Sunday, March 17, 2024

கல்விச்சூறையாடல் - கடிதம்

கல்விச்சூறையாடல்  வாசித்தபின்  எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எழுதியது


அன்புள்ள ஜெ,

வணக்கம். கல்விச்சூறையாடல் படித்தேன். கடந்த பல வருடங்களாக உயர்கல்வித்துறையில், தனியார் கல்வி நிறுவனங்களில் நடக்கும் சீரழிவைச் சுட்டியதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியை உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறித்து மிகவும் வருத்தமடைந்தேன்; அரசின் இந்த நடவடிக்கைக்கு என்னுடைய கடும் கண்டனங்கள். அரசுக்கு எதிராக விமர்சனம் வைப்பவர்கள் தண்டிக்கப்படுவதை, சிறையிலடைக்கப்படுவதை கடந்த சில ஆண்டுகளாகவே நாம் பார்த்து வருகையில், ஒரு ஆசிரியருக்கு, கல்வித்துறை குறித்து உள்ளிருந்து வரும் ஆக்கப்பூர்வமான குரலுக்கு எதிரான இந்த நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது.

கல்வித்துறை ஊழல்கள் குறித்துப் பொதுவெளியில் வைக்கும் விசிலூதிகள் இங்கு இல்லை. இப்படியிருக்கையில் கல்வித்துறை குறித்து உள்ளிருந்து எழும் விமர்சனங்கள் வரவேற்கப்பட வேண்டும். ஒரு ஆசிரியர் அல்லாது நடப்புக்கல்விமுறை குறித்து விமர்சிக்கத் தகுதியுள்ளவர் இங்கு எவர்? இந்நடவடிக்கை ஆசிரியர்களை மௌனமாக்கி கல்வித்துறை மேலும் சீரழியவே வழிகோலும்.

தமிழ்நாடு மற்றும் கேரளத்தின் உயர்கல்வித்துறை ஊழல் குறித்த தங்களது குறிப்புகள் முற்றிலும் உண்மை. ஆய்வு மாணவன் என்பதாலும், தமிழகத்தில் சில அரசு உதவி பெறும்/தனியார் கல்வி நிறுவனங்களில் வேலைக்கு முயன்றிருப்பவன் என்பதாலும் இதைக் குறித்து நன்றாகவே உணர்ந்திருக்கிறேன்.

கேரளத்தில் கல்லூரி ஆசிரியர் தேர்வுக்கென குறைந்தபட்சம் நுழைவுத் தேர்வாவது உள்ளது. தமிழகத்தில் இறுதியாக நடந்த கல்லூரி ஆசிரியர் தேர்வு நேர்காணல்வழி. நேர்காணல் என்றால் பட்டம், பணி அனுபவம், புத்தகங்கள், ஆய்விதழ்கள் எனத்  தனித்தனி மதிப்பெண்கள். இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி லஞ்சப் பணம். முழு நேர ஆய்வு மாணவர்களை அடிமையாக்கி, பணம் படைத்தவர்களுக்கு ஆய்வேடுகள் எழுதி தர  நிர்பந்திக்கப்படும் நிலை வெகுசாதாரணம். முழு நேர ஆய்வாளர் அதைச் செய்யவில்லை என்றால் அவரது வாழ்வே நாசமாகிவிடும். பணம் படைத்த, அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் பகுதிநேர ஆய்வாளராகச் சேர்ந்து, மாணவர்களைச் சுரண்டி, ஆய்வேடுகள் அச்சிடப்படும் வரை அவர்களது உழைப்பை உறிஞ்சி முனைவர் பட்டம் பெறுகிறார்கள்.

அரசு உதவி பெற்ற கல்வி கல்வி நிறுவனங்களில் நிலைமை இன்னும் மோசம். தாங்களே நேர்காணல் நடத்தி ஆசிரியரை தேர்வு செய்யலாம் என்பதால் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் ஒருபோதும் தகுதியான ஆசிரியர்கள் நேர்மையான வழியில் தேர்வு செய்யப்பட்டதில்லை. இன்றைக்கும் ஒரு அரசு உதவி பெறும் கல்லூரியில் ஆசிரியர் பணிக்கான அறிவிக்கை வெளியாகும் என்றால் கேட்கப்படும் முதல் கேள்வி முன்பே தீர்மானிக்கப்பட்டு விட்டதா? அல்லது எவ்வளவு பணம் கேட்கிறார்கள்?. அந்த அளவுக்கு அழுகிப் போயிருக்கின்றன நமது கல்வி நிறுவனங்கள்.

ஒரு அரசு உதவி பெறும் கல்வி நிறுவனத்தில் பள்ளி ஆசிரியருக்கு 50 லட்சம் வரை விலை. கல்லூரி ஆசிரியர் எனில் 60 முதல் 80 லட்சங்கள் வரை. தமிழகத்தில் மட்டுமல்ல கேரளத்திலும் இதே நிலைதான். கேரளத்தில் இவ்வாறு பதவி பெற்றவர்களை தனிப்பட்ட முறையில் நான் அறிவேன். கொடுமை என்னவென்றால் அவர்கள் பெற்றோரும் ஆசிரியர்களே. கையூட்டுக் கொடுத்துப் பணிபெற்றதை வெளிப்படையாகச் சொல்லச் சிறிதளவும் நாணமில்லை. இப்படிக் கல்வித்துறையே திருட்டுப் பயல்களின் கூடாரமாகியிருக்கிறது. இவர்கள் மாணவர்களுக்கு ஒருபோதும் அறவழியைப் போதிக்க  மாட்டார்கள். போட்ட பணத்தைத் திருப்பி எடுக்கும் வழியாக லஞ்சம் பெறுவது, வரதட்சணை கேட்பது போன்றவற்றால் சமூகத்தைப் பின்னிழுக்கிறார்கள். சூழல் இரு தலைமுறைகளை அழித்தாயிற்று. சரிசெய்யத்துவங்கவில்லையெனில் அடுத்த தலைமுறையும் அழியும்.

தனியார் கல்வி நிறுவனங்கள் இன்னும் கீழானவை. ஏற்கனவே குறைந்த சம்பளத்தால் உழைப்புச் சுரண்டல். கோவிட காலத்தில் மாணவர்களிடம் வசூலித்தவர்கள் ஆசிரியர்களுக்கு முறையான சம்பளம் வழங்கவில்லை. இணையக் கட்டணம், கணிப்பொறி உள்ளிட்ட உபகரணங்கள் போன்றவை எதுவும் வழங்காது ஆசிரியர்களைச் சுரண்டியது, திடீர் பணிநீக்கம் என இவர்கள் செய்த கொடுமைகள் தனிக்கட்டுரைக்கானவை.

எனவே, ஆசிரியர் உமா மகேஸ்வரி சொல்வதுபோல் எழுத்தாள-ஆசிரியர்களுக்கு இதைப்பற்றிப் பேசவும் எழுதவும் கூடுதல் பொறுப்பிருக்கிறது. அதைச் செய்யவேண்டும். இல்லையெனில் திருட்டு வழியில் உள்நுழையும் கயவர்கள் பேராசிரியர் இருக்கைகளில் அமர்வார்கள். நல்லாசிரியர்களைப் பணி செய்ய அனுமதிக்கமாட்டார்கள்; நம் பிள்ளைகளின் வாழ்வையே அழிப்பார்கள்.

நன்றி,

விஜயகுமார்.



Sunday, February 18, 2024

கடவுளாக ஆசைப்படுகிறேன்

நான் வேலை செய்யும் இடத்தில் கடவுளைப்போல் 

இருக்க ஆசைப்படுகிறேன் 

அதாவது கேள்வி கேட்க ஆளில்லாதவராக 

கேள்வி கேட்கப்பட்டாலும் கேட்காததுபோல் இருப்பவராக 

பதில் சொல்லக் கடமைப்படாதவராக 

மூத்த அதிகாரி என எவரும் இல்லாதவராக 

பாலியல் தொல்லைக்கு உட்படாதவராக 

பழிவாங்கப்படாதவராக 

தற்கொலைக்குத் தூண்டப்படாதவராக 

குறைந்தபட்சம் இரண்டாம்தரமாக நடத்தப்படாதவராக 

குறிப்பாக அடிமைபோல் நடத்தப்படாதவராக 

சக பணியாளரால் காரணமேயின்றி அவமானப்படுத்தப்படாதவராக 

பிறரால் ஒதுக்கி வைக்கப்படாதவராக 

பிறரை ஆள் ஏவி ஒதுக்கி வைப்பவராக 

குண்டடிபட்டுச் சாகும் 

குண்டர்களால் அடிபட்டுச் சாகும் 

வன்புணர்ந்து கொல்லப்படும் 

புள்ளி விவரங்கள் அறியாதவராக 

செய்தித்தாள் தொலைக்காட்சி என எதன்வழியம் உலகத்தைக் காணாதவராக 

எப்படியும் வேளாவேளைக்கு சோறு வந்துவிடும் என்பதாக 

என் தட்டில் என்ன சோறு எனக் கண்காணிக்கப்படாதவராக 

எப்படியும் காலத்துக்கேற்ப சேவகர்கள் வந்துவிடுவார்கள் என்பதற்காக

என் பெயரின் பொருட்டு எத்தகைய ஆதிக்கத்தையும் அனுமதிப்பவராக 

என்பொருட்டு நிகழும் எத்தகைய வன்முறையையும் காணாமலிருப்பவராக 

பணமும் புகழும் ஒருபோதும் குறையப்போவதில்லை என்பதாக 

பிற கடவுள்களுடன் நல்லிணக்க ஒப்பந்தம் போடாதவராக

சகல பிரச்சினைகளுக்கும் காரணமானவராக 

சகல பிரச்சினைகளையும் தீர்த்துவைப்பவராக 

கேட்காமலேயே பொன்னும் பொருளும் கண்ணீரும் பெறுபவராக 

சிறுமிகளை பெண்களை வன்புணரும் அறைகளில் கண்களை மூடிக்கொண்டிருக்க  

பெண்கள் தலைமுடியை மறைக்கக் காரணமாக 

பெண்கள் தலைமுடியை வெட்டக் காரணமாக 

குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லக் காரணமாக 

குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லாததற்குக் காரணமாக

வகுப்புத் தோழியை மதவெறிகொண்டு தாக்காதவராக  

பெண்களை சகமனிதர்களை அடிமைப்படுத்தும் அமைப்புகளுக்குத் தலைவராக   

இருக்க ஆசைப்படுகிறேன் 

ஒரு சுவரைப்போல், சிலையைப்போல், கல்லைப்போல் இருக்க ஆசைப்படுகிறேன்

எதுவும் செய்யாமல் 

எந்நாளும் பளபளப்பாக, எப்போதும் மினுமினுப்பாக

ஒரு கடவுளைப்போல் இருக்க ஆசைப்படுகிறேன்   

அதாவது 

நான் ஒரு கடவுளைப்போல் இருக்க ஆசைப்படுகிறேன்.


(22.01.2024)


Monday, February 12, 2024

எதிர்வினை - ஆசிரியர்களும் கையூட்டும்

அருஞ்சொல் இதழில் எழுத்தாளர் பெருமாள் முருகனின் ஆசிரியர்களும் கையூட்டும் என்கிற கட்டுரை வாசித்தேன். பேராசிரியர் பெருமாள் முருகன் துரோகி அல்ல, பேராசிரியர் என்னும் பதவிக்கு மிகச்சரியான நியாயம் செய்கிறார். இதைச்சொல்ல நிகழ்காலத்தில் மட்டுமல்ல, எக்காலத்திலும் அறம் வழுவாத வாழ்வை வாழ்ந்திருக்கிறேன் என்கிற நிமிர்வும், நெஞ்சுரமும் வேண்டும்; மிகத் தைரியமான பணி. வெளியிடும் அருஞ்சொல்லும் பாராட்டுக்குரியது.

கல்வித்துறையில் நிகழும் இத்தகைய ஒழுங்கீன நடவடிக்கைளை வெளியில் இருக்கும் வேலை தேடுவோர் அல்லது பாதிக்கப்பட்டோர் பேசுவதற்கும் ஒரு கல்லூரிப் பேராசிரியர்/முதல்வர் பேசுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. பின்னவர் தகுதி பற்றிக் கேள்விகள் எழாது. ஆனால், அதைச் சொல்வதற்கான தகுதி சிலருக்கே உண்டு. இல்லையென்றால் இத்தகு விஷயத்தை சூழலுக்கு உள்ளிருந்து நாம் பொதுவெளியில் இறுதியாகக் கண்டது எப்போது? பேராசிரியரைத் துரோகி என்றழைப்பதற்குக் காரணம் என்ன? ஆசிரியர்கள் என்னும் பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார் என்பதாலா? இது உள்ளிருந்து எழும் உண்மை என்பதாலா? அரசதிகாரமும் கல்வித்துறையும் இணையும் புள்ளியில் இதற்கு மேலும் கையூட்டுகள் புழக்கத்தில் உண்டு என்பதாலா?

கொஞ்சம் விரிவாகவே பேசுவோம், இது இந்திய மாநிலம் எதற்கும் பொருந்தக் கூடியது. 

1. உதவிப் பேராசிரியர் பணி நியமனம் 

கல்லூரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பத் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று சென்ற வருடம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது; அதற்கு முன் நேர்முகத்தேர்வுதான்‌. நேர்முகத்தேர்வுகள் எப்படியெல்லாம் நடக்கும் என்பது அங்கு சென்று வந்தவர்களைக் கேட்டால் உதவிப்பேராசிரியர் பணியின் சந்தை மதிப்புத் தெரியும்.

கேரளத்தில் அரசு உதவி பெரும் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான சந்தை மதிப்பு நாற்பது இலட்சங்கள்; அரசு உதவி பெரும் கல்லூரிகளில் அறுபது இலட்சத்திற்கும் மேல். மதம்/சாதியைப் பொறுத்து தள்ளுபடியும் உண்டு. சமூக மதிப்பு, பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட மதிப்புறு பலன்களால், வங்கியில் நிரந்தர வைப்புத்தொகையாய் வைப்பதைக்காட்டிலும், தொழில் தொடங்குவதைக்காட்டிலும் சிறந்த திட்டமாய் இது கருதப்படுகிறது. ஆசிரியர் பணியிலிருப்பவருக்குத் திருமணச் சந்தையில் நல்ல விலை உண்டு, போட்டதில் பாதியை வரணிடம் வசூலிக்கலாம் என்கிற எதிர்கால நலத்திட்டங்களையும் உள்ளடக்கியதே ஆசிரியர் பணியின் சந்தை விலை.

இதை விமர்சித்து 2022-இல் கேரள முன்னாள் சட்ட அமைச்சர் ஏ கே பாலன் அரசு உதவிபெறும் பள்ளி/கல்லூரிகளின் ஆசிரியர் பணியிடங்களையும் அரசு நுழைவுத்தேர்வைக் கொண்டே நிரப்பவேண்டும் என்றார். [1] அதற்கு அந்நிறுவங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதே ஒழிய, வேலை தேடுவோர், ஆசிரியர் பயிற்சி எடுத்துக்கொள்வோர், முனைவர் பட்ட மாணவர்கள், பலகைக்கழக மாணவர்கள், மாணவர் அரசியல் அமைப்புகளிடமிருந்து இருந்து ஆதரவோ எதிர்ப்போ இல்லை. 

தமிழ்நாட்டிலும் இதே நிலைதான். இங்கு இருக்கும் அரசு உதவி பெரும் கல்வி நிறுவனங்களில் நடக்கும் நியமனங்கள் அரசு விதிப்படிதான் நடக்கின்றன எனச் சொல்ல முடியுமா? அல்லது அவற்றையெல்லாம் பாலன் முன்மொழிந்ததுபோல் அரசிடமே வழங்கி விடுவது ஏற்புடையதா? அரசால் நிதி நல்கப்பட்டு, அரசால் சம்பளம் கொடுக்கப்படும் ஆசிரியர்களை அரசு நியமிப்பதுதானே நியாயம்? அதைத் தமிழ்நாடு அரசு ஏன் துவங்கி வைக்கக்கூடாது? இது தனிப்பட்ட ஆளாக என்னுடைய கோரிக்கை மட்டுமல்ல, சென்ற செப்டெம்பர் மாதம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் திருநாவுக்கரசும் இதையேதான் சொன்னார். [2]

இந்த வருடம் பிப்ரவரியில் ஆசிரியர் தேர்வு வாரியம் 4000 பணிக்கான தேர்வை நடத்தும் என்கிறார்கள்; இதற்கிடையே TNSET எனும் தகுதித் தேர்வு நடக்குமா என்கிறார்கள் காத்திருப்போர். இதற்குமுன் செட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே பணி நிரந்தரமாகவில்லை எனும்போது, பணி நிரந்தரத்திற்குப் போராடும் கௌரவ விரிவுரையாளர்கள் ஒருபுறம்; செட் தேர்வில் தேர்ச்சி இருந்தாலும் அவர்களுக்கென சம்பள வரைமுறைகள் இல்லை என்பதால் தனியார் கல்வி நிறுவனங்களால் சுரண்டப்படுபவர்கள் ஒருபுறம். இப்படியிருக்கிறது ஆசிரியராக விரும்புவர்களின் நிலை.

ஆசிரியர் பணியை அடைவதற்கு இவ்வளவு குறுக்கு வழிகள் இருக்கும்போது, கல்வியையும் மதிப்பெண்ணையும் மட்டுமே கொண்ட ஒருவர் நேர்மையான வழியில் உள்நுழைவதற்கான வழிகள் இல்லாதபோது, கல்வித்துறை எங்கனம் புனிதமானதாக இருக்கும்? கையூட்டுக் கொடுத்துப் பெற்ற பணியிலிருப்பவர் போட்ட பணத்தை எடுக்கும் முதலீட்டுத் திட்டமாகவே ஆசிரியர் பணியைப் பார்ப்பார். எனவேதான் இவர்கள் கையூட்டு வாங்குவது, வகுப்பிற்கு வராமலிருப்பது, அர்ப்பணிப்பில்லாத அற்பர்களாய் இருப்பது, மாணவர்களை, சக பணியாளர்களை இனத்தால், மதத்தால் வேறுபடுத்தி நடத்துவது எனக் கல்வி நிலையங்களைக் கீழ்மைகளால் நிறைக்கிறார்கள். கூடவே, சிறுமை நிறைந்த இத்தகு ஆளுமைகள்மேல் மாணவர்களுக்கு இயல்பாகவே ஒரு விலக்கமும், மரியாதையின்மையும் ஏற்படுவதை உணர்ந்தே இருக்கும் இவர்கள், அவர்களின் எதிர்காலத்தைத் தங்கள் அகங்கரத்திற்குப் பலியிட்டு நிறைவடைவதும் உண்டு. ஒட்டுமொத்தமாக, துறைசார் அறிவின்மை, முதிர்ச்சின்மை உள்ளிட்ட காரணங்களால் நமது கல்விச்சூழலின் தரத்தைப் பெருமளவு பாதிக்கிறார்கள். இம்முறை தொடர்வது மாணவர் நலனுக்கோ, மாநில நலனுக்கோ, நாட்டிற்கோ நல்லதல்ல.

1. ஆசிரியர்களின் பணியிட மாறுதல் 

பள்ளியோ கல்லூரியோ இரு ஆசிரியர்களுக்கிடையேயான மனமொத்த பணிமாறுதல் அல்லாதவற்றுக்கு இங்கு யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்கிற விஷயம் இங்குள்ள அரசுப் பள்ளி/கல்லூரி ஆசிரியர்களுக்குத் தெரியாததா? அப்படியென்றால் ஆசிரியர் தவிர்த்து கல்வித்துறையில் வாங்கும் இடத்தில் இருப்பவர் எவர்? 

3. குற்றமும் தண்டனையும் 

நவீனத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க சாதனைகள் செய்தவர், நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைகள், மாநில அளவில் உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி, எம்.ஏ, எம்.ஃபில் பட்டங்கள், கற்பித்தல் அனுபவம் பெற்ற எழுத்தாளரிடம் பல்கலைக்கழகம் ஒன்றில் தமிழ்ப் பேராசிரியர் பணிக்கு நேர்முகத்தேர்வில் கேட்கப்பட்ட தொகை நாற்பது இலட்சங்கள்; அதுவும் எட்டு வருடங்களுக்கு முன்பு. [3] 

பிறகு அதே பல்கலைக்கழகத் துணைவேந்தர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தும் போது, கழிவறைக் குழாயில் பணத்தை ஒளித்து வைத்திருந்ததும் கண்டறியப்பட்டு, தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு கையும் களவுமாக பிடிபட்டதெல்லாம் வரலாறு. அவருடன் அவருக்கு உதவி செய்த பேராசிரியர்(கள்) தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு, சிறைசென்றதெல்லாம் நாம் அறிந்ததே. [4] தற்போது வழக்கு நடந்து கொண்டிருப்பதும் அவர்கள் மீண்டும் பணியில் இருப்பதும் எனக்குப் புதிய செய்தி. அதிர்ச்சியாக இருக்கிறது. 

நடைமுறை இப்படி இருக்கையில், சட்டத்தின் நடவடிக்கைகள் இப்படி இருக்கையில் நாம் யாரை நம்புவது? அல்லது இவையும் மீ டூ இயக்கம்போல் ஒரு குற்றவாளியை அம்பலப்படுத்துவது மட்டும்தானா? 

ஒரு அரசுக்கல்லூரி ஆசிரியராக வேண்டும் என்கிற கனவோடு அரசுக்கல்லூரியிலிருந்து வெளியே வந்தவனாக, மாநில, தேசிய அளவிலான உதவிப்பேராசிரியர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவனாக, முனைவர் பட்ட இறுதியாண்டு மாணவனாகச் சொல்கிறேன்: எங்களைப் போன்றவர்களுக்கு கண்ணெதிரில் நேர்வழி என்கிற ஒன்று இல்லை.  


சான்றுகள் :

1. https://timesofindia.indiatimes.com/city/kochi/psc-must-take-over-aided-school-postings-balan/articleshow/91799179.cms  

2. https://www.edexlive.com/news/2022/sep/26/academicians-urge-tn-government-to-conduct-recruitment-of-teachers-through-trb-31300.html

3. எழுத்தாளர் சு.வேணுகோபால். 2016 ஆம் ஆண்டு அன்னை தெரசா பல்கலைக்கழகம் நடத்திய செட் தேர்வில் நாங்கள் இருவரும் தேர்ச்சி பெற்றோம். சான்றிதழ் பெறும்போது நிகழ்ந்த உரையாடலில் இருந்து. இதை முன்பே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன், காலச்சுவடு இதழில் வெளியானது. https://sannaloram.blogspot.com/2019/10/blog-post.html

Thursday, November 2, 2023

முதலமைச்சரின் ஆய்வு உதவித்தொகை முழுமையாகப் பலன் தரட்டும்!

தமிழ்நாட்டிலுள்ள மாணாக்கர்களிடையே ஆராய்ச்சித் திறனை வளர்க்கவும், புதிய ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும், ‘முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகைத் திட்ட’த்தைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதற்கான தேர்வையும் உதவித்தொகை வழங்கும் பணியையும் ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளும் எனத் தெரிகிறது. விண்ணப்பிப்பதற்கோ, தேர்வு எழுதுவதற்கோ எந்தக் கட்டணமும் இல்லை என்பது இதன் சிறப்பு.

இதன் மூலம் ஒவ்வொரு வருடமும் போட்டித் தேர்வின் அடிப்படையில் கலை, மானுடவியல், சமூக அறிவியல் பிரிவுகளில் 60, அறிவியல் பிரிவில் 60 என மொத்தம் 120 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வானவர்கள் தமிழக அரசுக் கல்லூரிகளில் முனைவர் பட்ட ஆய்வாளராகச் சேர இயலும். இந்த உதவித்தொகை மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதத்திலும் பெரிதும் உதவியாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதேவேளையில், ஓர் ஆய்வு மாணவனாக, அண்டை மாநிலமான கேரளத்தில் இத்தகைய உதவித்தொகை செயல்படுத்தப்படும் விதத்தின் அடிப்படையில் சில யோசனைகளை முன்வைக்கிறேன்.

இணைப்புக் கோளாறு:

16.10.2023 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிக்கையின் முதல் பக்கத்தில், இத்திட்டத்துக்கான அரசாணையை (27.02.2023 தேதியிட்டது) வாசிப்பதற்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இக்கட்டுரை பிரசுரமாகும்வரை இணைப்பு வேலை செய்யவில்லை. மாதம் எவ்வளவு உதவித்தொகை வழங்கப்படுகிறது, எத்தனை வருடங்களுக்கு வழங்கப்படும் என்பன உள்ளிட்ட மேலதிகத் தகவல்கள் அரசாணையில்தான் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த உதவித்தொகை குறித்த புரிதலை அரசாணை மாணவர்களுக்கு அளிக்கும்; விண்ணப்பிப்பதா வேண்டாமா என முடிவெடுக்கவும் உதவும். எனவே, அதற்கான இணைப்பு உடனடியாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

எனக்குக் கிடைத்த அரசாணை நகலில் முதல் இரண்டு வருடங்களுக்கு மாதம் ரூ.25,000 எனவும், கடைசி வருடத்துக்கு மாதம் ரூ.28,000 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இடைநிற்காமல் கல்வி கற்கும் ஒருவர் 23 வயதில் இத்தேர்வில் தேர்ச்சி பெற்று, முனைவர் பட்ட ஆய்வுக்குள் நுழைய இயலும்.அவர்களைப் பொறுத்தவரை இது கணிசமான தொகைதான். வயது வரம்பு இல்லை என்பதால் திருமணமானவர்கள், குழந்தை உள்ளவர்கள், வயது முதிர்ந்த பெற்றோர்களுடன் வசிப்பவர்கள் என அனைவருக்கும் உயர்கல்வி பயில இது நல்வாய்ப்பு. அதே நேரத்தில்,அவர்கள் எதிர்கொள்ளும் செலவுகளுடன் ஒப்பிட்டால்,இத்தொகை போதாது. இவர்களுக்குச் சிறப்புக் கவனமோ அல்லது தொகை உயர்த்தியோ வழங்கப்பட வேண்டும். விடுதியில் தங்குவோர் என்றால் வாடகைப்படி வழங்கப்பட வேண்டும்.

கூடுதல் நிதி அவசியம்:

கேரளம் முதல் இரண்டு வருடங்களுக்கு ரூ.31,000, மூன்றாம் வருடத்துக்கு ரூ.35,000 வழங்குகிறது; இதர செலவுகளுக்காக அனைத்துப்புல மாணவர்களுக்கும் வருடம் ரூ.20,000 மற்றும் மாதம் 10% வாடகைப்படியும் வழங்குகிறது. தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டால் பரப்பளவில் சிறிய, கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு குறைவான மக்கள்தொகை கொண்ட கேரளம் வழங்கும் முனைவர் பட்ட ஆய்வு உதவித்தொகைகளின் எண்ணிக்கை 100. வரும் வருடங்களில் தமிழ்நாடு அரசு கூடுதல் நிதி ஒதுக்கி பயனாளிகளின் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும்.

மூன்று வருடங்களில், அதுவும் அரசுக் கல்லூரிகளில் ஆய்வை முடிப்பது கடினம். குறிப்பாக அறிவியல் புலத்தில். எனவே, ‘அரசுக் கல்லூரிகளில் மட்டும் ஆய்வு செய்வதற்கான உதவித்தொகை’ என்னும் வரம்பு தளர்த்தப்பட வேண்டும். தனியார் நிறுவனங்கள் தவிர்த்து, ஒன்றிய அரசுக் கல்வி நிறுவனங்களுக்குள் (சிஎஸ்ஐஆர், ஐஐடி, என்ஐடி, மத்திய அரசுப் பல்கலைக்கழகங்கள் போன்றவை), தமிழகப் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைய இந்த உதவித்தொகை ஒரு நல்வாய்ப்பு; ஆய்வு வசதிகளும் மிகுதி. வருடத்துக்கு ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட முனைவர் பட்டங்கள் வழங்கப்படும் ஒரு நாட்டில் போட்டி அதிகம்; பட்டம் பெற்றது கல்லூரியிலா/பல்கலைக்கழகத்திலா/மத்திய அரசு நிதி நல்கும் கல்வி நிறுவனத்திலா என்பது வேலைவாய்ப்புச் சந்தையில் தர அளவீட்டுக் கருவி என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுக் கல்லூரிகளில்தான் ஆய்வுசெய்ய வேண்டும் என்கிற கட்டாயம் இல்லாமல், ‘அரசுக் கல்லூரிகளில் முதுநிலை பயின்ற மாணவர்களுக்கான உதவித்தொகை’ எனத் திருத்தப்படுமானால் மிக மகிழ்ச்சி. அரசுக் கல்லூரிகளில் ஆய்வுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தத் திட்டங்கள் வகுப்பது முக்கியம். மிக அடிப்படையாக மொழி, கலை, அறிவியல், சமூகவியல் உள்ளிட்ட எந்தப் புல ஆய்வுக்கும் உள்நாட்டு/பன்னாட்டு ஆய்விதழ்களை வாசிப்பதற்கான வசதிகள், சார்ந்துள்ள பல்கலைக்கழகங்களால் செய்துதரப்பட வேண்டும். இத்திட்டத்தின்மூலம் அரசுக் கல்லூரிகளில் முனைவர் பட்ட ஆய்வு செய்யும் மாணவர்கள், அக்கல்லூரி சார்ந்துள்ள பல்கலைக்கழகக் கட்டமைப்பு வசதிகளை, பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களுக்கு நிகரான உரிமையுடன் பயன்படுத்திக்கொள்ள ஆவன செய்ய வேண்டும்.

நடைமுறைச் சிக்கல்கள்:

பொதுவாகவே, கல்வி உதவித்தொகை சரியான காலத்தில் பயனாளிகள் கைகளில் கிடைப்பதில்லை. சிலரின் குடும்பச் செலவுகளே இந்த உதவித்தொகையை நம்பியிருக்கும் என்பதால், 120 பேருக்கும் மாதாமாதம் குறிப்பிட்ட தேதிக்குள் தொகை போய்ச்சேர்வது விதிமுறையாக்கப்பட வேண்டும்.

உதவித்தொகை மூன்று வருடங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. அறிவியல் புலங்களில் மூன்று வருடங்களில் முனைவர் பட்டம் பெறுவதென்பது இந்திய அளவில் பெருவசதி பெற்ற, மத்திய அரசு ஆய்வு நிறுவனங்களிலேயே சாத்தியமற்ற ஒன்று. 30 வயதை நெருங்கும் ஒருவர், தன் ஆய்வுப் பணியின் பாதியிலேயே கைவிடப்பட்டதாகவே உணர்வார். எனவே, ஐந்து வருட காலம் உதவித்தொகை என்பது கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

இந்த சிறந்த திட்டத்தைத் தொடங்கும்போதே, மேற்சொன்னவற்றைக் குறித்து வல்லுநர்களோடு அரசு ஆலோசித்து மாற்றங்களைச் செய்யுமானால் ஆய்வு மாணவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.

(நடுப்பக்கக்கட்டுரை, தி இந்து தமிழ் திசை, 02-11-2023)