரும் நமக்குச் சொல்லும் செய்தி என்ன? நோய் குறித்த அச்சத்தை விட நோய்ப்பட்டால் தனித்து விடப்படும் நடைமுறை அவலத்தைத்தான்; ஒரு சமூகம் அவர்களுக்குப் பின் இல்லை என்கிற அச்சத்தைத்தான். 

இந்த குறிப்பை எழுதுவதற்காக தமிழகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் உள்ள சொற்ப நண்பர்களிடம் இரண்டு கேள்விகளைக் கேட்டேன்: கோவிட் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உள்ளாட்சிப் பிரதிநிதிகளோ, கட்சி நிர்வாகிகளோ, மாணவர்களோ அல்லது ரசிக அமைப்புகளோ அமைப்பாய்த் திரண்டு உள்ளூரிலேயே உதவி மேசை துவங்கியிருக்கிறார்களா? வீட்டை விட்டு வெளியே வர இயலாத சூழ்நிலையில் அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றித் தருவது யார்? பெரும்பாலோரின் பதில் அப்படி எந்த அமைப்பும் இல்லை என்பதுதான்.

உணவில்லாதவர்கள், பறவைகள், விலங்குகளுக்கு உணவு கொடுக்கும் அமைப்புகள் குறித்த செய்திகள் நிறைய உண்டெனினும் கோவிட் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உதவ, அரசு அமைப்புகளைத்தவிர சமூகத்தின் பங்களிப்பு குறைவாகவே உள்ளதாகவே தோன்றுகிறது. ஒன்றிய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள், முன்களப்பணியிலுள்ள மருத்துவம், காவல், சுகாதாரம், போக்குவரத்து, உணவு உற்பத்தி உள்ளிட்டோரின் பங்களிப்புக்கு அப்பால் ஒரு சமூகமாக நமக்கும் சில கடமைகள் இருக்கின்றன.

இடம்பெயர்வினால் தனிக்குடும்பங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில் கோவிட் தோற்று உறுதி செய்யப்பட்டவுடன் குடும்பங்கள் தனித்து விடப்படுகின்றன. சில இடங்களில் பக்கத்து வீடுகளிலிருந்து தொலைபேசி அழைப்புகள் கூடச் செல்வதில்லை. 

அண்டை மாநிலமான கேரளத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அச்சமூகம் தத்தெடுத்துக்கொள்கிறது. பெரும்பாலான இடங்களில் அரசியல் அல்லது ரசிக அமைப்பைச் சேர்ந்தவர்கள் களத்தில் இருக்கிறார்கள். சமூக இடைவெளியுடன் நால்வர், உதவிக்கு அழையுங்கள் என்று கைப்பேசி எண்கள் தாங்கிய சுவரொட்டிகள், ஒரு மேசை, இரு நாற்காலிகள், வாகனங்கள் என்கிற எளிய அமைப்பு. அவர்களுக்குத் தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படத்தேவைகளை உணர்ந்தும் கேட்டும் இச்சேவையை இலவசமாகவோ அல்லது சிறுதொகைபெற்றோ செய்துவருகிறார்கள்.



பெருந்தொற்றுக்காலம் போர்க்காலம்; எதிரி நம் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிரேயன்றி நோய்த்தொற்றாளர்கள் அல்ல. தனித்திருப்பவர்களுக்காக விருப்புவெறுப்பு அச்சம் கடந்து எல்லோரும் களத்தில் ஒன்றிணையவேண்டிய நேரமிது.

Thursday, January 21, 2021

அதிகாரிகள் என்பதும் அதிகாரம் என்பதும்

புலம்பெயர் வாழ்வில் வீட்டிற்கும் நமக்கும் அதீதத் தேவையாயிருப்பது பண்டிகைக் காலங்கள். பதிமூன்று மாதங்களுக்குப் பிறகான பயணம். உடல் வெப்பம், கைப்பை என எச்சோதனைகளுமின்றி திருவனந்தபுரத்தில் இருந்து திருப்பூருக்குத் தொடர்வண்டி ஏறினேன்; பயணம் கிட்டத்தட்டப் பதினோரு மணிநேரம். எல்லா நேரமும் அமர்ந்திருக்க இயலாது. நிறைய இடங்களைத் தொட வேண்டும். இரண்டு முறை உண்ண வேண்டும்; குறைந்தபட்சம் நான்கு முறையேனும் கழிக்க வேண்டும். 

கை சுத்தத்திற்கு ஆல்கஹால் உள்ள சானிடைஸர்கள் போதா. அவற்றை உபயோகித்தாலும் கை கழுவாமல் உண்ண இயலாது. கழிப்பறைகளிலோ, கை கழுவும் இடங்களிலோ சோப்பு எந்த வடிவிலும் இல்லை. 

ட்விட்டர் கணக்கும் ஆங்கிலமும் இருந்ததால் @RailwaySeva-க்கு எழுதினேன். 
பிஎன்ஆர், வண்டி, கைப்பேசி எண்கள் கேட்கப்பட்டதால் கொடுத்தேன். இருபது நிமிடத்திற்குள் ஒரு அழைப்பு. ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அம்மொழியிலேயே பதில்களைச் சொன்னேன். பின்னர் குறைகள் பதிவு செய்யப்பட்டதை உறுதி செய்யும் எண்களைக் தாங்கிய சில குறுஞ்செய்திகள் ஆங்கிலத்தில்.

ஐந்து நிமிடத்தில் சீருடைப் பணியாளர்கள் சிலர் இந்திக் கேள்விகளுடன் முன்நின்றனர்‌. இந்தியும் இல்லை சோப்பும் இல்லை என்று காற்றில் கைகழுவி விளக்கினேன். பத்து நிமிடத்தில் காலியான குடிநீர் பாட்டிலில் சோப்பு நீர் வந்தது; நன்றியுடன் பெற்று உபயோகிக்கையில் நுரை வரவில்லை. இதற்கு ட்விட்டரில் எதுவும் சொல்ல வேண்டாமென விட்டுவிட்டேன்.

எர்ணாகுளத்தில் மலையாளம் எழுப்பி சோப்பு கிட்டியோ என்றது. கழிவறைக்குள் பாருங்கள் என்றேன் தமிழாளத்தில். பார்த்தபின் நிலைமை புரிந்து நான்கு ரூபாய் மதிப்புள்ள பதினைந்து கிராம் சோப்புக்கட்டியைக் கொடுத்துச் சென்றார்.

நடந்தவை அனைத்தையும் உடனிக்கும் பயணிகள் கவனித்து வந்தனர்; ஏதோ தனிச்சலுகை கோரிப் பெறுபவனைப்போல வெட்கமாக இருந்தது.

இங்கு பேசப்பட வேண்டியவை இரண்டு.

1. தொற்றுநோய்க் காலம் மட்டுமின்றி எல்லாக் காலத்திலும் ஒரு சேவையைப் பெற நமக்குத் தடையாய் உள்ள மொழி, இணைய, பொருளாதாரக் காரணங்கள்.

2. ஒரு பொதுப்பிரச்சினையை தனிமனிதப் பிரச்சினையாக மட்டும் அணுகும் மனப்பாங்கு. 

ட்விட்டரில் @RailwaySeva-க்கு மறுபடியும் எழுதினேன்: எனக்குக் கிடைத்தது மற்றவருக்குக் கிடைக்கவில்லை. மற்ற பெட்டிகளின் நிலையோ, வண்டிகளின் நிலையோ எனக்குத் தெரியவில்லை. அனைத்துப் பெட்டிகளிலும் சோப்புகள் வைக்கப்பட வேண்டும்; இது கேட்டுப் பெறவேண்டிய சேவையாக இருக்கக்கூடாது. அனைத்துப் பயணிகளும் சமமாக நடத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும்.

எதிர்பார்த்தபடியே எவ்விதப் பதிலும் இல்லை. 
அதிகாரம் என்பதும் அதிகாரிகள் என்பதும் பாவனைகளோ என்று தோன்றுகிறது.